Ad

வியாழன், 12 அக்டோபர், 2023

நாமக்கல்: கொலைசெய்யப்பட்ட மனைவி; தாக்கப்பட்ட கணவர்; மர்ம நபர்களால் வயதான தம்பதிக்கு நேர்ந்த சோகம்!

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புசிப்பாளையம் கொட்டகாட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (70). இவர், மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில், சொந்த நிலத்தில் தற்போது விவசாயம் செய்து வந்துள்ளார். இவரின் மனைவி நல்லம்மாள் என்கிற சின்னப்பிள்ளை. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூன்று மகள்களையும் வெளியூரில் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், இவர்களின் பேத்திக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. அதற்காக, அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு கொண்டு சென்று கொடுத்து வந்திருக்கின்றனர். இந்த வயதான தம்பதியினர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கேட் பூட்டப்பட்டிருந்ததால், சுற்றுச்சுவர் அருகே இருந்த மரத்தின் மீது ஏறி, வந்த வழியாக கீழே இறங்கி வீட்டுக்குள் சென்றுள்ளனர். அதிகாலை வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், சண்முகத்தை இரும்பு கம்பியால் பலமாக தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த நல்லம்மாளின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தனர். பின்னர் இருவரும் இறந்து விட்டதாக எண்ணி, வீட்டில் இருந்த பீரோ மற்றும் வீட்டில் உள்ள மற்ற அறைகளில் பணம், நகை உள்ளிட்டப் பொருள்கள் எதுவும் உள்ளதா என தேடிப் பார்த்துள்ளனர். மேலும், தாங்கள் அந்த வீட்டுக்குள் வந்துசென்ற அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக வீட்டுக்குள் மிளகாய் பொடியைத் தூவி விட்டு சென்றுள்ளனர். ஆனால், சண்முகம் மட்டும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

பரமத்தி வேலூர்

இந்நிலையில், நேற்று அதிகாலையில் தம்பதியின் உறவினர்கள் சண்முகத்தின் வீட்டிற்குச் சென்று பார்த்த போது, இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே, இது குறித்து பரமத்திவேலூர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து, போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதேபோல், சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையில், சண்முகம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதை அறிந்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவரை நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மர்ம நபர்களால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சின்னபிள்ளையின் உடலை மீட்டு உடற்கூறாய்வு செய்தவதற்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 3 நாள்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள், அந்தப் பகுதியில் மிளகாய் பொடியை தூவி வைத்துள்ளனர். இதை பார்த்த சண்முகம், இது குறித்து பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் தங்களது வீட்டில் மிளகாய் பொடி தூவப்பட்டுள்ளது என்றும், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுவதாகவும் போலீஸாரிடம் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. மர்ம நபர்கள் வயதான தம்பதி மீது தாக்குதல் நடத்திய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/crime/elderly-couple-brutally-attacked-in-namakkal-wife-died-and-husband-is-in-treatment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக