Ad

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

மும்பை: 5 ஸ்டார் ஹோட்டல்கள் கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களாக அறிவிப்பு! - அடுத்து என்ன?

மும்பையில் கொரோனா தொற்று தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 9,989 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 58 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் எப்போதும் இல்லாத அளவுக்கு 63,294 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 34,008 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தற்காலிக மருத்துவமனைகளை மாநகராட்சி நிர்வாகம் உருவாக்கி வருகிறது. அப்படியும் போதிய அளவுக்கு படுக்கை வசதி இல்லாமல் இருக்கிறது.

இதையடுத்து நிலைமையை சமாளிக்க மாநகராட்சி நிர்வாகம் மும்பையில் உள்ள 244 ஹோட்டல்களை கொரோனா நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தும் மையங்களாக அறிவித்துள்ளது. இதில் 29 பைஃவ் ஸ்டார் ஹோட்டல்களும் அடங்கும். 34 நான்கு நட்சத்திர ஹோட்டல்களும், 56 மூன்று நட்சத்திர ஹோட்டல்களும், 38 இரண்டு நட்சத்திர ஹோட்டல்களும், 86 பட்ஜெட் ஹோட்டல்களும், ஒரு ஏர்போர்ட் ஹோட்டலும் இதில் அடங்கும். மும்பையில் பிரபலமான தாஜ் மகால் பேலஸ் ஹோட்டலும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் இந்த ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவர். கொரோனா நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள விரும்பாத பட்சத்தில் அவர்களையும் இந்த ஹோட்டல்களுக்கு மாற்ற இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஹோட்டல்களில் தங்குவதற்கான கட்டணத்தை வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளும், கொரோனா நோயாளிகளும் கொடுக்கவேண்டும். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க சராசரியாக 3,500 முதல் 4,500 வரையும், நான்கு நட்சத்திர ஹோட்டல்களில் தங்க 2,500 ரூபாயில் இருந்து 4,000 ரூபாய் வரையும், மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்க 1,800 ரூபாயில் இருந்து 3,700 ரூபாயும், இரண்டு நட்சத்திர ஹோட்டலில் தங்க 1,700லிருந்து 3,200 ரூபாய் வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்துவது குறித்து மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அனைத்து கட்சி தலைவர்களை கூட்டி ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். இதில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் 2 வாரங்களுக்கு பொதுமுடக்கத்தை அமல்படுத்தலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளனர். ஆனால் உத்தவ் தாக்கரே 8 நாட்களுக்கு மட்டும் பொது முடக்கத்தை அமல்படுத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறார். ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகளுக்கே வியாபாரிகள் மற்றும் ஓட்டல், ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு இது தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரேயையும் சந்தித்து பேசியுள்ளனர். மீண்டும் ஒரு பொது முடக்கத்தை கொண்டு வந்தால் தங்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு

சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்திவிட்டு இதில் இறுதி முடிவு எடுக்க உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளார். மேலும் மகாராஷ்டிராவில் சொந்தமாக ஆக்ஜிசன் தொழிற்சாலை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதேசமயம் அமைச்சர் ராஜேஷ் தோபே வரும் 14ம் தேதிக்கு பிறகு பொதுமுடக்கத்தை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். எப்போது பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் வியாபாரிகள் இருக்கின்றனர். மற்றொரு புறம் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊரை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையே மகாராஷ்டிராவிற்கு கூடுதல் வெண்டிலேட்டர்கள் ஓரிரு நாட்களில் அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/29-five-star-hotels-in-mumbai-announced-as-corona-isolation-centers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக