Ad

செவ்வாய், 12 டிசம்பர், 2023

மயக்க மருந்து ஸ்பிரே அடித்து பள்ளிக் குழந்தைகளை கடத்த முயற்சி - அருப்புக்கோட்டையில் பரபரப்பு

அருப்புக்கோட்டையில், பள்ளி அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் முகத்தில் மயக்க ஸ்பிரே தெளித்து, சாக்கு மூடையில் கட்டி கடத்த முயன்ற சம்பவம் பெரும் ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சின்னக்கட்டங்குடி கிராமத்தில் தனியார் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை 8:30 மணி அளவில் பள்ளிக்கு வந்த குழந்தைகள் வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப்பகுதியில், தெரிந்தவர்களின் வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்கு வந்திருப்பதாக கூறிக்கொண்டு இளம்பெண்ணும், வாலிபர் ஒருவரும் வந்திருக்கிறார்கள்.

கடத்தல்

அப்போது பள்ளி அருகே, அங்கு 7 மற்றும் 3 வயதுடைய சிறுவர்-சிறுமியர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இளம்பெண்ணும், வாலிபரும் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளிடம் நைசாக பேச்சுக்கொடுத்துள்ளனர். இந்தநிலையில், ஆள்நடமாட்டம் குறைந்த சமயமாக பார்த்து அவர்கள் இரண்டு பேரும், குழந்தைகளை இறுக்கி பிடித்துக் கொண்டு தாங்கள் மறைத்து வைத்திருந்த மயக்க ஸ்பிரேயை எடுத்து குழந்தைகள் முகத்தில் தெளித்துள்ளனர். இதனால் பீதி அடைந்த குழந்தைகள் தங்களை காப்பாற்றிக்கொள்ளும் எண்ணத்துடன் கூச்சலிட்டுள்ளனர். அவர்களின் கூச்சல் சத்தத்தை நிறுத்தி, குழந்தைகளை வலுக்கட்டாயமாக சாக்கு மூடைக்குள் திணிப்பதற்கு மர்மநபர்கள் முயற்சி செய்துள்ளனர்.

இதற்கிடையில், குழந்தைகளின் கூச்சல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவரவும், குழந்தைக் கடத்தலில் ஈடுபட முயன்றவர்கள் தங்களது முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பிஓடி விட்டனர். மர்ம நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட இரண்டு குழந்தைகளுக்கும் உரிய முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், இந்த சம்பவம் குறித்து போலீஸுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார், குழந்தைக்கடத்தல் முயற்சி தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும், பள்ளிக்கு அருகே இருக்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் உள்ள சி.சி.டி.வி.கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுதொடர்பான புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர். குடியிருப்புகள் மிகுந்த பகுதியில், பள்ளி முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் இரண்டு பேரை, மர்மநபர்கள் சாக்கு மூடையில் கட்டி கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/crime/unknown-persons-were-try-to-kidnapping-school-students-near-aruppukottai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக