Ad

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

Masuleh: `வீட்டுக்கு மேல் ரோடா இல்ல ரோட்டுக்கு மேல் வீடா?!' - ஓர் ஆச்சர்ய கிராமம்

வடக்கு ஈரான் பகுதியில், அல்போர்ஸ் மலைத்தொடரிலுள்ள கிலான் என்ற ஊரில் தான் மசூலேஹ் என்கிற இந்த கிராமம் அமைந்திருக்கிறது. இங்குள்ள ஊர்களையெல்லாம் விட்டுவிட்டு, ஈரானிலுள்ள ஒரு ஊரைப் பற்றி எதற்குப் பேச வேண்டும்? அப்படி என்ன அந்த ஊரில் அதிசயம்?

நம் ஊரிலெல்லாம், ரோடு இருக்கும், அதற்கு இருபுறமும் வீடுகள் அமைந்திருக்கும். ஆனால், இவ்வூரில் ஒரு வீட்டின் கூரை, அதற்கு மேலே உள்ள தெருவின் சாலையாக அமைந்துள்ளது. அதாவது முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா? என்பதைப் போல, வீட்டுக்கு மேல் ரோடா? அல்லது ரோட்டுக்கு மேல் வீடா? என்கிற ஒரு ‘இல்யூஷன்’ நமக்கு ஏற்பட்டுவிடும். இதோ இந்த ஊரின் வழியே ஒரு பயணம்.

வடக்கு ஈரானிலுள்ள இந்த மசூலேஹ் என்கிற கிராமம், கிட்டதட்ட 1000 வருட கால வரலாற்றைத் தாங்கி நிற்கிறது. கி. பி. 1006- ல் இருந்து அங்கு மனிதர்கள் வந்து குடியேறத் தொடங்கி, இப்போது ஈரானின் முக்கிய கலாசாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களுள் ஒன்றாக இது திகழ்கிறது. இன்று மசூலேஹ் கிராமத்திலிருந்து 6 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள ஒரு இடத்திலிருந்து தான் இக்கிராமத்தின் வரலாற்றை நம்மால் அறிய முடிகிறது. அது தற்போது ‘பழைய மசூலே’ என்றழைக்கப்படுகிறது.

வரலாற்றில் ‘சில்க் ரூட்’ என்றழைக்கப்படும், பட்டுச்சாலை ஒரு முக்கிய வணிகப் பாதையாக இருந்தது. சீனாவிலிருந்து ஐரோப்பா வரை ஒரு லாபகரமான பட்டு வணிகம் இவ்வழியின் மூலம் நடைபெற்று வந்தது. கிலான் அந்த வழியில் ஒரு முக்கிய இடமாகத் திகழ்ந்தது. காலப்போக்கில், அது ஒரு இரும்புச் சுரங்கமாக மாறி, ஒரு முக்கிய வர்த்தக இடமாக மாறிப்போனது. பின்னர் இரும்பை மூலப் பொருளாகக் கொண்ட தொழிற்சாலைகள் அவ்வூரைச் சுற்றி அதிகளவில் வரத்தொடங்கின. கி.பி 1320- ல் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் பஞ்சம் போன்ற இயற்கை சீற்றங்களாலும், சில நோய்த்தொற்றுகளாலும் மக்கள் அவ்விடத்திலிருந்து இப்போதுள்ள மசூலேஹ் இடத்திற்குக் குடிபெயர்ந்தனர். 

மசூலேஹ் வீடுகளின் அமைப்பும், மக்களின் வாழ்வாதாரமும்:

மேற்கூறிய படியே, ஒரு வீட்டின் கூரை மற்றொரு வீட்டின் வாசலாகவோ அல்லது அந்த தெருவின் சாலையாகவோ அமைந்துள்ளது. எதற்காக இப்படி கட்ட வேண்டும்? மலைச்சரிவில் அமைந்துள்ள இந்த வீடுகள், நிலையாக இருப்பதற்காக, இயற்கையாய் அமைந்த பாறை கீழ்ப்பகுதியாகவும், வீட்டின் பின்புறம் இருக்கும் மலையின் சுவர் அங்குள்ள வீடுகளுக்குப் பாதுகாப்பாக அமையும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு இருப்பதால் இது, வீடுகளை நிலநடுக்கத்திலிருந்து பாதுகாத்து வருகிறது. இது எந்தவொரு கட்டிடக்கலை நிபுணராலும் திட்டமிடப்பட்டுக் கட்டப்படவில்லை

மாறாக அங்குள்ள மக்களே திட்டமிட்டுக் கட்டியுள்ளனர் என்றால் ஆச்சரியமாகத்தான் உள்ளது. இதுமட்டுமல்லாமல், மசூலேவில் எந்த அளவு வெப்பம் இருக்கிறதோ, அதை விட அதிகமாகப் பனிப்பொழிவு காணப்படும்.  சமவெளியில் கட்டியிருந்தால் வெள்ளத்தில் சிக்கக்கூடிய அபாயமும், ஈரானிய குளிரினால் பாதிப்புகளும் ஏற்படக்கூடும். ஆனால், இப்பொழுது அமைந்துள்ள மசூலேஹ் பகுதியில் உகந்த சூரிய வெளிச்சம், வெப்பநிலை இருப்பதால் அங்குள்ள  வீடுகளுக்கு இது பாதுகாப்பாக அமைந்துள்ளது. இங்கு இயற்கை மட்டுமல்ல, அதனுடன் சேர்ந்து வீடுகளின் கட்டிடக்கலை மற்றும் சமூகமும் இணைந்து வளர்ந்துகொண்டே வருகிறது.

இங்குள்ள மக்கள், இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் பேசக்கூடிய மொழி ‘டலேஷி’ மொழி என்றழைக்கப்படுகிறது. முஹரம் போன்ற இஸ்லாமியப் பண்டிகைகளை இவர்கள் கொண்டாடுவதுண்டு. இவர்களுடைய வருமானம் குறித்துப் பார்த்தால், முன்பு உலோகம் மற்றும் மர வேலைப்பாடுகள் சார்ந்து இருந்தாகவும், தற்போது அவை அழிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் சுற்றுலாத் துறையினால் வரக்கூடிய வருமானம் தான் மசூலேவின் பொருளாதாரத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

வழிப்போக்கர்கள் மற்றும் வணிக வியாபாரிகள் வந்து தங்கிக் கொள்வதற்காகச் சத்திரம் போன்ற 8 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன்மூலம், இங்கிருந்த மக்கள் வணிகத்தில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்றும் நம்மால் நன்கு அறியமுடிகிறது. இதற்கு மற்றொரு ஆதாரமாக, ஊரின் நடுவே ‘பஜார்’ அமைந்துள்ளது. பழங்காலந்தொட்டு வியாபாரிகள் தங்கள் பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பது வழக்கமாக உள்ளது. இதுபோக இவர்களின் மர கைவினைப்பொருட்கள் மிகவும் நேர்த்தியாகவும் கலைத்தன்மையுடனுன் காணப்படுகின்றன. இங்குள்ள வீடுகளின் ஜன்னல்கள் முதற்கொண்டு, மரத்தினால் மிக அழகாகச் செய்யப்பட்டிருக்கும். 

இப்படி வரலாறு,  இயற்கை மற்றும் கலாசாரம் என அனைத்திலும் மிகச்சிறந்து காணப்படும் இவ்வூரில் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு  முற்றிலும் அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மக்கள் சாதாரணமாகத் தெருக்களில் நடமாடிக்கொள்ளலாம்.

அங்குள்ள மக்கள் இயற்கையோடு இணைந்தும், இயற்கையைப் பாதுகாத்துக் கொண்டும் வாழ்ந்துவருகின்றனர். விரைவில் இதை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நாடாக அறிவிப்பதற்கான வேலைகள் நடந்துகொண்டே இருக்கின்றன.


source https://www.vikatan.com/lifestyle/travel/story-of-the-masuleh-village

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக