Ad

புதன், 24 ஆகஸ்ட், 2022

வாசகர் மேடை: மைக் ஃபைட்டர்ஸ்!

? சமீபத்தில் மோதிக்கொண்ட சீமானும் ஜெயக்குமாரும் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தால் என்ன கேரக்டர்களில் நடிக்கலாம்? டைட்டில் என்ன?

போலீஸ் அதிகாரி ஜெயக்குமார் மாவோயிஸ்ட் சீமானை ஒவ்வொரு முறை பிடிக்கும்போதும் அவர் கதை சொல்லித் தப்பிக்கிறார். டைட்டில் ‘தம்பி, ஒரு கதை சொல்லட்டுமா?’

மஹஜூதா

தெனாலி ராமனாக சீமானும், பீர்பாலாக ஜெயக்குமாரும் நடிக்கலாம்!

எம்.இராஜேந்திரன்

‘கத்தினா, குத்துவேன்’... வார்த்தைப் போர் செய்யும் இருநாட்டு விதூஷகர்களாக நடிக்கலாம்.

`பெரியகுளம்' தேவா

‘பாகுபலி' சீமான், ‘கட்டப்பா' ஜெயக்குமார், இருவரும் மோதல்களைத் தவிர்த்து ‘மாமா', ‘மருமகனே' எனக் கொஞ்சிக்கொள்ளலாம்! டைட்டில் - ‘பாக்குறவன் பலி!’

நா.இரவீந்திரன்

மக்களை சந்தோஷப்படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் ரெண்டு பேரும், ‘ஆர் ஆர் ஆர்’ படத்தை உல்ட்டா செய்து நடிக்கலாம். ராம் கேரக்டரில் சீமான், பீம் கேரக்டரில் ஜெயக்குமார் மேக்கப்பில்லாமல் நடிக்க, முழுநீள காமெடிப் படமாக எடுக்கலாம்.(டைட்டில்: டார் டார் டார்)

JaNeHANUSHKA

ஒரு படத்தில் சேர்ந்து நடிப்பதைவிட, பாடலாசிரியராக ஜெயக்குமாரும், ஸ்டண்ட் மாஸ்டராக சீமானும் ஒரு படத்தில் சேர்ந்து பணியாற்றினால் லெஜண்ட் சரவணன் படத்துக்கு ‘டப்' கொடுக்கும் படமாக அமையும்.

Sivakum31085735

சீமான் கராத்தே மாஸ்டராகவும், ஜெயக்குமார் பாக்ஸராகவும் நடிக்கலாம். படத்தின் பெயர்: மைக் ஃபைட்டர்ஸ்!

sarathitup4

? டைம் டிராவலில் சேர சோழ பாண்டியர் காலத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

ராஜராஜ சோழன் பெரிய கோயில் கட்டியதை ரீப்ளே பார்த்துவிட்டு, வீண் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக தொழில்நுட்ப உண்மைகளை விளக்குவேன்.

பா.சக்திவேல்

கரிகால் சோழனுக்கு பொன்னியின் செல்வன் டிரெய்லரைப் போட்டுக் காட்டுவேன்.

அஹமத்

அந்த வாய்ப்பைத் தமிழக முதல்வருக்கு வழங்குவதோடு, சேர சோழ பாண்டிய மன்னர்களுக்கு ‘தகைசால் தமிழர் விருது' வழங்குபடி சி.எம்-மிடம் வேண்டுவேன்.

ஆ.மாடக்கண்ணு

‘அரதப் பழசான மன்னர் ஜோக் எழுதி உங்களைக் கிண்டல் அடிக்குறாங்க’ என்று மூவேந்தர்களிடம் போட்டுக்கொடுப்பேன்.

balebalu

அண்ணன் சீமானை அழைத்துச் சென்று, 60,000 யானைகள் பீலா கதையை சோழர்களிடம் சொல்லி அவர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பேன்.

gunagun80708773

வேற என்ன, நந்தினி எப்படி இருக்கான்னு போய்ப் பார்த்துட்டு வருவேன்.

Itz_Araviind

? கமலின் ‘விக்ரம்' சாதனையை முறியடிக்கும்படி ரஜினியின் அடுத்த படத்தின் கதை எப்படி இருக்க வேண்டும்?

ரஜினியின் ‘பில்லா’வில் மீண்டும் ரஜினியே நடித்தால் நல்லா ‘கல்லா’ கட்டலாம்!

டி.ஜெயசிங்

விக்ரமில் ‘லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்' (எல்.சி.யூ) அமைந்த மாதிரி ‘ரஜினி சினிமாட்டிக் யூனிவெர்ஸ்' (ஆர்.சி.யூ) அமைக்க வேண்டும். பாட்ஷா, அண்ணாமலை இரண்டின் நாயகர்களை கனெக்ட் செய்யும் வகையில் ஒரு கதையை இளம் இயக்குநரைக் கொண்டு எழுத வைத்து அதில் நடிக்க வேண்டும்.

ஈனோஸ் இப்ராஹீம்

‘நான் சிகப்பு மனிதன்' பட ராபின்ஹூட் கேரக்டரில் பகலில் வாத்தி டூட்டியும் இரவில் சமூக விரோதிகளை வேட்டையாடும் டூட்டியும்! இவரைக் கண்காணிக்கும் சி.ஐ.டி ஆபீஸராக பகத் பாசில் மற்றும் எஸ்ஜே.சூர்யா வில்லனாகவும் கதைக்களம் அமைத்தால் ஓரளவு விக்ரமைத் தாண்டி சாதிக்கலாம்!

பா.து.பிரகாஷ்

‘விக்ரம்’ க்ளைமேக்ஸில் வெளிநாடு போன கமலின் பேரன், பெரிய ஆளாகி திரும்பி இந்தியா வரும் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கலாம். கமல், ரஜினி, சூர்யான்னு சூப்பர் கூட்டணியில் ‘விக்ரம் 3’, விக்ரம் சாதனையை முறியடிக்கும்.

பெ.பாலசுப்ரமணி

சூரியனுக்குச் சென்று ஆராய்ச்சி மேற்கொள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற பல நாடுகள் போட்டி போட, இந்தியாவின் சார்பில் களமிறங்குகிறார் ரஜினி. பல இன்னல்களுக்கும் சவால்களுக்கும் இடையே எப்படி முதன்முதலில் சூரியனில் கால் பதித்து ஆராய்ச்சி மேற்கொண்டு, இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கிறார் என்பதே கதை. சூரியனின் வெப்பம் தவிர்க்க அவ்வப்போது நயன்தாராவுடன் டூயட் பாடும் கனவுக் காட்சிகள் கட்டாயம் உண்டு!

ரிஷிவந்தியா

விக்ரம் சாதனையை 1987-ம் வருஷமே ‘மனிதன்’ படத்துல முறியடிச்சுட்டாரே... (ஏன்யா, நான் கரெக்டா பேசுறனா?)

சிவசுப்பு

அருணாசலம்-2 எடுக்கலாம். கதைப்படி ரகுவரன் மகனான சுதீப், அருணாசலத்தின் சொத்துகளை இழக்க வைத்து நடுத்தெருவில் நிறுத்துகிறார். அருணாசலம், சுதீப்பின் பிளான்களை முறியடித்து மீண்டும் கோடீஸ்வரனாக மாறும் கதையை காமெடி கலந்துகட்டி மாஸாக சுந்தர்.சி இயக்கலாம்.

IamJeevagan

? ஜி.எஸ்.டி பற்றி நான்கு வரியில் ஒரு ஜாலி கவிதை...

‘மோடி’ - இரண்டெழுத்து

‘ஜி.எஸ்.டி’ - மூன்றெழுத்து

‘மக்கள்’ - நான்கெழுத்து

‘முடியலைஜி’ – ஐந்தெழுத்து!

கே.முருகன்

ஆத்துல போட்டாலும்

அளந்து போடு

அத்தோடு அதுக்கு

ஜி.எஸ்.டி கட்டிப்போடு!

அஜித்

நிற்பதுவே... நடப்பதுவே...

பறப்பதுவே... உழைப்பதுவே...

நீங்களெல்லாம்...

ஜி.எஸ்.டி தானோ!

ராஜகுமாரி

இருபத்துமூன்று எழுத்துகளே

இருந்துவிட்டுப் போகட்டும்

இந்த மூன்றெழுத்தால் வரும்

இம்சைகள் தீரட்டும்!

கி.சரஸ்வதி

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

அது முடியும் வரை

ஒரு வரி இருக்கும்

ஜி.எஸ்.டி... அது ஜி.எஸ்.டி!

ப. இராஜகோபால்

உலகின்

ஆகச்சிறந்த

முரண்...

சேவை - கட்டணம்.

maha40176220

எஸ்.டி.டின்னா

வரலாறு

ஜி.எஸ்.டின்னா

வரலாறு காணாது!

Anvar_officia

கட்டைப்பை வாங்கினாலும்

கட்டையில போனாலும்

கூடவே வந்து

தொலைவே!

lollumanix

? 75-ம் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்தியராக நீங்கள் பெருமைப்படும் ஒரு விஷயம்..?

சுதந்திரம் பெற்றதிலிருந்து 17மக்களவைத் தேர்தல்களை முறையாக நடத்தி உலகிலேயே மிக வலுவான ஜனநாயக நாடாக இந்தியா திகழ்வதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.

க.ரவீந்திரன்

நான் பெருமைப்படுவது இந்தியாவின் அணுசக்தி அறிவியல் வளர்ச்சிதான். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியா 1974-ம் ஆண்டு பொக்ரான் பாலைவனத்தில் அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. மின் உற்பத்தி, வேளாண்மை, மருத்துவம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றிற்கு மட்டுமே இந்தியாவில் அணுசக்தி பயன்படுத்தப்படுகிறது. இதில் ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் பணி குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபகேசன்

இன்னும் ஆயிரம் ஆண்டு கழித்துக் கேட்டாலும், இந்தக் கேள்விக்கு பதில்... மகாத்மா காந்திதான்!

நெல்லை குரலோன்

அப்போ வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்! இப்போ வேலைன்னு வந்துட்டா இந்தியன் என்பதில் பெருமைப்படுகிறேன்!

pbukrish

பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், பக்ரீத் என எல்லாப் பண்டிகைகளையும் பேதமின்றி சந்தோஷமாகக் கொண்டாடுவது.

skkaran_68

இத்தனை மதம், சாதி, இனம் சார்ந்த சூழ்ச்சிகள் இருந்தும் நம் மனதை விட்டு நீங்க மறுக்கும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற நிலைப்பாடு போற்றப்பட வேண்டிய ஒன்று.

iamrk_kamal

*****

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

*தகைசால் தமிழர் விருது பெற்றுள்ள நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கினால் யார் நடிக்கலாம்?

* ‘கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்ற வரி இலங்கையில் நிஜமானதுபோல் எந்த இலக்கிய வரி இப்போதுள்ள சூழலில் மிகப்பொருத்தம்?

* ‘இந்தக் கேள்வியை ஏன்தான் கேட்கிறாங்களோ' என்று உங்களுக்குத் தோன்றும் கேள்வி எது?

* கோபத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியை கூல் செய்து ஒன்றுசேர ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்யலாம்?

*சமைத்துப்பழகுகிறேன் பேர்வழி என நீங்கள் செய்த காமெடிகள் என்ன?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப: vasagarmedai@vikatan.com



source https://www.vikatan.com/news/general-news/vasagar-medai-august-31-2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக