Ad

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

கார் டயர் வெடித்து விபத்து; தாய், மகன் பலி - கோயிலுக்குச் சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்!

திண்டுக்கல் மாவட்டம் எரியோடையை சேர்ந்தவர் ஆனந்த்(32). சுதந்திரத் தின தொடர் விடுமுறையையொட்டி, குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று சாமிக்கும்பிட அவர் திட்டமிட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, ஆனந்த், அவருடைய மனைவி உத்திரசெல்வி(28), ஆனந்தின் தாய் மீனா(53), பாம்பாட்டி மணப்பாறையை சேர்ந்த உறவினர்கள் அய்யத்துரை(38), அவருடைய மனைவி மாலா(35), அய்யாத்துரை-மாலா தம்பதியரின் மகன் யோகித்(8) ஆகிய 6 பேரும் 'பொலிரோ' காரில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளனர்.

கார்

தொடர்ந்து அவர்கள், சாமி தரிசனம் செய்துவிட்டு தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக ஊர் திரும்பியுள்ளனர். காரை, ஆனந்த் ஓட்டி வந்துள்ளார். அவர்கள், விருதுநகர் மாவட்டம் ஆவியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் மதுரையை நோக்கி வந்துக் கொண்டிருந்தபோது காரின் பின்பக்க இரண்டு டயர்களும் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஆனந்த், மீனா இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மற்றவர்கள், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்‌. விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து ஆவியூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக காரியாப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்குச் சென்று விட்டு ஊர்திரும்பிய குடும்பத்தினர் சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/accident/kariyapatti-car-accident-mother-son-died-relative-injured

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக