Ad

வியாழன், 20 அக்டோபர், 2022

`நாங்களும் போலீஸ்தான்...’ - ரோந்து சென்ற காவலர்களை தாக்கிய ஆயுதப்படை காவலர் உட்பட 4 பேர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ-ஆக பணியாற்றி வரும் சந்திரன், காவலராக பணியாற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் வழக்கம் போல் இரவு ரோந்து பணிக்குச் சென்றிருக்கின்றனர். அப்போது, புத்தாம்பூர் என்ற பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார், பார்த்திபன், விஜய், மோகன்ராஜ் ஆகிய 4 இளைஞர்கள் பாலத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு ரோந்து சென்ற போலீஸார், மது அருந்திக் கொண்டிருந்தவர்களை உடனே அந்த இடத்தை விட்டு கிளம்புமாறு எச்சரித்திருக்கின்றனர். அப்போது, கிளம்ப மறுத்த அந்த இளைஞர்கள், சிலர், `நாங்களும் போலீஸ்தான்... போக முடியாது’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, எஸ்.எஸ்.ஐ சந்திரன் மற்றும் காவலர் கார்த்திக் ஆகிய இருவரையும் 4 பேரும் சேர்ந்து தாக்கியிருக்கின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட போலீஸார் கொடுத்த புகாரின் பேரில், இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அருண்குமார் திருச்சி ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருவது தெரியவந்தது.

இதையடுத்து, அருண்குமார் மற்றும் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த பார்த்திபன், விஜய், மோகன்ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த வெள்ளனூர் போலீஸார் கைது செய்து விசாரணை நடந்தி வருகின்றனர். புதுக்கோட்டையில் ரோந்து பணிக்குச் சென்ற காவலர்களை தாக்கிய வழக்கில், ஆயுதப்படை காவலருடன் சேர்த்து 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/attack-on-patrolling-policemen-along-with-the-police-4-people-were-arrested

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக