Ad

திங்கள், 22 ஜனவரி, 2024

`சாதிய தாக்குதல், நிர்வாண கொடுமை, கொலை மிரட்டல்'- MLA மகன், மருமகள்மீதான புகார் | FIR-ன் முழு விவரம்

பல்லாவரம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் மற்றும் அவரின் மனைவி மர்லினா ஆகியோர், தங்கள் வீட்டில் பணியாற்றிய 18 வயது இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில், திருவான்மியூர் போலீஸார் ஆன்டோ மதிவாணன் மற்றும் அவரின் மனைவி மர்லினா ஆகியோர்மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மிரட்டல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இவர்கள் இருவரும் தலைமறைவாக இருந்து வருவதால், தனிப்படை அமைத்து போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்கள்மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை, தற்போது வெளியாகி உள்ளது. அந்த முதல் தகவல் அறிக்கையில், ``நான்‌ பிளஸ் 2 முடிந்தவுடன்‌ மேற்படிப்புக்கு பணம்‌ தேவைப்பட்டதால்‌, இடைபட்ட காலத்தில்‌ வேலைக்கு செல்லவேண்டும்‌ என எனது விருப்பத்தின்‌பேரில்‌, சித்ரா என்பவர்‌ மூலம்‌ ஆன்டோ மதிவாணன் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தேன். எனக்கு மாதம்‌ 16,000/- ரூபாய்‌ சம்பளம்‌ என்று கூறினார்கள்‌.

நான்‌ போய்‌ 2 நாள்கள்‌ வேலை செய்தேன்‌. அந்த 2 நாள்களிலேயே எனக்கு பிடிக்காததால்‌, எனது அம்மாவிடம்‌ போன்‌ செய்து என்னை கூட்டிட்டு போகச் சொன்னேன்‌. அப்ப மர்லினா என்பவர்‌, `நான்‌ யாருனு தெரியுமா, நான்‌ எம்.எல்.ஏ-வின் மருமகள். நான் நினைத்தால் ஒரே போன் காலில் உங்க அம்மாவை தூக்கி காவல் நிலையத்தில் வைத்து அசிங்கபடுத்த முடியும்‌' என்று சொன்னார்கள்‌. `உங்க அம்மாவை உடையில்லாமல்‌ காவல்‌ நிலையத்தில்‌ உட்கார வைப்பேன்‌' என்று மிரட்டினார்கள்‌. 

எஃப்.ஐ.ஆர்

எங்க அம்மாவை ஏதாவது செய்து விடுவார்கள்‌ என்று பயந்து, எனது அம்மாவிடம்‌ எந்த உண்மையும்‌ சொல்லாமல்‌ இருந்துவிட்டேன்‌. என்னை பார்க்க வந்த என்‌ அம்மாவிடம்‌ எனது செல்போனைக் கொடுத்து விட்டார்கள்‌. அதன் பிறகு வாரத்திற்கு 2 நாள்‌கள் மட்டும்‌ பேசவேண்டும்‌, அதுவும்‌ அவர்கள்‌ சொல்வதை மட்டும்‌தான்‌ பேசவேண்டும்‌. அப்படி இல்லையென்றால்‌, செல்போனை மியூட்‌டில் போட்டு என்ன அடிப்பார்கள். 

கடந்த ஆகஸ்ட்‌ மாதம்‌ எனக்கு TIME FIX செய்து, FASTஆக வேலை செய்ய வைத்தார்கள். என்னால்‌ செய்ய முடியாததால்‌, மர்லினா ஷாப்பிங் போவதை நிறுத்திவிட்டு, காலை 11 மணி முதல்‌ இரவு 10 மணி வரை என்னை கரண்டி உடையும்‌ அளவிற்கு, எனது கை, கால்‌ முட்டி, மார்பில்‌ ரத்தம்‌ சொட்ட சொட்ட அடித்தார்கள்‌.

கால்‌ வலியோடு முட்டி போடச் சொன்னார்கள்‌. காலால்‌ எட்டி உதைத்தனர்‌. என்‌ வாயில்‌ இடிக்கும்‌ உரலால்‌ இடித்து வாயில்‌ இருந்து ரத்தம்‌ வரும்‌ அளவிற்கு அடித்தனர்‌. மர்லினா என்னை அடிக்கும்‌ போதெல்லாம்‌, சிசிடிவி கேமராவை ஆஃப் செய்துவிட்டு அடிப்பார்கள்‌. என்னை படுக்க வைத்து யூரின்‌ போகும்‌ பிறப்புறுப்பில்‌ காலால்‌ உதைத்தனர்‌.

ஆன்டோ , மர்லினா தம்பதி

என்னை படுக்க வைத்து காலால்‌ எட்டி உதைத்து, என்னை கொடுமைப்படுத்தினர்‌. குழந்தைகள் முன்பாகவே என்னை கொடுமைப்படுத்துவார்கள்‌. அவரது குழந்தை எதுவும்‌ நினைக்கக் கூடாது என்பதற்காக, குழந்தை முன்பு பாட்டு பாட வேண்டும்‌, நடனம் ஆடவேண்டும்‌ என்று கூறுவார்கள்‌. மர்லினா அடிப்பது இல்லாமல்‌ அவரின் கணவரும்‌ துடப்பத்தைக் கொடுத்து வேகமாக வேலை செய்‌ என்று அடிப்பார்‌. 

நான்‌ சமையல்‌ செய்யும்‌ போது எனக்கு சமைக்கத் தெரியாது என்று கூறியும்‌, சுமார்‌ 10 பச்சை மிளகாய்‌ கடித்து சாப்பிட சொல்வார்கள்‌. என்னை படிக்க வைப்பதாகக் கூறி MARKSHEET உட்பட அனைத்து அசல்‌ சான்றிதழ்‌களையும் வாங்கி வைத்து கொண்டனர்‌. இதனால்‌ எனது அம்மா என்னிடம்‌ பேசும்போது எனக்கு படிப்பு சம்பந்தமாக ரூ.2 லட்சம்‌ கட்டிவிட்டதாகவும்‌, அதனால்‌ `உனக்கு சம்பளம்‌ கொடுக்க முடியாது, நாங்கள் கட்டிய ரூ.2 லட்சத்தை, நீ வேலை பார்த்து கழித்து விடவேண்டும்‌' என்றும் கூறினார்கள்‌.

இளம்பெண்

என்னை மர்லினா வேலை செய்யும்படி அடித்து துன்புறுத்துவார்கள்‌. இதை அவர்‌ கணவர்‌ மற்றும்‌ அவர்களின்‌ உறவினர்களிடம்‌, நானாகத்தான்‌ காயம்‌ ஏற்படுத்தியதாகக் கூற வேண்டும் எனச் சொன்னார்கள்‌. இது மாதிரி நான்‌ கொடுமை அனுபவித்து வெளியில்‌ எப்படி வருவது எனத் தெரியாமல்‌, கஷ்டபட்டு இருந்தேன்‌. 

பொங்கல்‌ வந்ததால்‌ எங்க அம்மாவ பார்க்கணும்‌. எங்க அம்மாவ பார்த்து 7 மாதம்‌ ஆகிறது என்று கூறினேன்‌. என்னை ஆடைகளைக் களைந்து அடித்து துன்புறுத்தினார்கள்‌. ஜனவரி 13, 14 தேதிகளில் என்னை அவர்கள்‌ கோபம்‌ தீரும்வரை அடித்துவிட்டு, அவர்கள்‌ வழக்கறிஞர்‌ மூலம்‌ `நான்‌ ரூ.2 லட்சம்‌ வாங்கியிருக்கேன்‌. நான்‌ 3 வருடத்திற்கு இங்குதான்‌ வேலை பார்க்கணும்‌. இதை மீறினால்‌ என்‌ அம்மாமீதும்‌ என்‌ தம்பிமீதும்‌ நடவடிக்கை எடுத்து கொள்ளலாம்‌' என்று எழுதி, என்னிடம்‌ வாசித்து காட்டி கையெழுத்திட சொன்னார்‌கள்.

மர்லினாவுக்கு கோபம்‌ வரும்‌ போதெல்லாம்‌ என்னை அடிப்பதுடன்‌, என்‌ தலைமுடியை பிடித்து கத்திரிக்கோலால் வெட்டினார். எனது தலை முதல்‌ பாதம்‌ வரை மர்லினா அவர்கள்‌ கரண்டி, துடப்பம்‌ வைத்து அடித்து காயத்தழும்பு ஏற்படுத்தினார்‌. ஒருநாள்‌ பாத்திரம்‌ எடுக்கும்‌ சிங்க்கில்‌ குப்பையை போட்டு விட்டேன்‌. இதனால் சிங்க்கில் இருந்த பாத்திரத்தை வாயால்‌ எடுக்க சொல்லி அடித்து துன்புறுத்தினர்‌.

ஆன்டோ , மர்லினா தம்பதி

அவர்கள்‌ அடிக்கடி எனது சாதி பெயரை சொல்லி அடித்து துன்புறுத்துவார்கள்‌. `நீயே இல்லாத நாயி... சோத்துக்கு வழியில்லாம வந்த உனக்கு, என்ன திமிரு' என்று சொல்லி திட்டுவார்கள்‌. பலமுறை `உனது மார்க்‌ ஷீட்டை கிழித்து போட்டுவிடுவேன்‌. நீ பள்ளியில் படிக்கவில்லை என்று PROOF பண்ணிவிடுவேன்‌' என்றும்‌ கூறினார்‌. 

FIR

என் கையில்‌ இருக்கும்‌ காயத்தை மறைக்க, மெஹந்தி வைத்து மறைக்க சொன்னார்கள்‌. `மேற்கண்டவற்றை யாரிடமாவது கூறினால்‌ உன் வீட்டில்‌ உள்ளவர்களை கொலை செய்துவிடுவேன்‌' என்பதை கூறினார்கள்‌. மர்லினா வீடு மட்டுமன்றி, அவரது அம்மா வீட்டிற்கும் சென்று வேலை செய்ய சொல்வார்கள்‌. கடந்த 2023-ம் ஆன்டு ஆகஸ்ட்‌ மாதம்‌ முதல்‌ எனக்கு மட்டும்‌ தனியாக ரேஷன்‌ அரிசி கொடுத்து சமைத்துக்கொள்ளச் சொல்வார்கள். இரண்டு நாள்களுக்கு ஒருமுறை சமைத்த சோற்றை, ஃபிரிட்ஜில்‌ வைத்து சாப்பிட சொல்வார்கள்‌" என பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.  

அசல்‌ முதல்‌ தகவல்‌ அறிக்கை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கும்‌, இதர நகல்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும்‌ அனுப்பி வைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 18-ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், 4 நாள்களுக்குப் பிறகு, இன்றே அதன் நகல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



source https://www.vikatan.com/crime/nudity-caste-attack-death-threats-complaint-against-mlas-son-daughter-in-law-full-details-of-fir

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக