Ad

வியாழன், 20 அக்டோபர், 2022

தீபாவளி நன்னாளில் தரிசிக்கவேண்டிய கோயில்கள்; நடைபெறும் பூஜைகள்!

தீபாவளி என்றதுமே காசியும் கங்கையும்தான் நம் நினைவுக்கு வரும். காசிப் புண்ணியத்தைப் பன்மடங்காகப் பெற்றுத் தரும் கோயில்கள் நம் தமிழகத்திலும் உண்டு. மகாலட்சுமிக்குச் சீர்வரிசை, குபேர யோகம் தரும் சிவாலயம், கங்கைக்கு அருளிய தட்சிணா மூர்த்தி தரிசனம், கேதார நோன்பு தரிசனம் என தீபாவளியில் சிறப்புப் பெறும் ஆலயங்கள் அவை.
தீபாவளி

ரங்கநாதருக்கு ஜாலி அலங்காரம்!

திருவரங்கம் ரங்கநாதப் பெருமாள் தீபாவளித் திருநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்.

தீபாவளி அன்று பெருமாளுக்கு எண்ணெய்க் காப்பிட்டு, திருமஞ்சனம் செய்து, புதிய வஸ்திரம் அணிவித்து அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அன்று ஆழ்வார்களையும், ஆச்சார்யர்களையும், கிளி மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்த பின் திருமஞ்சனம் நடைபெறும்.

உற்சவரான பெருமாள் புறப்பட்டு சந்தன மண்டபத்துக்கு வந்ததும் வழிபாடுகள் நடைபெறும். அதற்குப் பின், அவர் ஆஸ்தான மண்டபத்துக்கு வருவார். அங்கே பெருமாளுக்கு விசேஷமான ‘ஜாலி அலங்காரம்’ செய்வர்.

`ஜாலி அலங்காரம்' என்பது தீபாவளி அன்று மட்டும் நடைபெறும். ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு கைலிகளில் மூட்டையாகக் கட்டி பெருமாள் திருவடிகளில் மேளதாளங்கள் முழங்க, நாகஸ்வர இசை ஒலிக்க, வேத பாராயணத்துடன் சமர்ப்பிப்பது ஆகும். இது ஒரு விசேஷ அம்சம். பெருமாள் அங்கு எழுந்தருளியுள்ள ஆழ்வார்களுக்கும், பக்தர்களுக்கும் அருள் பாலித்துவிட்டு கோயிலுக்குத் திரும்புவார். இந்தக் காட்சியை தீபாவளித் திருநாளில் தரிசித்தால் ஆடைகளுக்கும், பண வரவுக்கும் தட்டுப்பாடுகள் ஏற்படாது என்பது நம்பிக்கை.

வள்ளலார்கோவில் ஶ்ரீதட்சிணாமூர்த்தி

கங்கா அனுக்கிரக தட்சிணாமூர்த்தி!

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் அமைந்துள்ளது ‘வள்ளலார் கோயில்’ எனப்படும் ஸ்ரீவதான்யேஸ்வர ஸ்வாமி திருக் கோயில்; அம்பாளின் திருப்பெயர் ஸ்ரீஞானாம்பிகை. மூலவர் வரம் தரும் வள்ளல். இங்கு அருளும் மேதா தட்சிணாமூர்த்தியோ ஞானவள்ளல். ஆக, இந்த தலத்தை வள்ளலார் கோயில் என்றழைப்பது மிகப்பொருத்தமே!

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தத்தம் பாவங்களைப் போக்க நீராடுவது வழக்கம். அவர்களின் பாவங்கள் சேர்ந்ததால் புனிதமும் பொலிவும் இழந்து போனதாக வருந்திய மூன்று நதிப்பெண்களும், தங்கள் நிலையைக்கூறி காசி விஸ்வநாதரிடம் முறையிட்டார்களாம்.

அவர், ``மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஐப்பசி மாதம் முழுவதும் நீராடி, என்னை வழிப்பட்டால் மீண்டும் பொலிவு பெறுவீர்கள்’’ என்று அருள்பாலித்தார். அதன்படியே துர்வாசர் வழிகாட்ட காவிரி துலாக்கட்டத்தை அடைந்த மூன்று நதிப்பெண்களும், அங்கே நீராடி சிவ வழிபாடு செய்தார்கள்.

ஐப்பசி அமாவாசை திருநாளில் ஈசன் அவர்களுக்கு ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தந்து புனிதம் அளித்து அருள்பாலித்தாராம். கங்கையை மீண்டும் தன் திருமுடியில் சூடிக் கொண்டார். ஆகவே, இவரை ‘கங்கா அனுக்கிரக ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி’ என்று போற்றுகின்றன புராணங்கள். ஐப்பசி மாத அமாவாசை நாளில், இந்த புனித நிகழ்ச்சி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

நாச்சியார்கோவில் தாயார்

மகாலட்சுமிக்குத் தீபாவளி சீர்வரிசை

காவிரி தென்கரையில் உள்ள 127 சிவ தலங்களில் 65-வது தலம் திருநறையூர் சித்தநாதீஸ்வரர் ஆலயம். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் - திருவாரூர் பாதையில் சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நாச்சியார்கோவில். நர - நாராயணர் பட்சி ரூபமாக எழுந்தருளியதால் இந்த ஊருக்கு திருநறையூர் என்றும் பெயர் உண்டு. காலப்போக்கில் ஊர் வளர... திருநறையூர் மற்றும் நாச்சியார்கோவில் என இரண்டு ஊர்களாக அறியப்படுகின்றன!

மேதாவி மகரிஷி கடும்தவம் இருந்து சிவபெருமானிடம், ``மகாலட்சுமியே எனக்கு மகளாக வந்து பிறக்க வேண்டும்’’ என்று வரம் கேட்டுப் பெற்றாராம். அதன்படி மகாலட்சுமி இத்தலத்தில் அவதரித்து, குபேரனுக்கு அருள்புரிந்ததாக தலபுராணம் சொல்கிறது. ஒரு கட்டத்தில்... தன் மகளுக்கு மணம் செய்து வைக்க வேண்டும் என்று இறைவனிடம் மேதாவி மகரிஷி வேண்டினார். இதை ஏற்று ஸ்ரீபார்வதி தேவி சமேதராகக் காட்சி தந்து, ஸ்ரீநிவாச பெருமாளுக்கு மகாலட்சுமியை கன்னிகாதானம் செய்து வைத்தாராம் சிவபெருமான்.

இந்தத் தலத்தின் மற்றொரு சிறப்பம்சம்... மகாலட்சுமிக்கு வழங்கப்படும் தீபாவளி சீர் வைபவம். தீபாவளிக்கு முதல் நாள் ஸ்ரீசித்தநாதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து, பட்டுப் புடவை, வேஷ்டி துண்டு, பூமாலை, பழங்கள் மற்றும் தாமரை மலர்கள் ஆகியவற்றை, மேளதாளத்துடன் ஸ்ரீநிவாசபெருமாள் கோயிலுக்கு எடுத்துச்சென்று, தீபாவளி சீராக வழங்குவது வழக்கம்.

கெளரி நோன்பு தரிசனம்... திருச்செங்கோடு தீர்த்தம்

தீபாவளியை ஒட்டி வரக்கூடிய கேதார கௌரி விரதத்துக்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரருக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

ஐப்பசி மாத கிருஷ்ணபட்சம் - தேய்பிறை சதுர்த்தசியில், பார்வதிதேவியை எண்ணி நோன்பிருந்தால் நல்ல கணவனையும், திருமணமாகி இருந்தால் கணவனின் அன்பையும் குறையற்ற இல்லறத்தையும் செல்வங்களையும் பெறலாம் என்பதற்காகத் தொடங்கியதே கேதார கௌரி விரதமாகும்.

இந்த விரதத்தை முதலில் கடைப்பிடித்தவள் உமையவளே. விரதப் பலனாக ஐயனிடமிருந்து பிரிக்கப்பட முடியாத வகையில், அவரின் வாம பாகத்தைப் பெற்று பாகம்பிரியாள் என்று பெயர் பெற்றாள். இங்ஙனம் ஆணொரு பாதியும், பெண்ணொரு பாதியுமாக அகிலத்தின் ஆதார உண்மையை வெளிபடுத்தும் அர்த்தநாரீஸ்வர வடிவம் கொண்டு ஆண்டவன் இருக்குமிடம் திருச்செங்கோடு.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருமேனி - வெள்ளை பாஷாணத்தால் ஆன திருவுருவம். இடப்பாதியில் பெண்மையின் நளினமும், வலப்பாதியில் ஆண்மை யின் கம்பீரமும் இழையோடும். கண்களில்கூட, வலக் கண்ணுக்கும் இடக்கண்ணுக்கும் துல்லியமான வித்தியாசம் தெரிகிறது. மூலவர் திருமேனிக்குக் கீழே நீர் சுரந்து கொண்டே இருக்கிறது. இதையே தீர்த்த பிரசாதமாக எல்லோருக் கும் தருகிறார்கள்.

அர்த்தநாரீஸ்வர மூலவருக்கு முன்னால் மரகத லிங்கம் உள்ளது; தவசீலரான பிருங்கி மகரிஷியின் உருவமும் உள்ளது. தீபாவளியை யொட்டி கேதார கெளரி நோன்பிருக்கும் பெண்மணிகள் அவசியம் திருச்செங்கோடு சென்று ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். உங்களின் விரத பலன் பன்மடங்காகக் கிடைக்கும்.

ராஜராஜ சோழன் குபேர நிதீஸ்வரர்!

திண்டிவனம்- புதுச்சேரி செல்லும் வழியில், வரகுப்பட்டி எனும் ஊருக்கு அடுத்துள்ள சாலையில் சுமார் 4 கி.மீ பயணித்தால், அன்னம்புத்தூர் எனும் ஊரை அடையலாம். இங்குள்ள அருள்மிகு நிதீஸ்வரர் ஆலயம், ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாம்!

இந்த ஆலயம் காலப்போக்கில் சிதிலமுற்று மண்மூடிப்போக, சில வருடங்களுக்குமுன் உள்ளூர் அன்பர்கள் மற்றும் சிவபக்தர்களின் முயற்சியாலும் பங்களிப்பாலும் மீண்டும் கற்கோயிலாகவே மிகப் பொலிவுடன் எழும்பியுள்ளது.

ஞானநூல்கள் பதும நிதி, மகாபதும நிதி, மகா நிதி, கச்சப நிதி, முகுந்த நிதி, குந்த நிதி, நீல நிதி, சங்க நிதி ஆகிய எட்டு வகை நிதிகளைப் பற்றி விவரிக்கின்றன. இந்த அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தனது கடும் தவத்தால் ஈசனிடமிருந்து பெற்றவர், குபேரன். அவர் வழிபட்ட தலங்களுள், அன்னம் புத்தூர் திருத்தலமும் ஒன்று. எனவே, இங்கே குடிகொண்டிருக்கும் ஈசனுக்குத் திருநிதீஸ்வரர் எனத் திருநாமம் அமைந்ததாகத் தெரிவிக்கிறது, கல்வெட்டு ஒன்று.

தீபாவளித் திருநாளில் வணங்கவேண்டிய தெய்வம் குபேரன். அன்று லட்சுமிகுபேர பூஜை செய்து வழிபடுவார்கள். அப்படி அவரை பூஜிப்பதுடன், தீபாவளி விடுமுறையில் இந்த அன்னம் புத்தூருக்கும் சென்று குபேரன் வழிபட்ட நிதீஸ்வரரையும் வழிபட்டு வாருங்கள். அவரருளால் உங்கள் இல்லத்தில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பொங்கிப் பெருகும்.

பங்காரு காமாட்சி

ஞ்சாவூர் மேலவீதியில் அழகுறக் கோயில்கொண்டு, அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறாள் ஸ்ரீபங்காரு காமாட்சி அம்மன்.

காஞ்சி ஸ்ரீகாமாட்சியின் நெற்றியில் இருந்து தோன்றிய சக்தியே ஸ்ரீபங்காரு காமாட்சித் தாயாகத் திகழ்கிறாள் என்பர். அந்நியப் படையெடுப்பின்போது செஞ்சி, உடையார்பாளையம், அனக்குடி என்று பல ஊர்களில் வைக்கப்பட்ட அம்பிகையின் விக்கிரகத் திருமேனியை, மராட்டிய மன்னன் கனவில் வந்து அம்பிகையே உத்தரவிட... அதன்படி அவள் சுட்டிக்காட்டிய இடத்தில், தஞ்சை மேலவீதி பகுதியில் வைத்துக் கோயில் எழுப்பினான் என்கிறது ஸ்தல வரலாறு.  

பங்காரு காமாட்சி

தீபாவளி நன்னாளில், ஸ்ரீபங்காரு காமாட்சியம்மனுக்கு முறம் ஒன்றில் அதிரசம், முறுக்கு எனப் பண்டங்களை எடுத்து வந்து படையலிடுவார்கள். தங்களால் முடிந்த அளவில் (11 அல்லது 21 என எண்ணிக்கையில்) பலகாரங்களை எடுத்து வந்து படையலிட்டு, அம்மனை வணங்கிப் புத்தாடை அணிந்துகொண்டால், வீட்டில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்; மாங்கல்ய பலம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!



source https://www.vikatan.com/spiritual/functions/must-visit-temples-on-deepavali

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக