Ad

வெள்ளி, 26 மே, 2023

``எங்கள் ஆட்சியில், அரசுப் பள்ளியில் 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள்” - அன்பில் மகேஸ்

திருச்சியில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக குடோனில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் பாடநூல் கழகத் தலைவர் லியோனி ஆகியோர் ஆய்வு நடத்தினர். ஆய்விற்குப் பின்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ``திட்டமிட்டபடி பள்ளிகளை திறக்கலாமா அல்லது ஒருசில நாள்கள் கழித்து திறக்கலாமா என தமிழக முதல்வரிடம் கேட்டிருந்தோம். முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனும் ஆன்லைன் மூலமாக ஆலோசனை கேட்டோம்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பெற்றோர்களோ, ஆசிரியர்களோ பெரிதாக பள்ளிகள் திறப்பதை தள்ளிப்போடச் சொல்லவில்லை. அதேவேளையில் மாணவர்கள் இந்த சமயத்தில் வகுப்பறையில் அமர்வதே மிக சிரமமாக இருக்கும் என்று சிலர் கருத்துகளைச் சொன்னார்கள். கோடை வெயிலினுடைய தாக்கம் ஜுன் 5-ம் தேதிக்குப் பிறகு படிப்படியாகக் குறையும் எனச் சொல்லியிருக்கிறார்கள். அதையடுத்து வருகின்ற ஜூன் 7-ம் தேதி 1-12 ஆம் வகுப்பிற்கான பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “பள்ளிகள் திறக்கப்படுவது சில நாள்கள் தாமதமானாலும் திட்டமிட்டபடி அடுத்தாண்டு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும். தனியார் பள்ளிப் பேருந்துகளின் தரம் எப்படியிருக்கிறது... அவற்றிற்கு முறையான ஆவணங்கள் இருக்கின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்யச் சொல்லியிருக்கிறோம்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு 11 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளியை நோக்கி வந்துள்ளனர். இந்த மே மாதத்தில் மட்டும் 80 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். பள்ளி வளாகங்களை சுத்தப்படுத்துவது, பள்ளிக் கட்டடங்களை பழுது பார்ப்பது என பள்ளிகள் திறக்கப்படுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.



source https://www.vikatan.com/education/school-education/schools-will-be-opened-on-june-7th-says-minister-anbil-mahesh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக