தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் பாபா. ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட இவர், அமாவாசை நள்ளிரவுகளில் நடுச்சாம பூஜைகளைச் செய்வதை வழக்கமாகக் கொண்டு இருந்துள்ளார். ஐதராபாத்தில் மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வரும் பாபா வெள்ளிக்கிழமைகளில் தனது வீட்டில் அருள்வாக்கு கூறி வந்துள்ளார். இவரிடம் சித்தூரை அடுத்த கத்தாடா பகுதியைச் சேர்ந்த ஹரி என்பவர் கடந்த சில வருடங்களாகச் சீடனாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், மாந்திரீக சாமியார் பாபாவுக்கு கடந்த சில நாள்களுக்கு முன் சாமி அருள் வந்ததாகவும், அப்போது அவர் காளஹஸ்தியை அடுத்த தேவலம்பேட்டையில் உள்ள பழமையான சிவன் கோயில் வளாகத்தில் உள்ள நந்தி சிலைக்குள் கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்கள் உள்ளதாகவும் தனது சிஷ்யன் ஹரியிடம் கூறியதாகத் தெரிகிறது.
அதனையடுத்து, சாமியார் பாபா மற்றும் ஹரி ஆகியோர் சேர்ந்து தங்களிடம் வழக்கமாக அருள்வாக்கு கேட்க வரும் சிலரிடம் நந்தி சிலை குறித்துக் கூறியிருக்கின்றனர். 60 கோடி ரூபாய் மதிப்பு என்றதும், சிவன் கோயில் நந்தி சிலையைத் திருட 10 பேர் கொண்ட திருட்டு கும்பல் தயாராகி இருக்கிறது. கடந்த மாதம் 26-ம் தேதி பாபா மற்றும் ஹரி ஆகியோருடன் சேர்ந்து சித்தூர் மாவட்டம் வேலவேடு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் , வெங்கடாஜலபதி, ஸ்ரீதர் , ரங்க பாபு உள்ளிட்ட 8 பேர் தேவலம்பேட்டை சிவன் கோயிலுக்கு நள்ளிரவு நேரத்தில் சென்றிருக்கின்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் கடத்தல் கும்பல் எளிதில் கடப்பாரைகளைக் கொண்டு நந்தி சிலையை பெயர்த்தெடுத்துக் கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றிருக்கிறது. பின்னர், இரவு நேரம் என்பதால் கங்கா புரத்தைச் சேர்ந்த முனீந்திரா என்பவரின் விளை நிலத்தில் மறைத்து வைத்து விட்டு அவரவர் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
மறுநாள் காலை சிலையை உடைத்து வைரக்கற்களை எடுப்பதற்காகக் குழுவாகச் சென்றிருக்கின்றனர். அப்போது, கடத்தலின் போது உடன் இருந்த ரங்க பாபு என்பவர் மட்டும் வரவில்லை. அதைத்தொடர்ந்து, சாமியார் பாபா தலைமையில் கடத்தல் கும்பல், சிலையை எடுக்கச் சென்ற போது நந்தி சிலை மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் இல்லாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். சாமியார் பாபாவுடன் இருந்த ரங்க பாபு முந்தைய நாள் இரவு அனைவரும் வீட்டிற்குச் சென்ற பிறகு , மற்றொரு கும்பலை தன் தலைமையில் அமைத்து சிலையை அங்கிருந்து கடத்தி சித்தூருக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.
அங்குத் தனது நண்பர் வீட்டில் சிலையை மறைத்து வைத்த ரங்க பாபு பூட்டை பூட்டி எடுத்துக்கொண்டு கிளம்பியிருக்கிறார். பின்னர், 5 நாள்கள் கழித்து நந்தி சிலையை 5 பேர் கொண்ட கும்பல் பல மணி நேரம் போராடி வைரம் இருக்கும் என்று ஆவலுடன் உடைத்துப் பார்த்ததில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. சாமியார் பாபா பேச்சைக் கேட்டு சிலையை உடைத்துச் சிக்கலில் மாட்டிக்கொண்ட கும்பல் புலம்பித் தீர்த்திருக்கிறது. சிலை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால், உடைக்கப்பட்ட நந்தி சிலையை மூட்டையில் அள்ளிச் சென்று ஸ்வர்ணமுகி ஆற்றில் வீசி விட்டுச் சென்றிருக்கின்றனர்.
இதற்கிடையில், சிவன் கோயிலில் நந்தி சிலை திருடு போன சம்பவம் தொடர்பாகக் கோயில் சாமியார் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து சித்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வெங்கடகிரி பகுதியில் ரங்க பாபு போலீஸார் சோதனையில் சிக்கினார். பின்னர் ரங்க பாபு அளித்த தகவலின் பேரில் ஐதராபாத்தில் தலைமறைவாக இருந்த சாமியார் பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட 14 பேரை சித்தூர் போலீஸார் கைது செய்தனர்.
ஏற்கனவே, ஆந்திராவில் தொடர்ச்சியாக கோயில்கள் மீது தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில் நந்தி சிலை கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: ஆந்திராவை அலறவிட்ட `ஐ.டி புரூஃப்’ திருடன்; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சைபராபாத் போலீஸ்! -நடந்தது என்ன?
source https://www.vikatan.com/news/crime/chittoor-police-arrested-a-gang-that-looted-the-nandi-statue-in-the-sivan-temple
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக