Ad

வெள்ளி, 2 ஜூன், 2023

பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் `தமிழ்ப்பற்று' அரசியலுக்குப் பின்னால்..?!

`தமிழ் மொழியை கையிலெடுக்காமல் தமிழ்நாட்டில் அரசியல் செய்யமுடியாது என்பது மாநில கட்சிகள் மட்டுமில்லாமல் தேசிய கட்சிகளும் நன்குணர்ந்த விஷயம். அதிலும் தேர்தல் சீசன் நெருங்கிவிட்டால் போதும், நம் அரசியல் தலைவர்களுக்கு திடீரென்று `தமிழ் பாசம்' மழையாகப் பொழியும். அந்தவகையில், நாட்டின் பிரதான தேசிய கட்சிகளான பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் தமிழ்ப்பற்று கடந்த சில நாட்களாக பொங்கி வழிகிறது.

மதுரை ஆதீனம்

`தமிழ் ஒவ்வொரு இந்தியரின் மொழி' - பிரதமர் மோடி:

குறிப்பாக, அரசு முறை பயணமாக ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி கடந்த மே 25-ம் தேதி நாடு திரும்பினார். வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடி கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது, ``தமிழ் மொழி நம்முடைய மொழி. அது ஒவ்வொரு இந்தியரின் மொழி. உலகின் மிகத்தொன்மையான மொழி தமிழ். அந்த மொழி தந்த திருக்குறளை பப்புவா நியூ கினியா நாட்டில், அவர்களின் டோக் பிசின் மொழியில் எனக்கு வெளியிட வாய்ப்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!" என ஒரேயடியாகத் தமிழைப் புகழ்ந்து தள்ளினார்.

புதிய நாடாளுமன்றம் - செங்கோல் - பிரதமர் மோடி

அதைத்தொடர்ந்து, புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவை முன்னிட்டு, கடந்த மே 27-ம் தேதி தமிழ்நாட்டிலிருந்து 19 ஆதின மடாதிபதிகள் பிரதமர் மோடியை டெல்லி பிரதமர் இல்லத்தில் சந்தித்தனர். அப்போது தமிழில் மந்திரப் பாடல்களைப் பாடி, நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ள செங்கோலை பிரதமர் மோடியிடம் வழங்கி, ஆசீர்வாதம் செய்தனர். அதையடுத்து பேசிய பிரதமர் மோடி, ``சுதந்திரத்துக்குப் பிறகு புனித செங்கோலுக்கு உரிய மரியாதை கொடுத்து கௌரவமான இடத்தை அளித்திருக்க வேண்டும். ஆனால், அந்த செங்கோல் பிரயாக்ராஜ் ஆனந்த் பவனில் வாக்கிங் ஸ்டிக்காக காட்சிக்கு வைக்கப்பட்டது. எங்கள் அரசாங்கமோ இப்போது அந்த செங்கோலை மீட்டதோடு, அதை புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நிறுவப்போகிறது" என்று கூறி `காங்கிரஸ் ஆட்சியில் செங்கோலை வாக்கிங் ஸ்டிக்காக அருங்காட்சியகத்தில் வைத்து சிறுமைபடுத்தினார்கள். நாங்களோ இன்று உரிய மரியாதையுடன் நாடாளுமன்றத்தில் வைத்து பெருமை சேர்க்கப்போகிறோம்!' என ஸ்கோர் செய்தார் பிரதமர் மோடி.

அதன்பின்னர், மே 28-ம் தேதி புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா கொண்டாட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. புதிய நாடாளுமன்றத்தின் வளாகத்துக்குள் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா அரங்கில் செங்கோல் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த மோடி, செங்கோலுக்கு முன்பாக தரையில் விழுந்து வணங்கினார். அந்த சமயம், தமிழ்நாட்டின் ஆதீன மடாதிபதிகள் தமிழ் வேத மந்திரங்கள் ஓதினர். மேலும், திருஞானசம்பந்தரின் கோளறு பதிகம் பாடல்கள் இசைக்கப்பட்டது. பின்னர் ஆதீன மடாதிபதிகளிடமிருந்து செங்கோலைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, அதை புதிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு கொண்டுசென்று, மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே நிறுவினார்.

New Parliament Building பிரதமர் மோடி - புதிய நாடாளுமன்றம்

அதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ``தமிழகத்தில் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் செங்கோல் என்பது நீதி, நேர்மை மற்றும் சேவையின் அடையாளமாக விளங்கியது. நாடு சுதந்திரம் அடைந்தபோது மூதறிஞர் ராஜாஜி அறிவுரைப்படி, திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் உருவாக்கப்பட்ட செங்கோல் இப்போது நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த செங்கோல் அவையை சிறப்பாக வழிநடத்த உந்து சக்தியாக இருக்கும். மேலும், மக்களில் இருந்து ஒருவரை பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கும் ஜனநாயக நடைமுறையை கி.பி. 900-ம் ஆண்டின் தமிழக கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது!" என தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டின் வரலாற்றையும் பெருமையாகக் குறிப்பிட்டு பேசினார்.

தமிழக ஆதீனங்களுடன் பிரதமர் மோடி

இதையடுத்து, `புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்படுவது தமிழ்நாட்டுக்கே பெருமை' என அண்ணாமலை, நிர்மலா சீதாராமன் போன்ற பா.ஜ.க தலைவர்களும் இளையராஜா, ரஜினிகாந்த் போன்ற திரைபிரபலங்களும் பூரித்தனர். அதேசமயம், `நாடாளுமன்ற திறப்பு விழாவை மடாதிபதிகளுடன் மத நிகழ்ச்சிபோல நடத்துவதாகவும், மன்னராட்சி போல செங்கோல் நிறுவப்படுவதாகவும்' கூறி எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

`தமிழ்மொழி அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்கமாட்டேன்!' - ராகுல் காந்தி:

தமிழ் மொழியையும் தமிழ்நாட்டு செங்கோலையும் கையில் எடுத்துக்கொண்டு பிரதமர் மோடி ஸ்கோர் செய்த நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக ராகுல் காந்தியும் தன் பங்குக்கு தமிழ்மொழி மீதான பற்றை நாடு கடந்து பொழிந்திருக்கிறார். பத்து நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, ``நமது அரசியலமைப்பின்படி ஒவ்வொரு மாநிலத்தின் மொழி, வரலாறு, கலாசாரம் ஆகியவை அரசால் பாதுகாக்கப்பட வேண்டும். இதுவரையில் அதுதான் நடைமுறை. ஆனால், பா.ஜ.வும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சேர்ந்து இந்த நடைமுறை மற்றும் அரசியலமைப்பின்மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

அமெரிக்காவில் ராகுல்காந்தி

நான் புரிந்து கொண்டதன் அடிப்படையில், தமிழர்களுக்கு தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல. அது அவர்களின் வரலாறு, கலாச்சாரம், வாழ்வியல் முறை! எனவே, தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன். என்னைப்பொறுத்தவரையில் தமிழ்மொழியை அச்சுறுத்துவது, இந்தியக் கொள்கையையே அச்சுறுத்துவதற்கு சமம்!" என அதிரடியாகப் பேசியிருக்கிறார்.

ராகுல்காந்தி

`நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேசியகட்சிகள் வடமாநிலங்களில் செய்வதைப்போன்ற அரசியலைத் தென்மாநிலங்களில் செய்யமுடியாது. அது எடுபடாது. கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநில மக்கள் தங்களின் தாய்மொழிமீது பிரிக்கமுடியாத பிணைப்பைக் கொண்டவர்கள். குறிப்பாக, தமிழ்நாட்டில் தமிழை கையிலெடுக்காவிட்டால் எந்த கட்சிக்கும் அரசியல் இல்லை என்பதை எல்லா கட்சிகளும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றன. அந்தவகையில், தமிழ்நாட்டில் அதிகமாக நாடாளுமன்றத் தொகுதிகளை வென்றெடுக்க வேண்டுமெனில் முதலில் தமிழக மக்கள் மனதை வென்றெடுக்க வேண்டும். அதற்குத்தான் இரண்டு தேசிய கட்சிகளின் தலைவர்களும் தமிழ், தமிழர்கள் என தேர்தல் நேர கூப்பாடு போடுகிறார்கள்' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/prime-minister-modi-rahul-gandhis-tamil-politics

வியாழன், 1 ஜூன், 2023

நீர்ப்பாசனம் பெறும் விவசாய நிலம் 50% -க்கு மேல் அதிகரித்துள்ளது... 40% மழையை நம்பி உள்ளது!

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இந்த வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த விவசாயத் துறையின் வளர்ச்சி முக்கிய காரணமாகும். விவசாய வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது நீர்ப்பாசனம் ஆகும். 2022-23 காலகட்டத்தில் இந்தியாவில் நீர்ப்பாசனம் அதிகரித்துள்ளதாக நிதி ஆயோக் கூறுகிறது.

விவசாயம்

நிதி ஆயோக் அறிக்கையில், ``இந்தியாவில் மொத்தமாக சாகுபடியில் உள்ள 141 மில்லியன் ஹெக்டேரில், தோராயமாக 73 மில்லியன் ஹெக்டேர் அல்லது 52% சாகுபடி நிலங்கள் நீர்ப்பாசன வசதிகளைப் பெற்றுள்ளது.

 2016-ல் 41% விவசாய பரப்பு நீர்ப்பாசனம் பெற்றிருந்தது, அந்த அளவைவிட இப்போது நீர்ப்பாசன பரப்பு அதிகரித்துள்ளது.

 தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வறண்ட நிலப் பகுதிகளில் நீர்ப்பாசனப் பரப்பை அதிகரிக்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நீர்ப்பாசன பரப்பை விரிவுபடுத்துவதன்மூலம் வறண்ட கோடைக்காலம் மற்றும் பருவமழை மாற்றத்தால் அதிகரித்து வரும் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.

 PMKSY-AIBP திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேசத்தில் 21 முன்னுரிமை நீர்ப்பாசனத் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 17 வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.

இதனால் மாநிலத்தின் ஒட்டுமொத்த நீர்ப்பாசனப் பரப்பில் 16% அதிகரித்தது. நாட்டின் மொத்த நீர் பயன்பாட்டில், விவசாய பயன்பாட்டுக்கு 80% வரை தேவையுள்ளது. அதாவது, ஆண்டுக்கு 700 பில்லியன் கன மீட்டர் தண்ணீர் தேவையுள்ளது.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில் காரீஃப் அல்லது கோடையில் விதைக்கப்பட்ட பயிர்களின் தேவைக்கு நீர்ப்பாசனம் செய்வது அவசியமானது.  

போதிய பருவமழை இல்லாவிட்டால் விவசாய வருமானம் பாதிக்கப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கிராமப்புற பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

பருவமழை | விவசாயம்

நிபுணர்களின் கூற்றுப்படி, புவி வெப்பமடைதல் காரணமாகப் பருவமழை மாறுகிறது, அதனால் பருவம் மாறி மழை பெய்வதால் பயிர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

2018-19-ம் நிதியாண்டில், வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்டு) மற்றும் அரசாங்கத்தின் கூட்டாண்மை மூலம் நுண்ணீர் பாசன நிதி (எம்ஐஎஃப்) நிறுவப்பட்டது. நுண்ணீர் பாசன முயற்சிகளுக்கான ஆதாரங்களைத் திரட்டுவதில் மாநிலங்களுக்கு உதவுவதற்காக 5,000 கோடி ரூபாய் நிதியுடன் MIF-ஐ மத்திய அரசு உருவாக்கியது.

நாட்டில் உள்ள விளை நிலங்களில் சுமார் 60% நீர்ப்பாசன வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என ஜல் சக்தி அமைச்சகம் கூறுகிறது. நீரியல் மற்றும் புவியியல் கட்டுப்பாடுகள் காரணமாக சில பகுதிகளில் நீர்ப்பாசன வலையமைப்புகளை நிறுவுவது சாத்தியமில்லாமல் போகிறது. எனவே, சுமார் 40% சாகுபடி பரப்பு மழையை நம்பியே தொடர்ந்து இருக்கிறது என்பதையும், நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.



source https://www.vikatan.com/agriculture/farming/irrigated-agricultural-land-has-increased-to-over-50-40-depends-on-rain

ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாத உணவுப் பொருள்கள்.... எவை, ஏன்? | #VisualStory

Fridge

நம்மில் பலரும் வீட்டில் ஃபிரிட்ஜுக்குள் பால், காய்கறி, பழம், உணவு என எவ்வளவு முடியுமோ அவ்வளவு பொருள்களை வைத்துவிடவே நினைப்போம்.

முட்டை

ஃபிரிட்ஜுக்குள் எந்தப் பொருள்களை வைக்கலாம், எவற்றை வைக்கக் கூடாது, எவ்வளவு நாள் வைக்கலாம் என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.  

cooking

சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் சூடேற்றிச் சாப்பிடுவது ஆரோக்கியமான பழக்கம் அல்ல. மீண்டும் சூடேற்றப்படும்போது சில உணவுகள் சத்துகளை இழப்பதுடன், நேரங்களில் ஆபத்தானதாகவும் ஆகிவிடலாம்.

பூண்டு

பூண்டு, வெங்காயம், உருளைக்கிழங்கு, தேன் உள்ளிட்ட பொருள்களை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. 

தக்காளி

முட்டை, தர்பூசணி, தக்காளியையும்கூட ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது என்பது பெரும்பாலானோர் அறியாத விஷயம்.

Egg

முட்டைகளை ஃபிரிட்ஜில் வைப்பதைவிட, அறை வெப்பநிலையில் வைப்பதுதான் சிறந்தது. முட்டை குளிர்ச்சியான இடங்களில் வைக்க உகந்த பொருள் அல்ல.

Egg

முட்டையை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து அறையின் வெப்பநிலையில் வைக்கும்போது, முட்டையில் சில மாற்றங்கள் நடக்கும்.  

ஃபிரிட்ஜில் இருந்து எடுத்த முட்டையின் மேல், சில வாயுக்கள் ஈரமாகப் படரும். அதிகமாகப் படர்ந்த ஈரத்தால் பாக்டீரியாக்கள் முட்டை ஓட்டின் சிறு துளைகள் வழியே உள்ளே செல்லும்.

முட்டையின் உள்ளே சென்ற பாக்டீரியாக்களால் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தாக்கும் வாய்ப்பு உண்டாகும். எனவே முட்டையை தேவைக்கேற்ப வாங்கி, உடனே சமைத்து விடுவது நல்லது. முட்டையை அறை வெப்பநிலையிலேயே வைக்கவும்.

தர்பூசணி

தர்பூசணியை வெட்டிய உடன் சாப்பிட்டுவிடுவதே நல்லது. சிலர், வெட்டிய பழத்தின் மீந்த பகுதியை ஃபிரிட்ஜில் வைப்பார்கள். அது நல்லதல்ல.  

தர்பூசணி

வெட்டிய தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைத்தால், அப்படியே சுருங்கி, அதில் உள்ள சத்துகள் போய்விடும்.

தக்காளி

தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்து நீண்ட நாள்கள் பாதுகாக்க நினைக்க வேண்டாம். அதன் சுவை முற்றிலும் மாறி, ருசியற்றதாக்கி விடும். அதை காற்றோட்டமான இடத்தில் வைத்துப் பாதுகாத்துப் பயன்படுத்துவது நல்லது.

ஊறுகாய் & தொக்கு

அதேபோல், ஊறுகாயை நாம் ஃப்ரிட்ஜில் வைக்கத் தேவையில்லை.



source https://www.vikatan.com/ampstories/health/things-you-shouldnt-keep-in-the-fridge

சேலம்: பட்டாசு ஆலை தீ விபத்தில் 3 பேர் பலி - விபத்துக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை!

சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வந்தது. இதில், சதிஷ் உட்பட 9 பேர் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே சதீஷ்குமார், பானுமதி, நடேசன் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த மோகனா, மணிமேகலை, வசந்தா, பிரபாகரன், மகேஸ்வரி, பிருந்தா ஆகிய ஆறு பேர் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் சிகிச்சையில் உள்ள ஆறு பேருக்கும் 30 முதல் 60 சதவீதம் வரை தீக்காய பாதிப்பு இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பெற்றுவரும் ஆறு பேரும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். அப்போது ஜே.எம் 2 மேஜிஸ்திரேட் சிகிச்சையில் உள்ள நபர்களிடம் வாக்குமூலம் பெற்றார். பின்னர் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இதனிடையே மருத்துவமனையின் முன்பாக உறவினர்கள் கதறி அழும் காட்சி பார்ப்பவர்களை கண் கலங்க செய்தது. மேலும் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து தடவியல் துறை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தீவிர சோதனை நடத்தினர். விபத்து தொடர்பாக இரும்பாலை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, இறந்து போனவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் அறிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/crime/accidents/salem-3-death-in-firecracker-factory-fire-tamil-nadu-chief-minister-condoles

ஈரோடு: `கொசு மருந்து கொள்முதலில் முறைகேடு’ - ஓய்வுபெறும் நாளில் ஆணையர் பணியிடை நீக்கம்!

ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியின் ஆணையாளராக சையது உசேன் பணியாற்றி வந்தார். நகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிக்காக திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்திடம் கொசு ஒழிப்பு மருந்து வாங்கப்பட்டு வந்தது. கடந்த 19-ம் தேதி புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு 335 லிட்டர் கொசு மருந்துகளை திருச்சியில் உள்ள நிறுவனத்திடம் இருந்து வாங்கியதாகவும், அதற்காக ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 299 காசோலையாக செலுத்தப்பட்டதாகவும் நகராட்சி பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, நகராட்சித் தலைவர் ஜனார்த்தனன், துணைத் தலைவர் சிதம்பரம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கொசு மருந்து இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கிடங்கில் கொசு மருந்து இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து ஆணையர் சையது உசேனிடம் கேட்டபோது, அவர் முறையாக பதிலளிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.

செந்தில்குமார்

இதுகுறித்து நகராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் திருப்பூர் மண்டல நகராட்சி இயக்குநர் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கொசு மருந்து வாங்காமல் கணக்கு காட்டியது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நகராட்சி ஆணையர் சையது உசேன் புதன்கிழமை பணி ஓய்வு பெற இருந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த முறைகேடுக்கு உதவி புரிந்ததாக நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/governance/scam-in-procurement-of-mosquito-repellent-liquid-commissioner-suspended-on-date-of-retirement

இன்றைய ராசிபலன் 2.6.23 | Horoscope | Today Rasi Palan | வெள்ளிக்கிழமை | June 2 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/02062023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மும்பை: கணவனை சரியாக கவனிக்காத மனைவி; கோபத்தில் வளர்ப்பு மகளை தீ வைத்து எரித்த தந்தை

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் சிறிய பிரச்னைக்கெல்லாம் சண்டையிட்டுக்கொள்வது வழக்கம். அதிகமாக பணப்பிரச்னையால்தான் இது போன்ற தம்பதிகளிடையே பிரச்னை ஏற்படுகிறது. மும்பை தாராவி ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நந்த்கிஷோர் பட்டேல். இவர் காஜல் என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தார். காஜல் பெண் குழந்தை ஒருவரை தத்து எடுத்து வளர்த்து வந்தார். வளர்ப்பு மகளுக்கு இப்போது 20 வயதாகிறது. காஜலையும், வளர்ப்பு மகளையும் நந்த்கிஷோர் கவனித்துக்கொண்டார்.

ஆரம்பத்தில் வளர்ப்பு மகள் மோகினியை தனது சொந்த மகளைப்போல் நந்த்கிஷோர் கவனித்துக்கொண்டார். ஆனால் காஜல் அதிகமாக தனது வளர்ப்பு மகளிடம் அதிக கவனம் செலுத்தியதாக தெரிகிறது. நந்த்கிஷோரை சரியாக கவனிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் காஜலை பழிவாங்க நந்த்கிஷோர் முடிவு செய்தார்.

மோகினி வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருந்தார். அந்நேரம் வேண்டுமென்றே மோகினியுடன் நந்த்கிஷோர் தகராறு செய்தார். இத்தகராறு காரணமாக இருவரும் வீட்டிற்குள் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்நேரம் வீட்டில் இருந்த மண்ணெணய் எடுத்து மோகினி மீது ஊற்றி நந்த்கிஷோர் தீவைத்துவிட்டார். தீயால் அலறிய மோகினியை அவரது தாயார் காஜலும், பக்கத்து வீட்டுக்காரர்களும் தீயை அணைத்து சயான் மருத்துவமனையில் சேர்த்தனர்.

மோகினி 70 சதவீத காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிவித்திருக்கிறார். அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து தலைமறைவாக இருந்த நந்த்கிஷோரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். மோகினி மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



source https://www.vikatan.com/crime/man-arrested-for-setting-a-20-year-old-woman-on-fire-in-mumbais-dharavi