Ad

புதன், 31 மார்ச், 2021

`இன்னோர் ஊரடங்கிற்கு இந்த நாடு தாங்காது!' - இதையெல்லாம் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்வார்களா?

கொரோனா நோய்த் தொற்றுக்கான இரண்டாவது அலை, இந்தியாவில் அதிவேகமாகப் பரவி வருகிறது. பிப்ரவரி மாத மத்தியில் மிகக் குறைந்த அளவாக ஒரு நாளைக்கு 12,000 நபர்கள் மட்டுமே சராசரியாக இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், ஒன்றரை மாத இடைவெளியில் அந்த எண்ணிக்கை 65,000-மாக உயர்ந்து இருக்கிறது. சென்ற மாதத்துடன் ஒப்பிட்டால் ஐந்தரை மடங்கு அதிகமான மக்கள் இந்த நோய்த் தொற்றால் தற்போது தினம்தோறும் பாதிப்படைந்து வருகின்றனர்.

இந்த நோய்த் தொற்று காரணமாகச் சென்ற ஆண்டு கொண்டுவரப்பட்ட ஊரடங்கு திரும்பவும் கொண்டு வரப்பட்டுவிடுமோ என்ற அச்சம் மக்களிடம் எழத் தொடங்கியுள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் திறக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக இயங்குகின்றன.

Mukesh ambani

மத்திய அரசு இந்தியா முழுமைக்கும் ஊரடங்கு கொண்டு வரப்படாது என்று அறிவித்து வந்தாலும், மக்களிடம் அந்த அச்சம் தீர்ந்தபாடில்லை. ஊரடங்கு தொடர்பான பலவிதமான புரளிகள் எங்கும் பரவி வருகின்றன. ``கொரோனா நோய்த்தொற்றுடன்கூட வாழ்ந்துவிடலாம். ஆனால், ஊரடங்கு மீண்டும் வந்தால் வாழ்வாதாரமே பாதிக்கப்படும்" என்று மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.

சென்ற ஆண்டு கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கையும் இன்னும் முழுமையாக மீண்டுவிடவில்லை. அதற்குள் மீண்டும் ஊரடங்கு வந்தால் என்ன செய்வது என்ற அச்சம் பெரும்பாலான மக்களிடம் உள்ளது.

இப்படி மக்கள் அச்சம் கொள்ளும் அளவுக்கு கடந்த ஊரடங்கு என்னென்ன பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வந்தது என்று பார்ப்போம்.

பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு!

கடந்த ஆண்டில் உலக அளவில் மிக அதிக சதவிகித வளர்ச்சி பெற்ற நபராக கௌதம் அதானி மாறினார். கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 16.2 பில்லியன் டாலர் உயர்ந்து, 50 பில்லியன் டாலராக உள்ளது. கெளதம் அதானியின் வளர்ச்சி விகிதம் உலகின் முதல் பணக்காரர்களான எலான் மஸ்க் மற்றும் ஜெஃப் பெஸாசைவிட அதிக விகிதாச்சாரத்தில் இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

அது போல, ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் தொடர்ந்து அதிகரித்ததால், அந்த நிறுவனத்தின் நிறுவனர் முகேஷ் அம்பானி மீண்டும் ஆசியாவின் முதல் பணக்காரராக மாறியுள்ளார். கடந்த ஆண்டுகளில் சீனாவில் தண்ணீர் பாட்டில் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் நிறுவனர் சோங் ஷான்ஷன் (Zhong Shanshun) அவர்களைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் முதல் பணக்காரர் என்கிற பெருமையை அம்பானி மீண்டும் தக்கவைத்துள்ளார்.

ஆனால், இதற்கு நேர்மாறாக உலக வங்கியின் தரவுகளை அடிப்படையாக வைத்து பியூ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில், இந்தியாவில் உள்ள மூன்றில் ஒரு நடுத்தர வயதினர் ஏழை வர்க்கத்தினராக மாறியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. இந்தியாவில் ஒரு நாளைக்கு 150 ரூபாய்க்குக் குறைவான ஊதியம் ஈட்டும் நபர் ஏழை என்ற வரையறைக்குள் வருகிறார். 700 முதல் 1,500 ரூபாய் வரை ஊதியம் ஈட்டுபவர்கள் நடுத்தர வர்க்கத்தினர் என்ற வரையறைக்குள் வருவர்.

இயங்காத விசைத்தறிக் கூடம்

மேலும், கொரோனா காலகட்டத்தில் ஏழை வர்க்கத்தினர் இந்தியாவில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக அந்த ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

700 முதல் 1,500 ரூபாய் ஊதியம் ஈட்டிவந்த சுமார் 3.2 கோடி நடுத்தர மக்கள் நாளொன்றுக்கு 150 ரூபாய்க்குக்கீழ் ஈட்டும் நிலைக்கு கொரோனா ஊரடங்கால் வந்திருப்பதாக அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணமாக வேலை இழப்பு, ஊரடங்குக்குப் பிறகும் நோய்த் தொற்றுக்கு முன்பான சூழல் திரும்பாமல் இருப்பது போன்றவை இருக்கின்றன.

இந்தியப் பணக்காரர்கள் உலக அளவில் முதலிடம் பிடிக்க, பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. மீண்டும் ஊரடங்கு ஏற்படுமானால் இந்த ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற காரணமும் மக்களின் அச்சத்துக்கு அடிப்படையாக உள்ளது.

தொழில்கள் பழைய நிலைக்குத் திரும்பவில்லை!

ஊரடங்கு முதலில் அமல்படுத்தப்பட்டு ஓராண்டுக்குமேல் ஆகியும் பல தொழில்கள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. குறிப்பாக, திரைப்படத் தயாரிப்பு மற்றும் அது சார்ந்த தொழில்கள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், சுற்றுலா சார்ந்த துறைகள், ஷாப்பிங் மால்கள், திருமணம் சார்ந்த தொழில்கள், ஹோட்டல்கள், அழகுக் கலை நிலையங்கள் போன்ற பல துறைகள் சார்ந்து வாழ்பவர்கள் இன்னும் இயல்புநிலைக்கு வராத சூழ்நிலையே நிலவுகிறது.

இந்தத் தொழில் சார்ந்து லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரங்கள் கடந்த ஓராண்டில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பலர் கடன்களை வாங்கி இன்னும் சற்றுக் காலத்தில் நிலைமை சீராகும் என்கின்ற நம்பிக்கையில் நாள்களைத் தள்ளிக்கொண்டு வருகின்றனர். மீண்டும் ஊரடங்கு கொண்டுவருவது அவர்களின் வாழ்வாதாரங்களை மிகக் கடுமையாகப் பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதே உண்மை.

வீட்டிலிருந்து வேலை

வொர்க் ஃப்ரம் ஹோமின் மறுபக்கம்!

கொரோனா நோய்த் தொற்று காரணமாகத் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல துறை நிறுவனங்கள் தம் ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்யுமாறு கூறியுள்ளன. அலுவலகத்தில் இருந்து வேலை செய்வதற்கு அரசு அனுமதி அளித்திருந்தாலும் இன்னும் பெரும்பாலான நிறுவனங்கள் தம் பணியாளர்களை முழுமையாக இன்னும் பணிக்கு அழைக்கவில்லை.

பொருளாதார சக்கரத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், அதைச் சார்ந்த தொழில்களுக்கு என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை பழைய மாமல்லபுரம் (ஓ.எம்.ஆர்) சாலை பக்கம் ஒரு ரவுண்டு வந்தால் பார்க்கலாம். அந்தப் பகுதிகளில் தங்கி இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி செய்பவர்களாக இருக்கின்றனர். பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதால் தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக பழைய மாமல்லபுரம் சாலை இருக்கிறது. பெரும்பாலான அப்பார்ட்மென்ட் வாசல்களில் வீடு வாடகைக்கு விடப்படும் என்கின்ற போர்டு தொங்குகிறது. அந்தப் பகுதிகளில் தொழில் செய்பவர்கள் கடந்த ஒரு வருட காலமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கடைகள் மூடப்படும் சூழ்நிலையும் நிலவுகிறது. அவர்கள் அனைவரும் அந்தப் பகுதியை விட்டுச் சென்ற மக்கள் திரும்ப வருவார்கள் என்கின்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர். மீண்டும் ஊரடங்கு கொண்டுவந்தால் இன்னும் குறைந்தது ஓராண்டுக்கு அந்தப் பகுதி மீண்டுவராத சூழ்நிலையை ஏற்படுத்தும் என்கிற அச்சம் அங்கு தொழில் செய்யும் அனைவரிடமும் உள்ளது.

ஊரடங்கே வேண்டாம்!

ஊரடங்கு என்பது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி போன்றதாக இருக்கிறது. ஊரடங்கு போடுவது நோய்த் தொற்று மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் என்றாலும் மறுபக்கம், பல அப்பாவி மக்களின் பொருளாதார நிலையை அதலபாதாளத்துக்குத் தள்ளக்கூடியதாக இருக்கிறது.

கொரோனா நோய்த் தொற்று பரவிய கடந்தாண்டில் அந்த நோய் பற்றிய எந்த விதமான புரிதலும் எந்த நாட்டிலும் இல்லாமல் இருந்தது. ஆனால், கடந்த ஓராண்டில் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்ற தெளிவான வழிமுறைகள் நம்மிடம் உள்ளன.

கொரோனா தடுப்பூசி

மேலும், உலகில் அதிக தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடாக நமது நாடு உள்ளது. என்றாலும், இது வரை ஆறு கோடி மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி நமது நாட்டில் வழங்கப்பட்டுள்ளது. பல மேலைநாடுகளில் 30 - 50% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில் மிகக் குறைந்த வேகத்தில் நான்கு சதவிகிதத்துக்குக் குறைவாகவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அடுத்த நாட்டுக்கு உதவுவது முக்கியம் என்றாலும் நமது நாடு சிக்கலில் உள்ளபோது அரசின் முதல் நடவடிக்கை தமது மக்களைக் காப்பதாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. அரசும் பிற நாடுகளுக்குத் தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை இந்த மாதம் குறைத்துள்ளது.

ஊரடங்கு

மிக விரைவாக நமது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் இந்த நோய்த் தொற்றை எளிதாக கட்டுப்படுத்த முடியும். நமது நாட்டில் எடுக்கப்பட்ட செரோ சர்வேயின்படி, கணிசமான மக்களுக்கு இந்த நோய்த் தொற்று வந்துவிட்டது என்பதை நாம் அறிய முடிகிறது. அதனால் விரைவாகத் தடுப்பூசி செலுத்துவது இந்த நோயில் இருந்து மக்களைக் காப்பாற்றும்.

மக்களைக் காப்பாற்றுவதற்கு அரசு ஊரடங்குக்குப் பதிலாக மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே சாமானிய மக்களின் கோரிக்கையாக உள்ளது.



source https://www.vikatan.com/business/news/why-another-lockdown-to-control-pandemic-is-not-good-for-people-and-nation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக