Ad

செவ்வாய், 25 அக்டோபர், 2022

``'முதலில் நான் ஒரு விவசாயி; பிறகு தான் அரசியல்வாதி' என்பேன்” - சுப்புலட்சுமி ஜெகதீசன்

கீழ்பவானி பாசனத் திட்டத்தின்கீழ் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் இந்த தண்ணீர் 200 கி.மீ.தூரம் பிரதான வாய்க்காலில் பயணித்து கடைமடைப்பகுதியான முத்தூர், மங்களப்பட்டியை சென்றடைகிறது. லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் கீழ்பவானி பாசனத் திட்டத்தை உருவாக்கி, செயல்படுத்தியதில் அப்போதைய ஈரோடு எம்.எல்.ஏ எம்.ஏ.ஈஸ்வரனுக்கு முக்கியப் பங்கு உண்டு. சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் விளங்கிய எம்.ஏ.ஈஸ்வரனின் பிறந்த நாளையொட்டி கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அவரின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், திமுக முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் பங்கேற்றார்.

M.A.Eswaran

நிகழ்ச்சியில் பேசிய அவர், ``நான் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட காலத்திலிருந்து தொடர்ந்து விவசாயிகளின் முன்னேற்றத்துக்காகவும், வளர்ச்சிக்காகவும் தான்  குரல் கொடுத்து வந்தேன் என்பது உங்களில் பலருக்கும்  தெரியும்.
சட்டமன்றத் கூட்டத்திலோ அல்லது பொதுக்கூட்டத்திலோ பேசும்போது முதலில் நான் ஒரு விவசாயி பிறகு தான் அரசியல்வாதி என்று கூறுவேன். அந்தளவுக்கு விவசாயம் என்பது எனது உடலின் ஒவ்வொரு ரத்த அணுவிலும் கலந்துள்ளது. சிறுவயதில் நாம் படித்திருக்கிறோம். வரப்புயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும். நெல் உயர குடி உயரும். குடி உயர கோன் உயருவான். குடி உயர்ந்தால் தான் கோன் உயரும். இங்கு கோன் என்பது அரசனை குறிக்கிறது.

இன்று விவசாயத்தின் அருமையையும், அதன் முக்கியத்துவத்தையும் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு சொல்லித் தர மறந்து விட்டோம். விவசாயம் செய்வதையே கேவலம் என்று நினைக்கிறார்கள். எல்லாம் ஐடி படிக்கிறார்கள். ஆனால் நான் ஒன்று சொல்கிறேன். கம்ப்யூட்டர் இன்ஜினியரை விட விவசாயிகளின் மூளை சிறந்தது. செயல்திறன்மிக்கது. பருவ காலத்துக்கு ஏற்ப,விவசாயத்தை எப்படி செய்வது, பருவ மாற்றத்துக்கு ஏற்றவாறு இடுபொருள்களின் தேவையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது விவசாயிக்கு தெரியும். அப்படிபட்ட விவசாயத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த தவறியதன் விளைவே இப்போது விவசாயத்தை கேவலமாக எண்ணும் சூழ்நிலை வந்துள்ளது.

சுப்புலட்சுமி ஜெகதீசன்

விவசாயிகளை உதாசீனம் செய்ததன் காரணமாகவே அடுத்த தலைமுறையினரை விவசாயத்தில் ஈடுபடுத்த தவறிவிட்டோம்.  
எனவே பள்ளி பருவத்திலேயே விவசாயத்தையும் பாடத்திட்டத்தில் சேர்த்தால் தான் அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தை கொண்டு செல்ல முடியும். அதற்கான முயற்சியை அரசு இப்போதுதான் எடுத்துள்ளது. எனவே விவசாயத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் அடுத்த தலைமுறையும் ஈடுபடுத்தினால் மட்டுமே விவசாயத்தை காப்பாற்ற முடியும்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/subbulakshmi-jagadesan-participated-in-a-event-after-resigned-from-dmk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக