ஒவ்வொரு நாளும் மஸ்தான் துறைமுகத்திற்குள் செல்லும் போதும் ஷெர்கான் பதானின் அட்டூழியத்தை கவனித்தார். துறைமுக தொழிலாளியாக இல்லாத ஒருவர் உள்ளே வந்து தொழிலாள்ர்களை மிரட்டி பணம் வசூலிப்பதை முடிவுக்கு கொண்டு வர மஸ்தான் திட்டம் தீட்டினார். எந்த வித வம்புதும்புக்கும் போகாதவராக இருந்த நிலையில் தொழிலாளர்களுக்காக இக்காரியத்தில் இறங்க மஸ்தான் முடிவு செய்தார். தொழிலாளர்களில் நல்ல வாட்டசாட்டமாக இருக்கும் சிலரை தேர்வு செய்தார். ஷெர்கானும் நம்மைப் போன்ற ஒரு மனிதன் தான் என்றும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் ஷெர்கானை ஒழிக்க முடியும் என்றார். தொழிலாளர்கள் அவர் பக்கம் நின்றனர்.
ஷெர்கான் Vs ஹாஜி மஸ்தான்
வழக்கம் போல் வெள்ளிக்கிழமை ஷெர்கான் தொழிலாளர்களிடம் பணம் வசூலிக்க வந்தான். அவனுடன் நான்கு அடியாட்களும் வந்திருந்தனர். ஷெர் கான் வந்ததுதான் தாமதம், மஸ்தான் களத்தில் இறங்கினார். தான் சேர்த்திருந்த பத்து தொழிலாளர்களுடன் சேர்ந்து ஷெர்கானையும் அவனது அடியாட்களையும் அடித்து உதைக்க ஆரம்பித்தார். இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்கவில்லை, ஷெர்கான். அவனிடம் கத்தி இருந்தது. ஆனால் அவனுடன் நான்கு பேர் மட்டுமே இருந்தனர். மஸ்தானோ பத்து பேருடன் இருந்தார். லத்தி மற்றும் இரும்பு செயின் போன்றவையும் இருந்தது. ஷெர் கானும் அவனது அடியாட்களும் எதிர்த்து போராடினர். ஆனால் முடியாது என்ற ஒரு நிலை வந்தபோது உயிரை காப்பாற்றிக்கொள்ள முயன்றனர். ஷெர்கான் காயத்துடன் தப்பிச்சென்றுவிட்டான். மீண்டும் திரும்பவே இல்லை. துறைமுகத்தில் அவனது தொந்தரவு இல்லாமல் போனது.
முதல் முறையாக அடிதடியில் இறங்கிய மஸ்தானின் இச்செயலால் தொழிலாளர்கள் மத்தியில் அவரது மதிப்பு பல மடங்கு அதிகரித்தது. ஷேக்கும் மஸ்தானை தனது தொழில் பங்குதாரராக சேர்த்துக்கொண்டார். தங்கத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் எப்படி விற்பனை செய்து பணமாக்குவது என்ற தொழில் ரகசியத்தை கற்றுக்கொடுத்தார். அதனை பயன்படுத்திக்கொண்ட மஸ்தான் தங்கக் கடத்தலிலும் வாழ்க்கையிலும் மளமளவென்று முன்னேறிக் கொண்டிருந்தார். 1952ம் ஆண்டு மும்பை மாகாணத்தின் முதல்வராக இருந்த மொரார்ஜி தேசாய் திடீரென மது விற்பனைக்கு தடை விதித்தார். இத்தடை அற்புதமான ஒரு வணிக வாய்ப்பை திறந்துவிட்டது. மது கடத்தல்கார்ர்கள் கணிசமாக வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பு உருவானது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டவர்களில் மஸ்தானும் ஒருவர்.
கள்ளச்சாராயம், தங்கக் கடத்தல்:
ஷேக்குடன் சேர்ந்து கொண்டு மஸ்தான் கள்ளச்சாராயம் மூலம் பண மழையில் நனைந்தார். இருசக்கர வாகனம் மற்றும் சொந்த வீடு வாங்கி தான் எதிர்பார்த்திருந்த வாழ்க்கையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தார் மஸ்தான். ஆனால் எதிர்பாராத விஷயம் ஒன்று நடந்தது. மஸ்தானின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த ஷேக் கைது செய்யப்பட்டார். வரி ஏய்ப்பு மற்றும் தங்கக் கடத்தல் தொடர்பாக ஷேக்கை போலீஸார் கைது செய்தனர். மஸ்தானுக்கு பேரதிர்ச்சி. எனினும் மஸ்தானுக்கு இன்னுமொரு பிரகாசமான வாய்ப்பை ஷேக்கின் கைது உருவாக்கிக் கொடுத்தது. ஷேக் கைது செய்யப்பட்டதன் மூலம் அந்த இடத்திற்கு மஸ்தான் வரக் கூடிய வாய்ப்பு உருவானது.
ஷேக் சிறையில் இருந்த காலத்தில் மஸ்தான் தங்கக்கடத்தலில் தனக்கென தனிப் பாதையை ஏற்படுத்திக்கொண்டார். கடத்தல் என்றாலே மஸ்தான்தான் என சொல்லுமளவுக்கு மும்பையில் செல்வாக்குடன் இருந்தார். பொதுமக்களுக்கு நன்மைகள் செய்யவும் மஸ்தான் தவறவில்லை. மூன்று ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து வெளியில் வந்த ஷேக் மிகவும் கஷ்டத்தில் இருந்தார். இருந்த பணத்தையெல்லாம் வழக்குகளுக்கு போய்விட்டது. இருந்த சொத்துகளை விற்றுவிட்டு சொந்த ஊரான துபாய் செல்வதா அல்லது குதிரைப் பந்தயத்தில் பணம் கட்டுவதா என்ற குழப்பத்திலிருந்தார். அச்சமயத்தில் ஷேக்குக்கு வேறு வழியிருக்கவில்லை. மஸ்தானை சந்தித்து பேசினார். அப்போது மஸ்தான் அவருடைய தந்தை கற்பித்திருந்த நேர்மைக்கு உதாரணமான ஒரு விஷயத்தை செய்தார்.
தென்மும்பையில் உள்ள மதன்புரா என்ற இடத்தில் பாழடைந்த ஒரு குடிசைக்கு ஷேக்கை அழைத்து சென்றார் மஸ்தான். அங்கு கிடந்த பழைய துணிகளை எல்லாம் அகற்றிவிட்டு உள்ளே இருந்த ஒரு பெட்டியை மஸ்தான் ஷேக்கிற்கு காட்டினார். அதை திறந்தார் ஷேக். உள்ளே கண்ணை பறிக்கும் தங்க பிஸ்கட்கள்! ஷேக் கைது செய்யப்பட்ட போது தங்கக்கட்டிகள் அடங்கிய பெட்டி ஒன்றை. ஷேக்கிடம் கொடுப்பதற்காக துறைமுகத்தில் இருந்து மஸ்தான் வாங்கியிருந்தார். மஸ்தான் நினைத்திருந்தால் அந்த தங்க பிஸ்கட்கள் இருந்த பெட்டியை தானே வைத்து பணம் சம்பாதித்திருக்க முடியும். ஆனால் தனது தந்தை சொன்னபடி தொழிலில் நாணயம் வேண்டும் என்பதை மனதில் கொண்டு ஷேக்கின் தங்க பிஸ்கட்கள் இருந்த பெட்டியை திறக்காமல் அப்படியே வைத்திருந்தார். ஷேக்கிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மஸ்தானை கட்டிப்பிடித்துக்கொண்டு கண்ணீர் மல்கினார்.
எப்படி போலீஸாரிடமிருந்து தங்கத்தை காப்பாற்றினாய் என ஷேக் கேட்டார். பழைய துணிகள் போடப்பட்டு இருந்த அறையில் யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அங்கு மறைத்து வைத்ததாக மஸ்தான் தெரிவித்தார். மொத்த வாழ்க்கையும் முடிந்து போனதாக நினைத்த ஷேக்குக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. தன்னுடன் தொழில் பார்ட்னராக மஸ்தானும் சேர வேண்டுமென்று கேட்டுக்கொண்டார் ஷேக். மஸ்தானும் அவரது அன்பு வேண்டுகோளை தட்ட முடியாமல் ஏற்றுக்கொண்டார். 1955ம் ஆண்டு மஸ்தானுக்கு கிடைந்த 50 சதவீத தங்கத்தின் மூலம் 5 லட்சம் ரூபாய் கிடைத்தது. தனது துறைமுக தொழிலாளர் வேலையை விட்டுவிட்டு முழுநேர கடத்தல்காரராக மாறினார் மஸ்தான். துபாய் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்ற ஷேக் தங்கத்தை அனுப்பிக்கொண்டிருந்தார். மும்பையில் வரி கட்டாமல் துறைமுகத்தில் இருந்து வெளியில் எடுத்து வந்து அந்த தங்கத்தை விற்பனை செய்தார் மஸ்தான்.
மஸ்தானின் எட்டு வயது கனவு வாழ்க்கை கைக்கெட்டியது. ஆடம்பர காரில் வலம் வந்த மஸ்தான் எப்போதும் சிகரெட்களை புகைத்துக்கொண்டே இருப்பார்.
கடத்தல் தொழிலிலும் நேர்மை
செய்வது கடத்தல் தொழிலாக இருந்தாலும் நேர்மை இருக்கவேண்டும் என்று மஸ்தான் விரும்பக்கூடியவர். கடத்தலுக்காக யாருக்கும் அவர் துரோகம் செய்தது கிடையாது. இதனாலேயே கடத்தல்காரர்கள் மத்தியில் மஸ்தானுக்கு நல்ல பெயர் கிடைத்தது. பணமும் கொட்ட ஆரம்பித்தது. சிறிய அளவில் தங்கம் கடத்திக்கொண்டிருந்த மஸ்தான், ஷேக் வெளிநாட்டில் இருந்து தங்கம் அனுப்ப ஆரம்பித்த பிறகு இந்தியா முழுக்க தொழிலை விரிவாக்கினார். மும்பையில் இருந்து இந்தியா முழுக்க தங்கம் அனுப்ப ஆரம்பித்தார். குஜராத் அருகில் உள்ள தாமன் துறைமுகம் வழியாகவும் தங்கம் கடத்தப்பட்டுக்கொண்டிருந்தது.
1956ம் ஆண்டு குஜராத்தில் மிகப்பெரிய தங்கக் கடத்தல்காரராக இருந்த சுகுர் நாராயண் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் கடத்தலில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்வது என்று முடிவு செய்து கொண்டனர். மும்பை துறைமுகத்துக்கு வந்து இறங்கும் சுகுரின் கடத்தல் பொருட்களை மஸ்தான் பாதுகாப்பாக வெளியில் கொண்டு வருவார். தாமன் துறைமுகத்தில் வந்து இறங்கும் மஸ்தானின் பொருட்களை சுகுர் பத்திரமாக வெளியில் கொண்டு வந்தார். இருவரும் கடத்தல் தொழிலை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு செயல்பட்டனர். மஸ்தானுக்கு போதுமான அளவு பணம் வந்தது. ஆனால் மும்பையில் பெரிய ஆளாக இருக்க பணம் மட்டும் போதுமானது இல்லை. மும்பையில் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கரீம் லாலா மற்றும் வரதராஜ முதலியார் ஆகியோரிடம் நெருங்கிய நட்பை ஏற்படுத்திக்கொண்டார். ஒரு போதும் யாரையும் கொலை செய்யும் அளவுக்கு மஸ்தான் சென்றது இல்லை. கத்தியையோ அல்லது துப்பாக்கியையோ கையில் எடுத்தது கிடையாது. அதே சமயம் மும்பையில் நடந்த அனைத்து கடத்தல்களுக்கும் மூல காரணமாக மஸ்தான் இருந்தார். மாஃபியாக்கள் மட்டுமல்லாது அரசியல்வாதிகளிடமும் நல்ல தொடர்பில் இருந்தார் மஸ்தான்.
சஞ்சய் காந்தி அடிக்கடி மஸ்தானை வந்து பார்ப்பார். சிவசேனா தலைவர் பால்தாக்கரேயிடமும் மஸ்தானுக்கு நல்ல தொடர்பு இருந்தது. இதை அவரது வளர்ப்பு மகனாக சுந்தர் சேகர் ஒருமுறை உறுதிபடுத்தினார். பால்தாக்கரே மட்டுமல்லாது அனைத்து அரசியல் கட்சி தலைவர்களிடமும் நல்ல தொடர்பு இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். மஸ்தான் எதாவது வேலையாக மும்பையில் உள்ள தலைமை செயலகமான மந்த்ராலயா சென்றால் அனைத்து ஊழியர்களும் தங்களது வேலையை போட்டுவிட்டு அவரை பார்க்க கீழே இறங்கி வந்துவிடுவர். போலீஸ் அதிகாரிகள் அனைவருக்கும் மஸ்தான் கடத்தல் தொழில் செய்கிறார் என்று தெரிந்தாலும் அவரை ஒரு போதும் கைது செய்ததில்லை.
ஏழைகளின் நாயகன்
ஹாஜி மஸ்தானுக்கு பணம் வந்து மழையாக கொட்ட ஆரம்பித்த பிறகு ஏழைகளுக்கு அதிக அளவில் தானம் செய்தார். தினமும் அவரது வீட்டில் ஏராளமானோர் தங்கள் குறைகளுடன் நிவர்த்தி செய்யக் கேட்டு காத்து நிற்பர். ஒரு ராபின் ஹுட் போல் செயல்பட்டு வந்தார். மும்பையில் மஸ்தான் கடத்தல், கள்ளச்சாராயம் போன்றவற்றில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருந்தார். அவரின் வழியில் மற்ற மாஃபியாக்களான வரதாபாய் மற்றும் கரீம் லாலா ஆகியோர் குறுக்கிடவில்லை. அதோடு மஸ்தான் எதையும் அன்பால் சாதிக்கக்கூடியவராகவே இருந்தார். எந்த ஒரு சமாதான பேச்சுவார்த்தையாக இருந்தாலும் மஸ்தான் தான் முன்னின்று நடத்தி வந்தார்.
Also Read: நிழலுலக ராஜாக்கள்: ஹாஜி மஸ்தான் - மும்பையை ஆண்ட ஒரு தமிழன் | பகுதி 1
சமாதானத்தை முன் நிறுத்திய மஸ்தான் வன்முறைக்கு துணை போக வேண்டிய நேரம் வெகு விரைவிலேயே வரவிருந்தது. அதற்கு முக்கியமான ஒரு நபரின் அறிமுகமும் கிடைக்கவிருந்தது.
(தொடரும்)
- மும்பையிலிருந்து நமது நிருபர்
source https://www.vikatan.com/news/crime/rise-of-haji-mastan-a-series-on-underworld-dons-part-two
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக