Ad

புதன், 27 டிசம்பர், 2023

"திமுக-வை திட்ட அண்ணாமலை போல் 1000 மலைகள் உள்ளன; தமிழிசை அதை செய்யக்கூடாது!" - திருநாவுக்கரசர்

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அருகே உள்ள கூட்ட அரங்கில், 'மக்களுடன் முதல்வர்' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர், பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எண்ணூர் ஆலையில் வாயு கசிவு ஏற்பட்ட விவகாரத்தில் இனிமேல் இதுபோன்ற பாதிப்பு ஏற்படாத வகையில் என்னென்ன உயர் தொழில்நுட்பம் இருக்கிறதோ அதனை பயன்படுத்தி அனைத்துவித நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அனைவரின் ஆட்சிக் காலத்திலும் இயற்கை பேரிடர்கள் நடந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு திட்டம் தீட்டி ஒரே ஆண்டில் செய்ய முடியாது. ஐந்து ஆண்டுகள் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கி மக்கள் பாதிப்புக்குள்ளாகாமல் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேட்டியளிக்கும் திருநாவுக்கரசர்

மாநில அரசின் நிதியை வைத்து மட்டும் ஒன்றும் செய்ய முடியாது. ஒன்றிய அரசு போதிய நிதி வழங்க வேண்டும். 'தேசிய பேரிடர்' என்று அறிவித்தால் மற்ற மாநிலங்கள் கூட உதவி செய்ய முன் வருவார்கள். உதவியும் செய்யலாம். ஒன்றிய அரசும் நிதி ஒதுக்கும். வரி விலக்கு கிடைக்கும். தேசிய பேரிடர் என்று அறிவிப்பதில் அவர்களுக்கு என்ன பிரச்னை?. சுனாமியை தேசிய பேரிடராக அறிவித்தார்கள். அதேபோல், இதனையும் தேசிய பேரிடராக ஒன்றிய அரசு நினைத்தால் அறிவிக்கலாம். ஏட்டிக்கு போட்டி இல்லாமல் மாநில அரசுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழ்நாட்டை சார்ந்தவர். வேற மாநில ஆளுநராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பை பார்க்க வருவது பாராட்டுக்குரியது. அதேநேரம், அவர் பார்வையிட்டுவிட்டு ஆளுநராக தான் பதில் கூற வேண்டுமே தவிர அரசியல்வாதியாக பதில் கூறக்கூடாது. பாஜக-காரரை போல் தமிழிசை சௌந்தர்ராஜன் செயல்பட கூடாது. விமர்சனம் செய்ய பா.ஜ.க-வில் அண்ணாமலை போன்ற பல மலைகள் உள்ளன. இவர் வந்து தான் கூடுதலாக தி.மு.க-வை திட்ட வேண்டுமா?.

பொன்முடி போல் சொத்து குவிப்பு வழக்கில் பலர் தண்டனை பெற்றுள்ளனர். பொன்முடி தான் முதலில் சிறை போகிறாரா?. முதலமைச்சர்கள், அமைச்சர்களே சிறை போய் இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் மட்டும் இல்லை, அதிகாரிகள் யாராக இருந்தாலும் இ.டி, சி.பி.ஐ, ஐ.டி போன்றவற்றின் சோதனைகள் உள்நோக்கத்துடனும் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்க கூடாது. கட்சியை அழிக்கும் நோக்கிலோ, அதன் புகழை கெடுக்கும் வகையிலோ இருக்க கூடாது. அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும், பழிவாங்கும் நடவடிக்கையாகவும் இருக்க கூடாது. எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்று கூறும் போதும், பா.ஜ.க-வினரை பார்த்து, 'உங்களுக்கு கோபம் வரவில்லையா, அவர்களுடன் கூட்டணி இல்லை என்று ஏன் அறிவிக்கவில்லை' என்று பா.ஜ.க-வினரை தான் கேட்க வேண்டும். பா.ஜ.க-வை விட்டு அ.தி.மு.க வெளியே வந்துள்ளதால் பா.ஜ.க-வை மட்டும் முழுமையாக திட்டினால் அவர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்ற காரணத்தால் தற்போது காங்கிரஸையும் பேச வேண்டும் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி, 'தேசிய கட்சிகளால் எந்த பலனும் இல்லை' என்று கூறுகிறார்.

பேட்டியளிக்கும் திருநாவுக்கரசர்

இன்னும் போக போக அவர் பா.ஜ.க-வையும் கடுமையாக விமர்சனம் செய்வார்.

எங்கள் கூட்டணி கூட்டத்தில் 26 தலைவர்கள் கலந்துகொண்டார்கள். எம்.பி-கள் கூடிதான் யார் பிரதமர் என்று தேர்ந்தெடுப்போம். ராகுல் காந்தி வந்தால் கார்கே ஒத்துகொள்வார். கார்கே வந்தால் ராகுல் காந்தி ஒத்துக்ககொள்ளவார். என்னுடைய முதல் சாய்ஸ் ராகுல் காந்தி தான். வேங்கைவயல் சம்பந்தமாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது சி.பி.ஐ-க்கு போகவேண்டிய வழக்கா என அரசு முடிவு செய்யும். ராமர் கோயிலில் கும்பிடுபவர்கள் போய் கும்பிடட்டும். முடியாதவர்கள் இங்கே இருந்து கும்பிடுவோம். நான் அனைத்து கடவுளையும் கும்பிடுபவன். கோயில் கட்டியாகிவிட்டது. பிடித்தவர்கள் அனைவரும் கும்பிடலாம். ராமரை கும்பிட கூடாது என்று இல்லை. பிடித்தவர்கள் கும்பிடலாம். ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களுக்கு கஷ்டமான நேரத்தில் உதவி செய்ய வந்தார்களா, இல்லை குறை கூற வந்தார்களா?. நிவரணப் பணி முடிந்த பின் பொறுமையாக அவர் வந்து கணக்கு கேட்கட்டும். அமைச்சர் உதயநிதி ஒரு கட்சியில் பொறுப்பில் இருக்கிறார். அவருக்கு இதை தான் பேச வேண்டும் என்று யாரும் சட்டம் போடகூடாது. அதற்கு பா.ஜ.க பதில் கூறி விட்டார்கள். யாரும் யாருக்கும் பள்ளிக்கூடம் நடத்த முடியாது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/government-and-politics/thirunavukkarasar-says-tamilisai-should-not-slam-dmk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக