Ad

திங்கள், 15 ஆகஸ்ட், 2022

``உலக வரைபடத்தில் புதுச்சேரி முக்கிய இடத்தை பிடிக்கும்” - முதல்வர் ரங்கசாமி

கடற்கரை சாலையில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்றிய முதல்வர் ரங்கசாமி, ``தங்களை தாங்களே ஆண்டு கொள்ளும் திறமை இந்தியர்களுக்கு இல்லை என்றும் இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி மறைந்து போனால் அவர்கள் மெல்ல மெல்ல உருவாக்கிய முற்போக்கு நாகரீகம் ஒரு இரவில் அழிந்துவிடும் என்றும் இந்திய விடுதலை பெறுவதற்கு முன்பு நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் சொன்னார்கள். சுதந்திரம் எனது பிறப்புரிமை என்றும் முழங்கிய விடுதலை வீரர்களின் தியாகத்தால் நம் அடிமை விலங்கை உடைத்தெறிந்தோம். நம் உணர்வில் ஊறிய தேசபக்தியினால் இந்திய திருநாட்டை ஒரு தனித்தன்மை மிக்க நாடாக உலக அரங்கில் உயர்த்தி இருக்கிறோம்.

முதல்வர் ரங்கசாமி

தேசத்தின் மாண்பை கட்டிக் காக்கும் பெருமைக்குரிய எல்லா தருணங்களிலும் புதுச்சேரி எப்போதும் முன்னணியில் இருந்து வந்திருக்கிறது. அதுமட்டுமல்ல அது வளர்ச்சிகளும் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வந்திருக்கிறது. அந்த சாதனையை எமது அரசு எப்போதும் போல் இப்போதும் முன்னெடுத்து செல்வதில் பெருமிதம் கொள்கிறது. புதுச்சேரி மக்களின் ஏகோபித்த ஆதரவோடு மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியை புதுச்சேரியில் கொண்டுவர மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆசியோடு பொறுப்பேற்ற எனது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த ஓராண்டில் ஆக்கபூர்வமான பல வளர்ச்சி பணிகளை செய்துள்ளது.

விவசாயப் பயிர்களின் உற்பத்தியை அதிகரித்திடவும் அதன் மூலம் வேளாண் பெருமக்களின் வருமானத்தை உயர்த்தவும் எனது அரசு வேளாண்மைக்கு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. 2021-22-ம் ஆண்டில் வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட 7,036 விவசாயிகளுக்கு பயிர்களுக்கான நிவாரணத் தொகையாக 7.10 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காரைக்கால் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதியும், நிதியும் மத்திய அரசிடம் கோரியுள்ளோம். பள்ளி, கல்லூரி தரவரிசையில் புதுவை 4-ம் இடத்தில் உள்ளது. ஆதிதிராவிட, பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக 12 திட்டங்களும், அந்த சமுதாய மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த 12 திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. மீன் உற்பத்தியை பெருக்கவும், மீனவர் நலனை மேம்படுத்தவும் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செம்மையாக செயல்படுத்தி வருகிறது.

மகளிர் முன்னேற்றத்திற்காக ஒருங்கிணைந்த பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நிலமற்ற ஏழை மக்களுக்கு கடந்த ஓராண்டில் 115 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இலவச அரிசி திட்டத்தின் நேரடி பண பரிமாற்றம் மூலம் அரிசிக்கு பதிலாக பணமாக மானியத்தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்துக்கு பிறகு சுற்றுலா, விருந்தோம்பல் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமான தளத்தை விரிவுபடுத்த தமிழக பகுதியிலிருந்து 395 ஏக்கர் நிலமும், புதுவை பகுதியில் 30 ஏக்கர் நிலமும் கையகப்படுத்த வேண்டும். இதற்காக ரூ.425 கோடி தேவைப்படுகிறது. இந்த நிதியை மத்திய அரசிடம் கோரியுள்ளோம்.

இத்திட்டம் நிறைவேறும் போது உலக வரைபடத்தில் புதுவை ஒரு முக்கிய இடத்தை பெறும். மாநில அமைதிக்கு மகத்தான காவல் சேவையை அரசு வழங்கி வருகிறது. காவலர் பணியிடங்கள் வெளிப்படையாக, நேர்மையாக நிரப்பப்பட்டுள்ளன. அரசு எந்திரம் தொய்வின்றி இயங்க அரசு ஊழியர்கள் நலனிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். 7-வது ஊதியக்குழு சம்பளம், நிலுவைத்தொகை, பதவி உயர்வு ஆகியவற்றை வழங்கியுள்ளோம். மக்களின் நலன் கருதியும், மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்லவும் எனது அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வரும்காலத்திலும் இதுபோன்ற புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு முனைப்பாக உள்ளது. மீண்டும் ஒரு முறை மாநில மக்கள் அனைவருக்கும் என் உளம்நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க பாரதம், வளர்க புதுவை மாநிலம்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-cm-speech-in-75th-independence-day-event

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக