Ad

சனி, 30 செப்டம்பர், 2023

துலாம்: ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023... விலகப்போகும் கேது வாழ்வை மாற்றுவாரா? கே.பி. வித்யாதரன்!

ராசிச்சக்கரத்தில் 7 - வது ராசி துலாம். சித்திரை 3, 4ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3ஆம் பாதம் ஆகிய நட்சத்திரங்களைக் கொண்ட இந்த ராசிக்காரர்களுக்கு ராசிக்கு 7 ம் இடத்தில் ராகு பகவான் சஞ்சாரம் செய்கிறார்.

வரும் 8.10.23 அன்று பிற்பகல் 3மணி 36 நிமிடத்திற்கு ராகு பகவான் அங்கிருந்து நகர்ந்து 6 -ம் இடமான மீன ராசிக்குள் சஞ்சாரம் செய்யப்போகிறார். அப்போது இதுவரை துலாம் ராசியில் சஞ்சரித்துவந்த கேது பகவான் கன்னி ராசிக்குள்ளே அடி எடுத்துவைக்கிறார். இந்த கிரக மாற்றம் 26.4.25 வரை நீடிக்க இருக்கிறது. இந்த பெயர்ச்சி அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்க இருக்கிறது என்பதைக் காண்போம்.

ராகு-கேது பெயர்ச்சி

ராகு பகவான் தரும் பலன்கள்:

இதுவரை 7 - ம் வீட்டில் படாத பாடு படுத்திக்கொண்டிருந்த ராகு பகவான் தற்போது ஆறாம் வீட்டுக்கு வருகிறார். இனிக் குடும்பத்தினர் பாசத்துடன் நடந்துக் கொள்வார்கள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும். பழைய கடனை அடைக்கும் வாய்ப்பு உண்டாகும். புதிய டிசைனில் ஆபரணங்களை வாங்குவீர்கள். மகன் அல்லது மகளுக்குத் திருமணம் கூடிவரும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையாக பாசத்தைப் புரிந்து கொள்வார்கள். தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். வரவேண்டிய பணமெல்லாம் இனி கைக்கு வந்து சேரும்.

ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 15.6.24 வரை சஞ்சாரம் செய்வதால் வீட்டை அழகுபடுத்துவீர்கள். ஓரளவு வசதி, வாய்ப்புகள் பெருகும். உறவினர்கள் மத்தியிலிருந்த கசப்புகள் விலகும். பூர்வீக சொத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.

ராகுபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 15.6.24 முதல் 22.2.25 வரை சஞ்சாரம் செய்வதால் தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், செலவும் உண்டு. பிள்ளைகளின் கூடாப்பழக்கத்தை சரி செய்வீர்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.

ராகுபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 22.2.2025 முதல் 26.4.2025 வரை ராகுபகவான் செல்வதால் அனைத்திலும் கவனம் தேவை. பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி பெரிய காரியங்களில் இறங்க வேண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்

கேதுவின் பலன்கள்:

இதுவரை ராசியில் சஞ்சாரம் செய்த கேதுபகவான் ராசியிலிருந்து விலகி கன்னி ராசிக்குள் அடியெடுத்துவைப்பது நற்பலன்களைத் தரும். சோர்வும் மன வருத்தமும் நீங்கும். உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். மகனுக்குத் தடைப்பட்ட திருமணம் முடியும். புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். அனைத்திலும் ஆர்வம் பிறக்கும். உடன்பிறந்தவர்களிடையே சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து போனாலும் ஒற்றுமை குறையாது. பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தீரும். குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.

கேது பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 11.2.24 வரை சஞ்சாரம் செய்வதால் இந்தக் காலகட்டத்தில் சின்னச் சின்ன ஆரோக்கியப் பிரச்னைகள் வந்து நீங்கும். சகோதரங்களிடையே விவாதங்கள் வரக்கூடும். வீடு, மனை வாங்குவது விற்பதில் கவனம் தேவை.

ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்

கேதுபகவான் அஸ்தம் நட்சத்திரத்தில் 11.2.24 முதல் 19.10.24 வரை சஞ்சாரம் செய்கிறார். எனவே இந்தக் காலகட்டத்தில் சவாலான காரியங்களையும் சிறப்பாகச் செய்து முடிக்கும் ஆற்றல் பிறக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய வேலை கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

கேது பகவான் உத்திரம் நட்சத்திரத்தில் 19.10.24 முதல் 26.4.25 வரை சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் மனம் லேசாகும். பிறர் உங்களை விமர்சனம் செய்வார்கள். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாதீர்கள். கொடுக்கல்-வாங்கலில் நிதானம் தேவை. பணப்புழக்கம் சுமாராக இருக்கும்.

1.5.2024 முதல் கேதுவை குரு தன் 5 ம் பார்வையால் பார்ப்பதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு ஒருபடி உயரும். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகமாவார்கள். அவர்களால் சில அனுகூலங்கள் உண்டாகும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு அடிக்கடிச் செல்வீர்கள். அண்டை வீட்டாரின் அன்புத்தொல்லை நீங்கும்.

வியாபாரம் : லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். மருந்து, எண்ணெய் வித்துக்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பணியாளர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பும் உண்டு. வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல்-வாங்கலில் நிம்மதி ஏற்படும்.

உத்தியோகம் : அலுவலகத்தில் இருந்துவந்த சச்சரவான நிலை மாறும். அதிகாரிகள் உங்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பார்கள். சக ஊழியர்களும் உங்களைப் புரிந்துகொள்வார்கள். கணினித் துறை சார்ந்தவர்களுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்புண்டு. நீங்கள் விருப்பப்பட்ட இடத்திற்கே இடமாற்றம் உண்டு. வெகுநாள்களாக இழுபறியில் இருந்த சம்பள உயர்வும், பதவியுயர்வும் இனி தேடி வரும்.

கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். பட்டி தொட்டியெங்கும் புகழ் பரவும்.

திருநாகேஸ்வரம்

மொத்தத்தில் இந்த ராகு-கேது மாற்றம் சோர்ந்து கிடந்த உங்களை சுறுசுறுப்பாக்குவதோடு வாழ்வில் முன்னேற்றம் தருவதாக அமையும்.

பரிகாரம் : கும்பகோணம் நகர மையத்தில் அமைந்துள்ள ஆதிசேஷன் வழிபட்ட ஸ்ரீநாகேஸ்வரன் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீநாகேஸ்வரரையும், ஸ்ரீபெரியநாயகியையும் தரிசியுங்கள். கால் இழந்தவர்க்கு உதவுங்கள். வெற்றி கிட்டும்.



source https://www.vikatan.com/spiritual/astrology/rahu-ketu-peyarchi-palan-2023-for-thulam-rasi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக