Ad

புதன், 26 அக்டோபர், 2022

பி.ஆர்.எஸ் கட்சி எம்எல்ஏ-க்களை பேரம் பேசி இழுக்க முயற்சி! - தெலங்கானாவில் ஆபரேஷன் லோட்டஸ்?

நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அடிக்கடி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி அல்லது எம்.எல்.ஏ-க்களை விசாரணை ஏஜென்சிகளை கொண்டு மிரட்டி ஆட்சி மாற்றத்துக்கு பா.ஜ.க முயல்வதாக குற்றம்சாட்டப்படுகிறது. தெலங்கானாவில் அது போன்ற ஒரு புகார் எழுந்திருக்கிறது. பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேரை விலைக்கு வாங்க முயற்சிகள் நடந்திருக்கின்றன. பைலட் ரோஹித் ரெட்டி, காந்தாராவ், பாலாராஜு, பீராம் ஹர்ஸ்வர்தன் ஆகிய 4 எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க மூன்று பேர் பேச்சுவார்த்தை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை ஹைதராபாத்திலுள்ள ஒரு பண்ணை வீட்டில் வைத்து இறுதி செய்வதாக இருந்தது.

போலீஸ் அதிகாரி ஸ்டீபன்

எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குபவர்கள் பண்ணை வீட்டுக்கு பணம் மற்றும் காசோலையுடன் வந்தவுடன் ரோஹித் ரெட்டி இது குறித்து போலீஸாரை தொடர்பு கொண்டு தங்களுக்கு லஞ்சம் கொடுத்து தங்களை விலைக்கு வாங்க முயற்சி நடப்பதாக தெரிவித்தார். உடனே போலீஸார் விரைந்து வந்து எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க வந்த மூன்று பேரைக் கைதுசெய்திருக்கின்றனர். அவர்கள் 4 எம்.எல்.ஏ-க்களில் முக்கியமானவராக இருப்பவருக்கு ரூபாய் 100 கோடியும், மற்ற எம்.எல்.ஏ-க்களுக்கு தலா 50 கோடி ரூபாயும் தருவதாக பேரம் பேசினர். இது குறித்து ஊடகங்களிடம் பேசிய ஐதாராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரா, ``எம்.எல்.ஏ ரோஹித் ரெட்டி தங்களை விலைக்கு வாங்க முயற்சி நடப்பதாக எங்களுக்கு தகவல் கொடுத்தவுடன் ஆசிஸ் நகரில் உள்ள பண்ணை வீட்டில் ரெய்டு நடத்தினோம். பேரம் பேசியவர்கள் எம்.எல்.ஏ-க்களுக்கு தலா 50 கோடி ரூபாய் பணம், கான்ட்ராக்ட் , கட்சியில் முக்கிய பதவி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியிருக்கின்றனர்.

கைது

நான்கு பேரில் முக்கியமானவருக்கு 100 கோடி ரூபாய் கொடுப்பதாக தெரிவித்திருக்கின்றனர். 3 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் போலி அடையாளத்துடன் ஹைதராபாத்க்கு வந்திருக்கின்றனர். ஹரியானாவைச் சேர்ந்த பூசாரி சதீஷ் சர்மா, திருப்தியைச் சேர்ந்த சாமியார் சிம்மயாஜி, தொழிலதிபர் நந்தகுமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்" என்று தெரிவித்தார். பேரம் பேசப்பட்ட நான்கு எம்.எல்.ஏ-க்களும் முதல்வர் சந்திரசேகர் ராவ் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சந்திரசேகர் ராவிடம் நடந்த சம்பவத்தை விளக்கினர்.

இது குறித்து தெலங்கானா பா.ஜ.க தலைவர்கள் அருணா, அர்விந்த் ஆகியோர், ``முதல்வர் சந்திரசேகர் ராவும், அவர் கட்சியினரும் சேர்ந்து குதிரை பேர நாடகத்தை நடத்தியிருக்கின்றனர். இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் இந்த நாடகத்தை நடத்தியிருக்கின்றனர்" என்று தெரிவித்தனர். 2019-ம் ஆண்டிலிருந்து தெலங்கானாவில் பா.ஜ.க சந்திரசேகர் ராவ் அரசை கவிழ்க்க முயற்சி செய்து வருகிறது. ஆனால் முடியாமல் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் பா.ஜ.க தலைவர் ஒருவர் அளித்திருந்த பேட்டியில், ``விரைவில் பாரத் ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் பா.ஜ.க-வில் சேருவார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் மகாராஷ்டிராவில் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே உதவியுடன் சிவசேனாவை இரண்டாக உடைத்து, பா.ஜ.க அங்கு ஆட்சியைப் பிடித்தது. அதோடு அண்டை மாநிலமான கோவாவில் காங்கிரஸ் கட்சியிலிருந்த பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களை சமீபத்தில் பா.ஜ.க தன்வசம் இழுத்துக்கொண்டது. இந்த மாதத் தொடக்கத்தில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு விசாரணை ஏஜென்சி மூலம் நெருக்கடி கொடுத்து அவர்களை தங்களது பக்கம் இழுக்க பா.ஜ.க முயல்வதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/attempt-to-buy-4-mlas-in-telangana-for-rs-50-each-chandrasekhar-rao-party-complains

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக