Ad

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

`கொரோனா பேரிடர் காலத்தில் ஐ.பி.எல் திருவிழா தேவைதானா?' - வலுக்கும் விவாதங்கள்..!

இந்தியாவில் கொரோனா தொற்று ஒரு புறம் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு புறம் ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கின்றன. நாள் ஒன்றுக்கு 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர், 2 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்பு ஏற்படுகிறது. கொரோனா தொற்றால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டோர் ஆக்ஸிஜன் சிலிண்டருக்காக மருத்துவமனை வாசலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

வட மாநிலங்களில் ஒரே நேரத்தில் பல நூறு பிணங்கள் எரிக்கப்படும் துயரம் வரலாற்றில் கூட படித்திருக்க வாய்ப்பில்லை. இத்தகைய சூழலில் “இந்தியாவில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அங்கு நடைபெறும் ஐ.பி.எல் தொடர் பொருத்தமற்றது தோன்றவில்லையா? அல்லது மக்களைத் தொற்றிலிருந்து திசைதிருப்பவே இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றனவா? எதுவாக இருந்தாலும் இந்தியர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்” என ட்வீட் செய்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட். மேலும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றுள்ள அபினவ் பிந்த்ரா-வும் இப்போதைய சூழலில் இந்த ஐபிஎல் போன்ற கொண்டாட்டங்கள் தேவையா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

ஐ.பி.எல்

கொரோனா பெருந்தொற்றால் இந்திய மக்கள் கடும் இன்னல்களைச் சந்தித்துவருகிறார்கள். “ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தான்” என்று நாம் படித்திருப்போம். அப்படித்தான் இருக்கிறது தற்போதைய ஐபிஎல் கொண்டாட்டங்கள் எனப் பலதரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கும் ஒருபடி மேலே சென்று தனியார் ஆங்கில நாளிதழ் இனி ஐபிஎல் போட்டிகள் குறித்து செய்திகளை வெளியிடப் போவதில்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Also Read: கொரோனா: `கொண்டாட்டம் குறைந்தபட்சமாக இருக்க வேண்டும்!’ - ஐபிஎல் தொடருக்கு எதிராக அபினவ் பிந்த்ரா

நாடே கொரோனா எனும் பேரிடரில் சிக்கித் தவித்து வரும் சூழலில் உண்மையில் ஐபிஎல் திருவிழா தேவை தானா? சமூகச் செயற்பாட்டாளர் ஆழி செந்தில்நாதனிடம் பேசினோம் “டெல்லி போன்ற நகரங்களில் மக்கள் அனைவரும் உயிருக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியான சூழலில் ஐபிஎல் தேவையா இல்லையா என மற்றவர்கள் மூலமாகப் பெரிய விவாதமாக எழுவதற்கு முன் நிர்வாகமே முன்வந்து போட்டிகளை நிறுத்தியிருக்க வேண்டும். எவ்வளவோ காரணங்களுக்காக இதைவிட மிக முக்கியமான எத்தனையோ போட்டிகள் எல்லாம் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இது பொழுதுபோக்குவதற்கான நேரம் இல்லை. அதற்காக எல்லோரும் வந்து அழுது கொண்டிருக்க வேண்டும் என்றோ அல்லது எப்போதுமே ஐ.பி.எல். வேண்டாம் என்றோ நான் சொல்லவில்லை. இப்போது வேண்டாம். தெருக்களில் சக மனிதன் இறப்பிற்கான அழும் குரல் கேட்டிருக்கும் இந்தச் சூழலில் இது வேண்டாம் என்றுதான் நான் சொல்கிறேன். என்ன நிகழ்வு நடக்கிறதோ அதற்கு ஏற்றார் போல முடிவு எடுங்கள் என்றுதான் சொல்கிறேன்.

ஆழி செந்தில்நாதன்

துக்க விஷயங்களிலிருந்து மக்கள் தங்களை மடைமாற்றிக்கொள்ளத்தான் இது நடக்கிறது என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. அதற்குப் பல வழிகள் இருக்கின்றன. நாடு மிக மோசமான சூழலை நாடு கடந்து கொண்டிருக்கும் போது இந்த மாதிரியான கேளிக்கைகளைக் கொஞ்சம் தள்ளி வைக்கலாம் என்பது என்னுடைய எதிர்பார்ப்புதான். ஆனால், பொழுதுபோக்கில்லை பணம் சேர்ப்பதுதான் நோக்கமாக இருக்கும்போது என்னுடைய இந்த எதிர்பார்ப்பு நிச்சயம் நடக்காது என்பது நன்றாகத் தெரியும்” என்கிறார்.

கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி ராமனிடம் பேசினோம் “கஷ்டமான இந்த காலகட்டத்தில் மக்களுக்கு ஒரு மூன்று மணி நேரம் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஐ.பி.எல் தற்போது ஒரு வாய்ப்பாக இருக்கிறது. மேலும், அரசு சார்பில் இதற்காக பெரிய அளவில் காவலர்கள், மருத்துவர்கள் என எந்த உதவியும் செய்யப்படவில்லை அல்லது மற்ற காலங்களைவிட மிகக் குறைந்த அளவிலேயே அரசுத் தரப்பிலிருந்து உதவிகள் வழங்கப்படுகின்றன. அதனால், அதை நடத்துவதில் எந்த குறையும் இல்லை. ஆனால், டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்று கொரோனா தொற்று அதிகமான மாநிலங்களில் நடத்தக் கூடாது என்று நான் உறுதியாகச் சொல்வேன்.

அந்தந்த மாநிலங்களில் கொரோனா தொற்றிற்காக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் செயல்படுத்தி வரும் போது ஐ.பி.எல் போட்டிகளுக்கு மட்டும் அனுமதி என்பது சட்டத்தை மீறுவதாகும். அதற்குப் பதிலாக தர்மசாலா போன்று எவ்வளவோ இடங்களில் நடத்தலாமே. அங்கெல்லாம் கொரோனா தொற்று குறைவாகத்தானே இருக்கிறது. ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு மட்டுமல்ல, அவர்களோடு தொடர்புடைய ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் என மூன்று நாளுக்கு ஒரு முறை ஆயிரக்கணக்கில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதற்குப் பதிலாக ஐ.பி.எல் போட்டிகளை நிறுத்திவிட்டால் அவை எல்லாம் தேவைப்படும் மக்களுக்குப் போய்ச் சேரும் தானே. இதையும் கவனத்தில் கொள்ளலாம். டிசம்பர், ஜனவரியில் இங்கிலாந்தில் கொரோனா தொற்று கடுமையாகப் பரவியபோது கூட இங்கிலீஸ் ப்ரீமியர் லீக் போட்டிகளை அந்த நாடு நடத்தியது. அதேபோல போட்டிகளைத் தொடர்ந்து நடத்துவதை எல்லாம் தவறாக நாம் பார்க்க முடியாது.

சுமந்த் சி. ராமன்

ஒரு சில வீரர்கள் தனிப்பட்ட முறையில் உதவி செய்கிறார்களே தவிர ஐசிசி, ஐ.பி.எல் நிர்வாகம் தரப்பில் இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பதுதான் மிகவும் வேதனையானது. ஏனெனில் ஐ.பி.எல் போட்டி என்பது மிகப்பெரிய அளவில் பணப்புழக்கம் நடக்கும் இடம். நாள் முழுக்க கொரோனா தொற்றின் எண்ணிக்கை, மரணம் என அவலச் செய்திகளையே கேட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு மருந்து மாதிரி இருக்கும் இந்த ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்படுவதில் எந்த தவறும் இல்லை” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/in-corona-pandemic-do-we-need-ipl-a-debate

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக