Ad

வெள்ளி, 26 மே, 2023

`100 % மானியத்தில் மின் மோட்டாருடன் ஆழ்துளைக் கிணறு’ - தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டம்!

தமிழ்நாட்டில் பாசன நீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு அதன் மூலம் விவசாயிகள் பலன் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தனிப்பட்டட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்து கொடுக்க அரசாணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சொட்டுநீர்ப் பாசனம்

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஊரக வளர்ச்சி துறையினரால் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டு பணி மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்து கிராமங்களில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் கிணறுகளுக்கு சூரிய சக்தி மூலம் நீர் இறைக்கும் அமைப்பு உருவாக்கப்பட்டபின், பாசன நீர் விநியோகக் குழாய்கள் அமைக்கும் பணிகள் மற்றும் சொட்டு நீர்ப்பாசன அமைப்பு நிறுவும் பணிகள் பிரதம மந்திரி வேளாண் நீர்ப்பாசன திட்டம் தோட்டக்கலைத் துறையினரால் ஏற்படுத்தப்படும்.

சிறு மற்றும் குறு விவசாயிகள், ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளும் வருவாய் துறையின் மூலம் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழின் அடிப்படையில் இத்திட்டதின் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். இத்திட்டத்திற்காக இதுவரை விவசாயிகளை கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெரிய விவசாயிகளைப் போல, சிறு மற்றும் குறு விவசாயிகள், ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளும் பயன்பெறும் வகையில் , பாசன அமைப்புகளை உருவாக்கி நிலத்தில் சாகுபடியினை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தினை விவசாயிகள் பயன்படுத்திட மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தினை அணுகலாம்.

வேளாண்மை

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

1) செயற்பொறியாளர்(வே.பொ.)

487, அண்ணா சாலை,

நந்தனம், சென்னை-35.

2) உதவி செயற்பொறியாளர்(வே.பொ.),

487, அண்ணா சாலை,

நந்தனம், சென்னை-35. கைபேசி எண்:94443 18854

3) உதவி செயற்பொறியாளர்(வே.பொ.),

வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையம்,

ஐயனார் கோயில் பேருந்து நிலையம்,

மதுராந்தகம் (இருப்பு) சிலாவட்டம்,

மதுராந்தகம் – 603 306. கைபேசி எண்: 94440 73322



source https://www.vikatan.com/government-and-politics/schemes-and-services/bore-well-with-electric-motor-at-100-subsidy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக