Ad

புதன், 19 அக்டோபர், 2022

திராவிட எதிர்ப்பு கூட்டமைப்பு உருவாக்கம்... திமுக-வின் ரியாக்‌ஷன் என்ன?!

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகள் தொடர்ந்து ஆட்சியிலிருந்து வருகிறது. இந்தச்சூழலில், கடந்த சில மாதங்களாகவே திராவிடம் குறித்த கருத்துக்கள் திமுகவினரால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவரும் திமுக அரசைத் திராவிட மாடல் அரசு என்று தொடர்ந்து புகழ்பாடி வருகிறார்கள். திமுகவின் திராவிட கருத்துக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா உள்ளிட்டோரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் எதிர்வினையாற்றி வருகிறார்கள். இந்தச்சூழலில், 59 சிறு சிறு இயக்கங்கள் இணைந்து திராவிட ஆட்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்து திராவிட எதிர்ப்பு கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்கியிருக்கிறது.

ஏர்போர்ட் மூர்த்தி

இதுகுறித்து, புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கூறுகையில், " அயோத்திதாசர், ரெட்டமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, மதுரை பிள்ளை, பி.வி.சுப்பிரமணியம் உள்ளிட்ட பட்டியல் சமூக மக்களின் வளர்ச்சிக்காகப் போராடிய தலைவர்களின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது. 1940 வரை பெருவாரியான பட்டியல் சமூகத் தலைவர்கள் தமிழ்நாட்டில் பெரும் ஆளுமையாக இருந்தனர். அதற்குப் பின் பட்டியல் சமூகத் தலைவர்கள் யாரும் தன்னெழுச்சியாக வந்துவிடாதபடி திராவிட கழகம் பார்த்துக்கொண்டது. சாதி வேறுபாடு அதிகமாகக் காணப்படும் உத்தரப்பிரதேசத்தில் ஒரு பட்டியல் சமூகப்பெண் முதல்வராக முடிகிறது. பீகாரில் வரமுடிகிறது. ஆனால், ஒரு பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர் தமிழகத்தில் முதல்வராகவோ, துணை முதல்வராகவோ வரமுடிவதில்லை. இவற்றுக்கெல்லாம் காரணம் திராவிட இயக்கங்களும், கட்சிகள் தான். எனவே, எங்களின் உரிமை இழப்புகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை இருக்கிறது" என்றார். 

ரேவதி நாகராஜன்

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரேவதி நாகராஜன், "திராவிட கட்சிகள் அனைத்தும் பறையர் சமூகத்தை ஜூரோவாக வைத்திருக்கிறது. அரும்பாக்கத்தில் வீடுகளை அப்புறப்படுத்தி எங்களின் அடிமடியில் கைவைத்தார்கள். அப்போது கடும் எதிர்ப்பை தெரிவித்தோம். பறையர் சமூக மக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தலைவர்கள் திராவிட கட்சிகளின் கைக்கூலிகளாக இருக்கிறார்கள். எங்கள் தாத்தா அயோத்தி தாசர் பண்டிதரும், ரெட்டமலை சீனிவாசனும் தான் பட்டியல் இனம் என்ற ஒன்றைக் கொண்டுவந்தார்கள். தமிழ்நாட்டில் பறையர் இன மக்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறார்கள்" என்றார். 

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இதுகுறித்து, திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ``2009-ல் கொடுக்கப்பட்ட 18 சதவீத இட ஒதுக்கீட்டில் அதிகமான இட ஒதுக்கீடு பறையர் சமூகத்திற்குத் தான் இருந்தது. திராவிட இயக்கத்தால் படிப்பு, உயர் கல்வி, வங்கிக் கடன் கிடைக்காமல் போய்விட்டதா? பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு முதன் முதலில் காங்கிரீட் வீடு கட்டிக்கொடுத்து திமுக அரசு தான். இந்த திட்டத்தின் மூலம் அதிகம் பயனடைந்தது அவர்கள் சொல்லும் பறையர் சமூகம் தான்.  ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே தலைவர் என்றால் அது கலைஞர் தான். இதைப் பார்க்கும் போது, உத்தரப்பிரதேசம், குஜராத்தில் சாதி ரீதியான, மத ரீதியான பிளவை மக்களிடம் ஏற்படுத்தி அதில் குளிர்காயும் பாஜக தமிழ்நாட்டில் அதை இவர்கள் மூலமாகச் செய்யப் பார்க்கிறது. இதில் ஒன்றாகத் தான் இந்த ஒருங்கிணைப்புக் குழு இருக்கும் என்று நினைக்கிறேன். திராவிட இயக்கம் என்ற ஒன்று இல்லையென்றால் இன்றைக்கு ஏர்போர்ட் மூர்த்தி எப்படி உருவாகியிருப்பார்? திராவிட இயக்க எதிர்ப்பு என்றாலே அனைவருக்கும் தெரியும் அவர்கள் பாஜகவின் கையாள்கள் தான் என்று" என்று கூறினார். 



source https://www.vikatan.com/government-and-politics/politics/anti-dravidian-organisation-what-was-dmks-reaction

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக