Ad

வியாழன், 7 டிசம்பர், 2023

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நிராகரித்த நீதிமன்றம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நிராகரித்துள்ள நீதிமன்றம், மீண்டும் விசாரணை நடத்தி 6 மாதத்திற்குள் புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 15 பேர் சுட்டு கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தார்கள்.

சி.பி.ஐ

தமிழகத்தை அதிர வைத்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் , காவல் ஆய்வாளர்கள் ஹரிஹரன், மீனாட்சிநாதன், பார்த்தீபன், தாசில்தார்கள் சேகர், கண்ணன், சந்திரன் உள்ளிட்டோர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன்  சிபிஐக்கு புகார் மனு அனுப்பி, பின்னர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்

இந்நிலையில் சி.பி.ஐ விசாரணையை முடித்து காவல் ஆய்வாளர் திருமலை என்பவரை மட்டும் குற்றவாளியாக குறிப்பிட்டு மதுரை சி.பி.ஐ நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்நிலையில், "சி.பி.ஐ-யின் நடவடிக்கை சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது, சி.பி.ஐ-யின் இறுதி அறிக்கைகையை ரத்து செய்ய வேண்டும். கொலைகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடக் காரணமான மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் வருவாய் அலுவலர், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என சி.பி.ஐ நீதிமன்றத்தில் அர்ச்சுனன் ஆட்சேபனை மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு சி.பி.ஐ-யும் பதில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுக்களை விசாரணை செய்த நீதிபதி பசும்பொன் சண்முகையா, 'தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு படுகொலை வழக்கில், ஒரு காவல்துறை ஆய்வாளர் மட்டுமே குற்றவாளி என சி.பி.ஐ-யின் குற்றப்பத்திரிக்கையை நிராகரிப்பதாகவும், மீண்டும் இந்த வழக்கில் புலன்விசாரணை செய்து ஆறு மாதத்திற்குள் புதிய இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்'

இந்த வழக்கில் சி.பி.எம் முன்னாள் செயலாளர் அர்ச்சுனன் சார்பில் வழக்கறிஞர் ஷாஜிசெல்லன், சுப்பு முத்துராமலிங்கம் ஆகியோர் வாதாடினார்கள்.

தீர்ப்பு

ஏற்கனவே தமிழக அரசு நியமித்த நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், விசாரணையை முடித்து தமிழக அரசிடம் அளித்த அறிக்கையில் தூத்துக்குடி ஆட்சித்தலைவர், தென்மண்டல காவல்துறை தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட17 பேர் மீது நடவடிகை எடுக்க பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சி.பி.ஐ நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/madurai-cbi-court-judgment-against-cbi-inquiry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக