Ad

திங்கள், 29 மார்ச், 2021

வங்கதேசம்: மோடியின் வருகைக்கு எதிர்ப்பு - 13 பேர் சுட்டுக் கொலை!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேச பயணத்தை எதிர்த்து அந்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

வங்கதேசத்தில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளியன்று தொடங்கிய போராட்டம் இன்று வரை நடைபெற்றது வருகிறது. பலர் இந்த போராட்டத்தில் காயமடைந்துள்ளனர்.

வெள்ளியன்று வங்கதேச தலைநகர் டாக்கா, கடற்கரை நகரான சட்டோகிராம், இந்திய எல்லைக்கு அருகில் உள்ள பிரஹமன்பரியா ஆகிய இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இது போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு எதிரான மோதலாக மாறியது. மேலும் போராட்டம் வன்முறையாக மாறியதால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

வங்கதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவுடன் மோடி

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்ததை அடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் ஞாயிறன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கதேசம் சுதந்திரம் பெற்ற 50-ம் ஆண்டு பொன்விழாவில் கலந்து கொள்ள கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக வங்கதேசம் சென்றார் பிரதமர் மோடி.

ஞாயிறன்று போராட்டக்காரர்கள் இந்து கோயில் ஒன்றையும், ரயில் ஒன்றையும் தாக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வங்கதேசத்தில் இஸ்லாமிய மக்கள் பெருபான்மையாக வாழ்கின்றனர். இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை, சிஏஏ ஆகியவற்றால் ஏற்கனவே வங்கதேச மக்கள் இந்தியாவின் மீது அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில் இஃப்சாட் – இ- இஸ்லாம் என்ற இஸ்லாமிய அமைப்பு, இந்தியாவில் முஸ்லிம்கள் மீது வகுப்புவாத தாக்குதல் நடைபெறுவதைக் கண்டித்து, பிரதமர் மோடியின் வங்கதேச பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இஃப்சாட் – இ – இஸ்லாம் அமைப்பு தேசிய அளவிலான அடைப்புக்கும் உத்தரவிட்டிருந்தது.

போராட்டத்தில் வன்முறை

சனிக்கிழமையன்று வங்கதேசத்தில் முகநூல் சேவையும் தடைப்பட்டது. வங்கதேசத்தின் உள்துறை அமைச்சர் அசாதுசாமன் கான் இந்த போராட்டம் உடனடியாக நிறுத்தப்படும் வேண்டும் என தெரிவித்துள்ளார்.

``பாதுகாப்பு படைகள் மிகவும் பொறுமை காத்து வருகின்றன. இந்த போராட்டம் நிறுத்தப்படவில்லை என்றால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

வங்கதேசம் சுதந்திரம் அடைந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவு, மற்றும் வங்கதேசத்தை தோற்றுவித்த ஷேக் முஜிபூர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள மார்ச் 26-ம் தேதி இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் சென்றார் மோடி. ஷேக் முஜிபூர் ரஹ்மான் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தை ஆவார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு பிறகு, 12 லட்சம் கோவிட் தடுப்பு மருந்துகளை வங்கதேசத்துக்கு இந்தியா வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வங்கதேச இந்தியா உறவு

வங்கதேசம் தனது பொருளாதாரத்தில் ஒரு தொடர் வளர்ச்சியை கண்டுவருகிறது. அதன் ஆடை (ரெடிமேட் கார்மெண்ட்) வர்த்தகம் சீனாவுக்கு அடுத்தபடியாக உள்ளது.

Also Read: மோடி, அமித் ஷா முன் பழனிசாமி தலைகுனிகிறார்; அதற்கு விலை கொடுப்பது தமிழக மக்களே - ராகுல் காந்தி

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவை தனது கூட்டணி நாடாகவே கருதுகிறார். மேலும் இந்தியாவுடன் இணக்கமாக செயல்பட்டால் வங்கதேசத்தில் வறுமையில் உள்ள மக்களை அதிலிருந்து மீட்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் நடைபெறுவதால் மோடியின் வங்கதேச பயணம் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இருநாடுகளும் கிட்டதட்ட 50 நதிகளை பகிர்ந்து கொள்கின்றன.

தெற்காசிய பிராந்தியத்தில் வங்கதேசம் இந்தியாவின் ஒரு முக்கிய வர்த்தக கூட்டாளியாகவும் உள்ளது.

இருப்பினும் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையே நீண்ட நாட்களாக புகைந்து கொண்டிருக்கின்ற ஒரு விஷயமாக டீஸ்டா நதி நீர் பங்கீடு உள்ளது.

இந்தியா அந்த நதியில் 55 சதவீத பங்கை கோருகிறது. ஆனால் வங்கதேசத்துக்கு இது திருப்தி அளிப்பதாக இல்லை.

இந்த டீஸ்டா நதியானது இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான சிக்கிமில் தோன்றி, வங்கதேசத்திற்குள் நுழைவதற்கு முன்பாக மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியில் பாய்ந்து, பிரமப்புத்திர நதியில் கலக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/13-killed-in-protest-against-modi-visit-to-bangladesh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக