Ad

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

1/11/2021 | இன்றைய ராசி பலன் | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today's Horoscope | rasi palan #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan



source https://www.vikatan.com/spiritual/astrology/01112021-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

சர்வைவர் - 49: `கேம் பிளானில் சேஞ்ச்' என கியரை மாற்றிய அர்ஜுன்... இன்று யாரெல்லாம் வெளியேறுவார்கள்?

‘இத... இத... இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்’ என்பது போல இதுவரை இரு அணிகளுக்கிடையே நடந்து கொண்டிருந்த போட்டி, இன்று ஜீவாத்மா, பரமாத்மா மாதிரி ஒன்றோடு ஒன்று ஐக்கியமாகியது. ஆம், ஒவ்வொரு அணியும் எதிரணி நபருடன் இணைந்து ஜோடியாகி போட்டியை சந்திக்க வேண்டும் என்பதுதான் வித்தியாசமான ஆரம்பம்.

இதில் ஒரு அணி மட்டுமே வெற்றி பெரும். மீதமுள்ள நான்கு அணிகளும் டிரைபல் பஞ்சாயத்திற்கு செல்ல வேண்டும். இரு அணிகளிலிருந்துமே தலா ஒருவர் வெளியேறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இனிகோ ‘இம்யூனிட்டி ஐடலை’ கையில் வைத்திருக்கிறார். எனவே அவர் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வசதி இருக்கிறது. எனில் யார் யார் வெளியேற்றப்படுவார்கள்?

சர்வைவரின் அடுத்தக்கட்ட ஆரம்பம் இந்த எபிசோடில் இருந்துதான் துவங்குகிறது. எனில் போட்டி இன்னமும் கடுமையாகவும் சுவாரஸ்யமாகவும் ஆகும் என்று யூகிக்கலாம்.

சர்வைவர் 49-ம் நாளில் என்ன நடந்தது?

சர்வைவர் - 49

எவ்வித முன்னுரையும் இல்லாமல் ‘களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்’ என்கிற அர்ஜுனின் குரலோடு எபிசோட் ஆரம்பித்தது. சமீபத்தில் பெய்த கடுமையான மழை, போட்டியாளர்களுக்கு வந்திருந்த கடிதங்கள், உறவுகளின் அன்பு போன்வற்றைப் பற்றி விசாரித்தார் அர்ஜுன். தனக்கு வந்திருந்த சாக்லேட்டுகளை எதிர்அணியுடன் பகிர்ந்து கொண்ட நாராயணனின் பண்பு பாராட்டத்தக்கது.

“ஓகே... இன்னிக்கு போட்டியைப் பற்றி பார்க்கலாம்” என்று ஆரம்பித்த அர்ஜுன் “உணர்வுகளை விட மனம் வலிமையாக இருந்தால் மட்டுமே போரில் வெற்றி பெற முடியும்” என்கிற மேற்கோளை சொன்னவுடனே புரிந்துபோயிற்று. இன்றைய போட்டியில் மனவலிமை மிக முக்கியமான தகுதியாக இருக்கப் போகிறதென்று.

“இன்னிக்கு ரெண்டு அணியும் கலந்து ஜோடியாக மாறப் போறீங்க... யார் உங்க ஜோடின்னு நீங்களே தீர்மானிச்சுக்கலாம்” என்ற அர்ஜுன் “நல்லா யோசிச்சு முடிவெடுங்க... உங்க பார்ட்னரை முடிவு செய்யறதுதான் இன்னிக்கு முக்கியமான விஷயமா இருக்கும்” என்கிற விஷயத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

முதல் வாய்ப்பு லேடி காஷிற்குத் தரப்பட்டது. அவர் நாராயணனைத் தேர்ந்தெடுத்தது சரியான முடிவில்லையோ என்று தோன்றியது. வலிமையான போட்டியாளரோடு ஜோடி சேர்ந்தால், இவர் சற்று சுணங்கினாலும் எதிரிலுள்ளவர் சமாளிப்பார் என்கிற சிறிய அனுகூலம் கிடைத்திருக்கும். “அவர் கூட இன்னமும் பழகலை” என்கிற காரணத்தைச் சொன்னார் லேடி காஷ். பழகுவதற்கு இதுவா அம்மணி நேரம்?! நாராயணனும் பதிலுக்கு “ஓகே” என்றார்.

சரண், லட்சுமியைத் தேர்ந்தெடுத்தது சற்று எதிர்பாராத டிவிஸ்ட். லட்சுமிக்கு மனவலிமை அதிகம் என்று சரண் யோசித்திருக்கலாம். ‘ரூல்ஸை மீறின நபர் என்பதால் எனக்கு நெருடல்தான்’ என்கிற பாட்டை இன்னமும் பாடிக் கொண்டிருக்கிறார் லட்சுமி. இவர் இருக்கும் அணியில் விக்ராந்த், உமாபதி ஆகியோரும் சரண் செய்த அதே பிழைகளைச் செய்திருக்கிறார்களே? அவர்கள் மீது ஏன் லட்சுமிக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை?! என்றாலும் சரணிற்கு ஓகே சொன்னார் லட்சுமி.

சர்வைவர் - 49

உமாபதி கொஞ்சம் கூட யோசிக்காமல் இனிகோ என்றார். இதில் ஆச்சரியமில்லை. இருவரும் நெருங்கிய தோழர்கள் என்பதால் புரிந்துணர்வோடு விளையாடுவார்கள். நந்தா, விக்ராந்த்தைத் தேர்ந்தெடுத்தார். எனில் கடைசியாக இருந்த ஜோடி ஐஸ்வர்யா மற்றும் வனேசாதான். அவர்களுக்கு வேறு வழியில்லை.

“நல்லா யோசிச்சுக்கங்க... இப்பக்கூட நீங்க தேர்வை மாத்திக்கலாம்” என்று அர்ஜுன் வலியுறுத்திய போது ‘உமாபதி’யை தேர்ந்தெடுக்க முடிவு செய்தார் ஐஸ்வர்யா. ஆனால், "நான் நிம்மதியாக விளையாடணும் சார்” என்கிற குத்தலான கமெண்ட்டின் மூலம் இந்த கோரிக்கையை நிராகரித்தார் உமாபதி. விளையாட்டின் போது ஐஸ்வர்யா நிறைய சத்தம் போடுவாராம்.

ஆக... ஐந்து ஜோடிகளின் வரிசை இப்படியாக அமைந்தது. லேடி காஷ் + நாராயணன், சரண் + லட்சுமி, உமாபதி + இனிகோ, நந்தா + விக்ராந்த், ஐஸ்வர்யா + வனேசா.

அணிகள் அமைந்த பிறகு போட்டியின் விதிமுறைகளைப் பற்றி விளக்கத் துவங்கினார் அர்ஜுன். ஒவ்வொரு ஜோடியும் எதிரெதிரே அமர வேண்டும். இரண்டு நபர்களும் இணைந்து மரத்தினால் ஆன ஒரு டிஸ்க்கை (disc) கால்களினால் அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதாவது இருவரின் கால்கள் தரும் அழுத்தத்தினால் அந்தத் தட்டு கீழே விழாமல் இருக்கும். யாராவது ஒருவர் தாக்குப் பிடிக்க முடியாமல் விட்டுவிட்டால்கூட தட்டு கீழே விழும். அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் விசை காரணமாக, மேலே தொட்டியில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் இருவரின் தலை மேலும் விழும். அவர்கள் தோல்வியுற்றதாக பொருள்.

சர்வைவர் - 49

ஆட்டம் துவங்கியது. போட்டியாளர்கள் கால்களை நீட்டி தட்டை அழுத்திப் பிடித்தார்கள். பிறகு “லெப்ட் காலை கொஞ்சம் நகர்த்திக்கோ...” என்பது போல் தங்களுக்கு செளகரியமான நிலை வரும்படியாக அசைவுகளை சரிசெய்து கொண்டார்கள். இந்தப் போட்டியில் ஒருவர் அதிக நேரம் தாக்குப் பிடிப்பதற்கு பல காரணிகள் இருக்கின்றன. ஒருவரின் கால்கள் நீளமாக இருந்து எதிர் நபரின் கால் குட்டையாக இருந்தால் சிரமம். அமரும் நிலையும் கால்களை நீட்டியுள்ள நிலையும் கூட முக்கியம். கால்களை அசைத்துக் கொண்டேயிருந்தால் தட்டு கீழே விழுவதற்கான சாத்தியம் அதிகம். கடல் பக்கத்தில் நடந்த போட்டி என்பதால் பலத்த காற்று வேறு இவர்களை அவஸ்தைக்குள்ளாக்கியது.

சர்வைவர் - 49

பலமான, இணக்கமான போட்டியாளராகக் கருதப்பட்ட உமாபதியும் இனிகோவும் ஆரம்பத்திலேயே சரியான பொசிஷன் அமையாமல் நெளிய ஆரம்பித்தார்கள். இதைப் போலவே லேடி காஷூம் நாராயணனும் நடனம் ஆட ஆரம்பித்தார்கள். 15 நிமிடங்கள் கழிந்தன. லேடி காஷால் தாக்குப் பிடிக்க முடியாமல் போகவே இந்த ஜோடி தோல்வியடைந்தது. மேலேயிருந்து இரு தொட்டி நீர் ‘தொபேர்’ என்று இவர்களின் மீது விழுந்தது. (இன்றைக்கு குளிக்கும் வேலை மிச்சம்!).

போங்காட்டம் ஆடுவதில் லட்சுமி திறமைசாலியாக இருந்தார். கைப்பிடியில் கைகளை வைக்காமல் பின்னால் நன்றாக சாய்ந்து கொண்டு கையை வைத்துக் கொண்டிருந்தார். இதை அர்ஜுன் கவனிக்கத் தவறிவிட்டார். போலவே ஐஸ்வர்யாவும் சில சமயங்களில் ஃபவுல் ஆட்டம் ஆடினார். ‘வனேசா சுமாரான ஆட்டக்காரர்' என்கிற எண்ணமே ஐஸ்வர்யாவிற்குள் இதுவரை இருந்தது. ஆனால் இந்தப் போட்டியில் வனேசா திறமையாக தாக்குப் பிடிப்பதை எண்ணி ஐஸ்வர்யாவிற்கு ஆச்சரியமாக இருந்ததாம்.

ஏற்கெனவே சிரமமாக போய்க் கொண்டிருந்த போட்டியில் அடுத்தத் திருப்பத்தை ஏற்படுத்தினார் அர்ஜுன். போட்டியாளர்கள் கைப்பிடியில் இருந்து கைகளை விலக்கி மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டுமாம். ஐஸ்வர்யா தனது பின்னந்தலையில் கைகளைக் கட்டிக் கொண்ட போது "அப்படிச் செய்யாதீங்க” என்று எச்சரித்தார் அர்ஜுன். சரணும் கைகளைத் தூக்கிவைப்பதில் சிரமப்பட்டார். நந்தாவும் விக்ராந்த்தும் ஒரு கச்சிதமான பொசிஷனில் இருந்தார்கள்.

சர்வைவர் - 49

ஒரு கட்டத்தில் லட்சுமி கையை கீழே வைத்ததால் "நீங்கள் தகுதிநீக்கம் செய்யப்படுகிறீர்கள்” என்று அர்ஜுன் சொல்ல லட்சுமி + சரண் ஜோடி போட்டியில் இருந்து வெளியேற நேர்ந்தது. "நான் என்ன சார் பண்ணேன்” என்று கேட்டார் லட்சுமி. தன்னிச்சையாக அவர் செய்த பிழையை அவரே உணரவில்லை போல. “முடியாமப் போய் தோத்திருந்தா கூட நல்லாயிருந்திருக்கும்" என்று பின்னர் வருந்தினார் LP.

லட்சுமியைப் போலவே வனேசாவும் கையை கீழே வைத்துவிட்டதால் அந்த ஜோடியும் தகுதிநீக்கம் செய்யப்பட்டு வெளியேறியது. ஆரம்பக் கட்டத்தில் தடுமாறிய உமாபதி + இனிகோ ஜோடி ஒரு மாதிரியாக செட்டாகி தாக்குப் பிடித்தது. ஆனால் ஒரு கட்டத்தில் உமாபதி கையை கீழே இறக்கி விட்டதால் இந்த ஜோடியும் வெளியே அனுப்பப்பட்டது.

ஆக... இறுதியில் எஞ்சி நின்ற நந்தா + விக்ராந்த் ஜோடி இந்தப் போட்டியில் வென்றது. தாக்குப் பிடித்து இவர்கள் அமர்ந்திருந்த நேரம் 46 நிமிடங்கள்.

சர்வைவர் - 49

“ஃபிட்னஸ் எந்த அளவிற்கு முக்கியம்னு சொல்லுங்க” என்று அர்ஜுன் கேட்டதற்கு "நாங்கள் ஒருவருக்கொருவர் சரியாகப் பேசிக் கொண்டு அதற்கேற்ப செயல்பட்டோம். வெற்றி கிடைத்தது" என்றார் நந்தா. மனைவி பரிசாக அனுப்பிய டீ-ஷர்ட்டை அணிந்திருந்த விக்ராந்த்திற்கு அந்த அதிர்ஷ்டமும் இணைந்து கொண்டது போல. இந்த ஜோடிக்கு இந்த வாரம் எலிமினேஷன் ஆபத்து இல்லை.

இந்தப் போட்டியில் தோற்ற நான்கு ஜோடிகளும் இன்று டிரைபல் பஞ்சாயத்திற்கு வர வேண்டும். வாக்களிப்பிற்குப் பின்னர் யார் எலிமினேட் ஆவார்கள் என்று தெரியும். ஏற்கெனவே சொன்னபடி இனிகோவிடம் இம்யூனிட்டி ஐடல் இருக்கிறது.

இந்தப் போட்டியை விடவும் மிக உக்கிரமான போட்டி இரு அணிகளுக்குள் பிறகு துவங்கியது. ஆம், ‘யாரை எலிமினேட் செய்வது?' என்பதை இரு அணிகளும் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தன. வேடர்கள் தீவில் இனிகோவிற்கு தனது ஆதரவைத் தெரிவித்தார் நந்தா. ஆனால் சரணிற்கு தன் ஆதரவைத் தெரிவித்தார் ஐஸ்வர்யா. இனிகோ மீது இவருக்கு முழு நம்பிக்கை வரவில்லையாம். ஏறத்தாழ நாராயணனும் இதே முடிவில் இருப்பதைப் போல் தோன்றுகிறது.

வேடர்கள் அணியில் எப்போதும் குடுமிப்பிடிச் சண்டைதான் நடக்கும். ஆனால் காடர்கள் அணி இப்போதும் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ பாடலை ஆசையாகப் பாடிக் கொண்டிருந்தது. ஆம். இவர்களுக்கு அணிப்பாசம்தான் முக்கியமாம். எனவே லட்சுமிக்குக் குறி வைத்துக் கொண்டிருந்தார்கள். “எல்லோரும் சேர்ந்து அடித்தால் லட்சுமிக்கு வலிக்கும். என்ன இருந்தாலும் லட்சுமி நம்ம டீமாப் போயிட்டாங்க. பார்த்து வலிக்கமா அடிக்கணும்” என்பது போல் பேசி அதற்கேற்ற வகையில் வாக்களிக்க தீர்மானித்தார்கள்.

சர்வைவர் - 49

தன்னைத்தான் டார்கெட் செய்வார்கள் என்று லட்சுமிக்கும் தெரியும். "வனேசாவும் புதிய நபர்தானே?” என்றெல்லாம்கூட கோத்து விட்டுப் குழப்பப் பார்த்தார் லட்சுமி. ஆனால் வனேசா வந்த புதிதிலேயே அணிக்கு தன் விஸ்வாசத்தை காட்டிவிட்டாராம். “அம்ஜத்தை வெளியே அனுப்பியதுதான் எனக்கு கில்டியாக இருக்கிறது” என்று தாமதமாக உருகிக் கொண்டிருந்தார் விக்ராந்த்.

காடர்கள் மறுபடியும் அதே தவறைத்தான் செய்கிறார்கள். பலவீனமான போட்டியாளர்களான லேடி காஷ், வனேசா ஆகியவர்களை விட்டுவிட்டு அணிக்கு உபயோகமாக இருக்கக்கூடிய லட்சுமியை வெளியே அனுப்புவது புத்திசாலித்தனமான காரியமாக தெரியவில்லை. ஆனால் இன்னொரு கோணத்தில் இது புத்திசாலித்தனமான முடிவுதான். ஏனெனில் இனி இது தனிநபர் ஆட்டமாக மாறப் போகிறது. எனில் லட்சுமி போன்ற போட்டியாளர்களை முதலிலேயே அனுப்பிவிட்டால் தங்களின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று விக்ராந்த்தும் உமாபதியும் யோசித்திருக்கலாம்.

Also Read: சர்வைவர் 48: லேடி காஷ் தேடிய `கடல்லயே இல்லியாம்’ ஸ்டார் ஃபிஷ்... நந்தாவுக்குக் கையில் என்ன பிரச்னை?

சர்வைவர் - 49

மூன்றாம் உலகம். இதுவரை வறட்சியாகவும் சோம்பலாகவும் காட்டப்படும் இந்த ஏரியா அம்ஜத்தின் குறும்பால் இன்று உற்சாகமாக தெரிந்தது. முன்பு காயத்ரி தனக்கு கலக்கித் தந்த அதே பாயசத்தை புதிதாக வருபவர்களுக்கு தரலாம் என்கிற சதியுடன் உற்சாகமாக அதற்கு திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தார் அம்ஜத். “இங்க ஒண்ணும் சரியில்ல... சாப்பாடு இல்ல. ஒண்ணும் இல்ல... நைட்ல பாம்பு வரும். பூச்சி வரும்ன்னு சொல்லிடலாம். வரவங்க பதறியடிச்சு தோத்துட்டு ஓடிடுவாங்க” என்று இவர் உற்சாகமாக சொல்ல, “நானும் காயத்ரியும் உங்களை அப்படித்தான் ஏமாத்தினோம். அந்தச் சமயத்துல எங்களுக்கு பாவமா இருந்துச்சு. இப்ப என்ன தோணுதுன்னா. உங்களை ஏமாத்தினதுல தப்பேயில்லை" என்று சொல்லிச் சிரித்தார் விஜி.

“வேடர்களாக இருந்தால் நாராயணன் அல்லது நந்தா இங்க வருவாங்க. காடர்களாக இருந்தால் லேடி காஷ் அல்லது லட்சுமியா இருக்கும்” என்று ஏறத்தாழ சரியான யூகத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார் அம்ஜத்.

டிரைபல் பஞ்சாயத்தின் வாக்கெடுப்பின்படி யாரெல்லாம் வெளியேறுவார்கள்?

பார்த்துடுவோம்.



source https://cinema.vikatan.com/television/survivor-episode-49-new-rules-and-new-teams-fight-for-their-place-in-the-game

வீட்டுக்குள் பதுக்கப்பட்ட 140 கிலோ கஞ்சா; பெண் கைது; சுற்றி வளைக்கப்பட்ட கஞ்சா கும்பல்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே கஞ்சா தாராளமாகப் புழக்கத்திலிருந்து வருகிறது. இதனைப் பயன்படுத்தும் இளைஞர்கள் பலரும், இதற்கு அடிமையாகி கொலைக்குற்றவாளிகளாக மாறும் அளவுக்கு கொண்டு போய்விடுகிறது. இந்த நிலையில்தான், புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் ஒரு வீட்டிலிருந்து கஞ்சா பொட்டலங்கள் தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் கை மாறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருச்சி சரக காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன், எஸ்.ஐ செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

கஞ்சா பொட்டலங்கள்

அப்போது திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் அவரின் மனைவி ஜானகி (35) என்பவர் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வரவழைத்து மொத்தமாக தன் வீட்டில் வைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வைத்ததைக் கண்டுபிடித்தனர். ஒரு வாரத்துக்கும் மேலாக ஜானகியைப் பின்தொடர்ந்த, போலீஸார் கஞ்சா வியாபாரிகளிடம் பேசியதைத் தெரிந்துகொண்டனர். மொத்தமாகக் கஞ்சாவை வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த ஜானகி 30-ம் தேதி கஞ்சாவைக் கைமாற்றத் திட்டமிட்டிருக்கின்றனர். இதனைத் தெரிந்துகொண்டு, ஜானகியைப் பின்தொடர்ந்த தனிப்படை போலீஸார், கஞ்சாவைக் கைமாற்றும்போது கையும் களவுமாகப் பிடித்தனர். விசாரணைக்காக திருக்கோகர்ணத்திலுள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு மேலும், பண்டல் பாண்டலாகக் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

இதையடுத்து மொத்தமாக ஜானகி வசமிருந்த 140 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களின் மதிப்பு ரூ.14 லட்சம் என்று கூறப்படுகிறது. ஜானகியைக் கைது செய்ததோடு, அவருக்கு உதவியாக இருந்த மேலும் சிலரையும் திருக்கோகர்ணம் போலீஸார் தேடி வருகின்றனர். இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ``புதுக்கோட்டையிலிருந்து வெளியூர்களுக்கு அதிகளவில் கஞ்சா கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரிலேயே தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை நடத்தினோம். மதுரையைச் சேர்ந்த செல்வி, பாலு என்பவர்கள் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து ஜானகியிடம் ஒப்படைக்கும் பணியைச் செய்திருக்கின்றனர். திருச்சிக்குச் செல்லும் ஜானகி, திருச்சியிலிருந்து, புதுக்கோட்டைக்குக் கஞ்சாவைக் கொண்டுவந்து தனது வீட்டிற்குள் பதுக்குகிறார்.

Also Read: பதவியேற்ற நாளில் கஞ்சா வழக்கில் கைதான கவுன்சிலர்; சிறையிலிருந்தபடியே துணைத் தலைவராகத் தேர்வு!

அதன்பின்பு வியாபாரிகளைத் தொடர்புகொண்டு திருக்கோகர்ணத்திலிருந்து வெளியூர்களுக்குக் கஞ்சாவைக் கைமாற்றி வந்திருக்கின்றனர். அதோடு, ஜானகியின் கணவர் அய்யப்பன், புதுக்கோட்டையைச் சேர்ந்த வனிதா என்பவரின் உதவியோடு, கஞ்சாவைச் சில்லறை விற்பனை செய்துவந்திருக்கிறார். ஜானகி கைது செய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து, தலைமறைவான மற்றவர்களையும் பிடித்து விசாரணை செய்து கஞ்சா நெட்வொர்க் அழிக்கப்படும்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/in-puthukottai-women-arrested-under-smuggling-case

"காரியம் துணை" எனக் களத்தில் பேசும் கேமியோ நாயகன்... பினிஷர் ஆசிஃப் அலியின் சக்சஸ் ஸ்டோரி!

அரபு மண்ணில், கடைசியாக, தாங்கள் ஆடிய 14 டி20 போட்டிகளிலும் வென்று, மரண ஃபார்மில், மிரள வைக்கிறது பாகிஸ்தான். இந்த உலகக் கோப்பையில், இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில், மூன்றிலுமே வெற்றி பெற்று, அரை இறுதியில் மிகச் சுலபமாகத் தடம் பதித்துள்ளது பாகிஸ்தான்.

இந்த வெற்றிகளுக்கான காரணிகளாக பாபர், ரிஸ்வான், ஷாகீன் அஃப்ரிடி எனப் பல பெயர்கள் இருந்தாலும், பைனல் பன்ச் கொடுத்தது ஆபத்பாந்தவனாக வந்த ஆசிஃப் அலிதான்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை, அதிவேகத்தோடு இருபுறமும் ஸ்விங்காகும் பந்துகள், லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின் வித்தைகள், அற்புதமான ஃபீல்டிங், ஓப்பனிங் வல்லமை என வாகை சூடுவதற்கான அத்தனை அம்சங்களும் நடப்பு அணியில் கனகச்சிதமாக அமைந்திருக்கின்றன. ஆனால், அதனையும் தாண்டி, கோப்பையைக் கைப்பற்றுவதற்கான பத்தாவது பொருத்தமான பவர் ஹிட்டிங் ஃபினிஷராக யார் இருக்கப் போகிறார் என்பது குறித்துத்தான் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே விவாதங்கள் எழுந்தன.

Pakistan

வலுவான அந்த அணியில், இது ஒன்று மட்டுமே மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. அப்படி ஒரு எண்ணம் எழுந்ததற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. சமீப ஆண்டுகளில் பாபரின் வரவுக்குப் பின், அவர்களது டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் வரிசையில் வீரர்கள் பக்காவாகப் பொருந்திப் போய், இலக்கில் பெரும்பங்கு எட்டப்பட்டு விட்டாலும், பல போட்டிகளில் ஃபயர் விடும் ஃபினிஷர்கள் இல்லாமல் நூலிழையில் வெற்றிகள் தவறிப் போய் வந்தன. அதே கதைதான், மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியாமல் போன போதும் நடந்திருந்தது. ஆனால், கடந்த இரண்டு போட்டிகள், தற்போதைக்கு ஃபினிஷர் இடத்துக்கு, "ஆள் தேவை இல்லை!" அறிவிப்பை வெளியிட வைத்துவிட்டது.

உபயம்: பாகிஸ்தானின் தற்போதைய மாஸ் ஹீரோவாக வலம் வரும் ஆசிஃப் அலி!

உள்ளூர்ப் போட்டிகளில் அவர் எப்போதும் வஞ்சனையின்றி ரன் குவிப்பவராகவே வலம் வந்திருக்கிறார், மேட்ச் வின்னராக அவதாரம் எடுத்திருக்கிறார். வெறும் 19 வயதில் மூன்று ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்த போதிலும் கூட, தனக்கு வாய்ப்புக் கிடைத்த முதல் அறிமுக டி20 போட்டியில், முல்தான் டைகர்களுக்கு எதிராக அபாரமான சதத்தைப் பதிவு செய்திருந்தார் ஆசிஃப். இதைத் தவிர்த்து அவரது கேமியோ ரோலுக்காகவே உற்று நோக்கப்பட்டு, நம்பிக்கைக்குரியவராகப் பார்க்கப்பட்டார்.

மிக நளினமாக, இலகுவாகப் பறக்க விடப்படும் அவரது பல சிக்ஸர்களை, உள்ளூர் மைதானங்கள் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கின்றன. இவ்வளவு ஏன், 2018 பிஎஸ்எல்லில் ஷாகீன் அஃப்ரிடி, பந்தால் கோலோச்சினார் என்றால், அந்த ஆண்டு, பேட்டை ஆயுதமாக்கி அதனைத் தனக்காகக் பேச வைத்து, 169 ஸ்ட்ரைக் ரேட்டோடு கலங்கடித்தவர் ஆசிஃப். அந்த சீசனை, இஸ்லாமாபாத் யுனைடெட் வெல்ல ஆசிஃபே பிரதான காரணம். அதே ஆண்டு நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவின் மசான்சி சூப்பர் லீக்கில், கேப் டவுனுக்காக ஆடியபோதும், அத்தனை பேருடைய கவனத்தையும் தனது பக்கம் கட்டிப் போட்டார் ஆசிஃப். குறிப்பாக, டர்பன் ஹீட்டுக்கு எதிரான போட்டியில், வெறும் 33 பந்துகளில் 80 ரன்களை விளாசி, மொத்த எதிரணியின் சப்த நாடியையும் ஒடுக்கி நிசப்தமாக்கினார். தனது டி20 கரியரில், 250-க்கும் அதிகமான பவுண்டரிகளை விளாசியிருக்கும் ஆசிஃப், அதற்குச் சமமான சிக்ஸர்களையும் பறக்க வைத்திருக்கிறார், என்னும் உபரித் தகவல் ஒன்றே, அவர் எவ்வளவு ஆபத்தான வீரர் என்பதனை அடிக்கோடிட்டுக் காட்டும்.

Also Read: அவுட், நாட் அவுட் - நடுவே குழப்பும் அம்பயர்ஸ் கால்... DRS ஆல் பாதிக்கப்படும் அணிகள்!

நிற்க! இது எல்லாம், உள்ளூர்க் கதைதான். சர்வதேசத் தளத்தில், எப்போதுமே, சொல்லிக் கொள்ளும்படியான மிகப்பெரிய ஆளுமையாக ஆசிஃப் விளங்கியதேயில்லை. 2018 பிஎஸ்எல்லில், சூப்பர் ஓவரில் அவர் பறக்கவிட்ட, சிக்ஸரும், அதற்கடுத்த போட்டியில் அவர் அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்களும், இவர்தான் பாகிஸ்தான் தேடிக் கொண்டிருந்த பவர் ஹிட்டர் எனக் கொண்டாட வைத்து, அவருக்கு பாகிஸ்தான் ஜெர்ஸியை அணிவித்து அழகு பார்க்க வைத்தது. ஆனாலும் கூட, அணி எதிர்பார்த்ததை முழுமையாகச் செய்துவிட ஆசிஃபால் இயலவில்லை.

2018-ல், ஜிம்பாப்வேக்கு எதிராக, அவர் அடித்த, 41 ரன்கள்தான் அவரது அதிகபட்ச டி20 ஸ்கோரே. சரி, ஒருநாள் போட்டிகளில் அவரது ஆட்டத்திறம் எப்படி என்று பார்த்தால், 25.46 ஆவரோஜோடு, மிகச் சுமாரான ஆட்டமே அவரிடமிருந்து வெளிப்பட்டிருந்தது. எனினும், அவர் இறங்கும் பின்வரிசையை மனதில் நிறுத்தி, சராசரியைப் புறந்தள்ளி, ஸ்ட்ரைக் ரேட்டைப் பார்த்தாலும், அதுவும், 122 என சராசரியாகவே இருந்தது. அதையும் தவிர்த்து, 2019 உலகக் கோப்பையில் அடித்த ரன்கள், கடைசியாக பாகிஸ்தான் மேற்கொண்ட தென் ஆப்ரிக்கா தொடரில் இவரது ஆட்டத்திறம் என ஆசிஃப், தொடர்ச்சியாகவே சோபிக்கத் தவறிக் கொண்டிருந்தார்.

Asif Ali

குறிப்பாக டி20-ல், சர்வதேச அரங்கத்தில் அவரது பேட் எப்பொழுதுமே சிறப்பாகப் பேசியதுமில்லை, சாதனைக் கதைகள் படைத்ததுமில்லை. உள்ளூர் டி20-களில், 147 என்னும் அதிரடி ஸ்ட்ரைக்ரேட்டை வைத்திருக்கும் ஆசிஃப், இந்த உலகக் கோப்பைக்கு முன்னதாக, சர்வதேச அரங்கில் டி20-ல் வெறும் 123.7 என்ற அளவில் மட்டுமே ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருந்தார். மொத்தமாகவே அவரது டி20 கரியர், தோல்வி கண்டது எனச் சொல்ல முடியாதுதான் என்றாலும், அவர் இறங்கும் பொசிஷனுக்கு, அவர் முழுமையான நியாயம் கற்பித்துவிடவுமில்லை.

இது எல்லாம்தான், இந்த உலகக் கோப்பைக்கான அணியில் ஆசிஃபின் பெயர் இடம் பெற்றபோது, பல உதடுகளை முணுமுணுக்க வைத்தது. 'பாகிஸ்தானில் பவர் ஹிட்டர்களுக்கா பஞ்சம்?!' எனக் குறைபட்டுக் கொள்ள வைத்தது. பாகிஸ்தான் ரசிகர்களே கூட, இது குறித்து வெளிப்படையாகக் கருத்துக்களைத் தெரிவிப்பதும் கண்டனக் குரலினை எழுப்புவதுமாக இருந்தனர். அத்தகைய சந்தேகங்களும், விமர்சனக் கணைகளும் ஆதாரமற்றவை இல்லை.

ஆசிஃப் கடந்து வந்து காலச்சுவடுகளை, பின்நோக்கிப் பார்த்தால், அவரின் மேல் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தது, இஸ்லாமாபாத் யுனைடெட்டின் தலைமை பயிற்சியாளரான டீன் ஜோன்ஸ்தான். யாருமே வைக்காத, அசைக்க முடியாத நம்பிக்கையை அவர் ஆசிஃப் மீது வைத்திருந்தார். அந்த அணி, 2018-ல் சாம்பியன் மகுடம் சூடியதற்கு அணியை இரண்டு தண்டவாளங்களாக இருந்து, முன்னெடுத்துச் சென்ற இவ்விருவருமேதான் காரணகர்த்தாக்கள். தனது இரண்டு வயதுக் குழந்தையை, ஆசிஃப் புற்று நோய்க்குப் பறிகொடுத்து, இடிந்துபோய் இருந்தபோது, அதைப் பற்றி பேச முற்பட்டு பேசவே முடியாமல் கண்கலங்கி விடைபெற்றிருந்தார் டீன் ஜோன்ஸ். அந்த அளவுக்கு இருவருக்கும் இறுக்கமான பிணைப்பு இருந்தது. அந்தச் சமயத்தில் இருந்த அவரது ஆசிஃபுக்கான ஆதரவு, கடைசி வரை நீடித்தது.

Asif Ali
2020 ஆண்டு, பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரிலும், இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்த அணியிலும், ஆசிஃபின் பெயர் விடுவிக்கப்பட்ட போதும் டீன் ஜோன்ஸ்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் இந்த முடிவு ஆச்சர்யமளிக்கிறது என, ஆசிஃபுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தார்.

ஆயினும், ரசிகர்களின் ஆதங்கத்திலும் நியாயம் இல்லாமல் இல்லை. முன்னதாக இங்கிலாந்தில் பேக் டு பேக் அரைசதங்களை அடித்தவர்தான் என்றாலும், 2018 ஆசியக் கோப்பையில், இந்தியாவுக்கு எதிரான அவரின் ஆட்டம் நினைவுகூரத்தக்கதுதான் என்றாலும், அதெல்லாம் பழங்கதை. அவரது சமீபத்திய ஃபார்ம், கவலைக்கிடமாகவே இருந்து வந்தது. 2018-ல், உச்சகட்டமாக 139 ஆக இருந்த டி20 ஸ்ட்ரைக்ரேட், 2019-ல் 108 என அதள பாதாளத்திற்குப் பாய்ந்துவிட்டது. 2020-ல் அவரது சராசரி, வெறும் 10 என்பதுதான் உலகக் கோப்பையில் அவரது இடம் குறித்த கேள்வியை ரசிகர்கள் மனதில் எழுப்பியது.

விமர்சனங்களுக்கான விடையை ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் விதம் வெல்வேறு மாதிரியாக இருக்கும். சிலர் வார்த்தைகளால் வடிப்பர், சிலர் வஞ்சம் சுமப்பர், ஆசிஃப் அலி போன்ற சிலரோ "காரியம் துணை" என அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவர்.

வார்ம் அப் போட்டியிலேயே, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 18 பந்துகளில் 32 ரன்களைச் சேர்த்து நம்பிக்கை முத்திரையை, தன் மேல் பதித்தார் ஆசிஃப். இந்தியாவுக்கு எதிரான போட்டியில், அவர் களம் இறங்க வாய்ப்பின்றி, பாபரும் ரிஸ்வானும், போட்டியை முடித்து வைத்துவிட்டனர்.

Also Read: கிரிக்கெட் போட்டியில் முட்டிபோடாத விவகாரம் ... வருத்தம் தெரிவித்த குவின்டன் டிகாக்... மாற்றம் ஏன்?

தவறவிட்ட அந்த வாய்ப்பு, அடுத்த இரண்டு போட்டிகளிலுமே கிடைக்க, அதனைக் கனகச்சிதமாகப் பயன்படுத்தி இருந்தார் ஆசிஃப். நியூஸிலாந்துக்கு எதிரான 27 ரன்களும் சரி, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக அவர், 7 பந்துகளில் அடித்த 25 ரன்களும் சரி, டாப் கிளாஸ் கேமியோக்கள். ஷார்ட் பால்கள், ஃபுல் பால்கள் எனச் சந்தித்த அத்தனையும் பவுண்டரி லைனைத் தாண்டிப் பறந்தன.

இந்த உலகக் கோப்பையில், அவர் சந்தித்திருப்பது 19 பந்துகள்தான், அதில் 7 சிக்ஸர்களும், ஒரு பவுண்டரியும் பறந்துள்ளன. இந்த உலகக் கோப்பையில் 274 என்னும் அவரது ஸ்ட்ரைக் ரேட்டுக்குப் பக்கத்தில் கூட, வேறு எந்த பேட்ஸ்மேனாலும் தற்சமயம் நெருங்க முடியாது. அப்பட்டியலில் அவர்தான், முதல் இடத்தில் உள்ளார்.

நம்பர்களைத் தாண்டி, அந்த ஆட்டங்களில் அவரிடம் பிரதிபலித்த நம்பிக்கையின் பிம்பம்தான், அவரை ஆகச்சிறந்த ஃபினிஷராக அடையாளம் காட்டியுள்ளது. நவீனைத் தவிர்த்து, அடுத்த ஓவரில் கரீமின் பந்துகளை டார்கெட் செய்த சாமர்த்தியமாகட்டும், முந்தைய ஓவரில், ஷதாப் கானுக்குக் கடைசிப் பந்தில் சிங்கிளுக்கு 'நோ' சொல்லி, ஸ்ட்ரைக்கை தன்வசம் வைத்துக் கொண்ட தன்னம்பிக்கையோடு கூடிய தைரியமாகட்டும், ஷார்ட் பால், ஸ்லோ பால் என்ற பாகுபாடின்றி, 'சிங்கிளால் பேசத் தெரியாது, சிக்ஸரால் மட்டுமே பேசத் தெரியும்' என ஆசிஃப் காட்டிய வாண வேடிக்கையாகட்டும், அத்தனையும்தான் பாகிஸ்தானின் வெற்றியை உறுதி செய்தன.

6, 0, 6, 0, 6, 6 என அந்த ஓவரில் அடித்த ஒவ்வொரு சிக்ஸரும், ரசிகர்களின் இதயங்களைச் சுமந்தே உயரத்தில் பறந்தன. நடுவில் மறுக்கப்பட்ட சிங்கள்களும் அவரது ஆளுமையை அடையாளம் காட்டின.
Asif Ali

இரண்டு போட்டிகளிலுமே, ஆட்டமிழக்காததோடு, வின்னிங் ஷாட்டையும் அவரேதான் அடித்தார். சவுத்தியின் பந்துகளில், அவரடித்த அடுத்தடுத்த சிக்ஸர்கள் எல்லாம், சாதாரண ஒருவருக்குச் சாத்தியமே இல்லை. இக்கட்டான நிலையில் இருந்த அணிக்கு, இரண்டு போட்டிகளிலுமே வெற்றியைப் பரிசாக வழங்கி உள்ளன ஆசிஃபின் இன்னிங்ஸ்கள்.

ஓப்பனிங் மற்றும் மத்திய வரிசையில் ஏற்கெனவே பலம் கொண்டதாக மாறி நிற்கும் பாகிஸ்தானுக்கு, பின்வரிசைக்கு அபரிதமான பலம் சேர்த்திருக்கிறது, ஆசிஃபின் தற்போதைய ஃபார்ம். எஞ்சியுள்ள போட்டிகளிலும், இது தொடருமேயானால், 2009 சாம்பியன்கள், இந்த வருட கோப்பையை நோக்கியும் ராக்கெட் வேகத்தில் பயணிப்பார்கள்.


source https://sports.vikatan.com/cricket/the-rise-of-a-successful-finisher-asif-ali-and-his-importance-in-the-pakistan-team

யூரோ டூர் 12: சரிந்த பேரரசுகள், உருவான புதிய நாடுகள்... முதல் உலகப்போரின் உண்மையான வெற்றியாளர் யார்?

முதல் உலகப்போரின் முடிவில் ஜெர்மன், ரஷ்யா, ஆஸ்திரியா - ஹங்கேரி, மற்றும் ஒட்டோமான் எனும் நான்கு பெரும் பேரரசுகள் சரிந்தன. ஜெர்மனியில் House of Hohenzollern, ரஷ்யாவின் Romanovs in Russia மற்றும் ஆஸ்திரியா - ஹங்கேரியின் Habsburg-Lorraine எனும் ஐரோப்பாவின் மூன்று சக்திவாய்ந்த முடியாட்சிகள் முடிவுக்கு வந்தன. உலகின் பொருளாதார சமநிலை மாறியது. ஐரோப்பிய நாடுகள் கடனில் மூழ்கின. அமெரிக்கா வல்லரசாக ஓங்கியது.

போரின் பின்னர் வெடித்த புரட்சிகளும், புதிதாய்ப் பிறந்த நாடுகளும்

உலகப்போர்தான் முடிவுக்கு வந்ததே தவிர ஐரோப்பாவிற்குள் சண்டையும் சச்சரவுகளும் முடிவுக்கு வரவே இல்லை. மழை விட்டும் தூவானம் விடாத கதையாக, அங்கொன்றும் இங்கொன்றுமாக புகைந்து கொண்டே இருந்தன. முதல் உலகப்போரின் இறுதியில் ரஷ்யப் புரட்சியால் ஈர்க்கப்பட்ட தீவிர அரசியல் கருத்துக்களின் பரவல், தொடர்ச்சியான உள்நாட்டுப் போர்களுக்கும், தீவிர கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிச எதிர்ப்பு சக்திகளுக்கு இடையே மோதல்களுக்கும் வழிவகுத்தது. அதே போல பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் காலனித்துவத்துக்குள் அதிருப்தி அடைந்த நாடுகள் சுதந்திரத்திற்காக போராடின.

முதல் உலகப்போர்

முதல் உலகப் போர் ஐரோப்பாவின் வரைபடத்தையே மாற்றி வரைந்தது. அத்திப்பட்டி போல சில நாடுகள் உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போயின. பல புதிய நாடுகள் உருவாகின. ஆஸ்திரியா-ஹங்கேரி எனும் ஒரு பெரும் சாம்ராஜ்ஜியம் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டு ஆஸ்திரியா, ஹங்கேரி, செக்கோஸ்லோவாக்கியா, யூகோஸ்லாவியா போன்ற புதிய நாடுகள் பிறந்தன.

பால்டிக்கில் லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா ஆகிய மூன்று நாடுகள் புதிதாக முளைத்தன. ஆனால் இவை எதுவுமே போருக்குப் பிந்தைய ஒப்பந்தத்தில் இருக்கவில்லை. எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பதுபோல இந்த நாடுகள் அனைத்தும் ரஷ்யப் புரட்சி மற்றும் முதல் உலகப் போரின் முடிவைத் தொடர்ந்து உருவான பெரும் குழப்பத்தைப் பயன்படுத்தி தத்தமது சுதந்திரத்தை அறிவித்துக்கொண்டன.

ரஷ்ய புரட்சி 1917-1923

1917 ரஷ்ய புரட்சிகள் போல்ஷிவிக்குகளின் செம்படைக்கும் (Red Army of the Bolsheviks), ரஷ்ய கம்யூனிச எதிர்ப்பு சக்திகளின் கூட்டமைப்பான வெள்ளை ராணுவத்திற்கும் (White Army of union of Russian anti-communist forces) இடையே ஒரு சிக்கலான போராட்டத்தைத் உருவாக்கியது. அதோடு சேர்த்து பசுமை ராணுவம் (Green Armies) எனப்படும் விவசாயிகளின் குழுக்கள் வேறு தங்கள் சமூகங்களை இரு தரப்பு கொள்கையிலிருந்தும் பாதுகாக்க ஆயுதம் ஏந்தின. இவை மூன்றுக்கும் இடையிலும் பயங்கரமான சண்டை நடந்தது. இறுதியில் வெள்ளை ராணுவம் தோற்கடிக்கப்பட்டு, சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம், டிசம்பர் 1922 இல் உருவாக்கப்பட்டது.

பின்லாந்து | Finland

பின்லாந்து சிவில் யுத்தம் – 1918

முதல் உலகப் போர் தொடங்கியபோது பின்லாந்து ரஷ்ய பேரரசின் ஒரு பெரிய ஆட்சிப்பகுதியாக இருந்தது. 1917இல் உருவான ரஷ்யப் புரட்சி, பின்லாந்தில் ஒரு பெரும் அதிகார வெற்றிடத்தை ஏற்படுத்தியது. ரஷ்யாவிடம் இருந்து சுதந்திரத்தை விரும்பும் ஒரு குழுவுக்கும், அந்தப் பிரிவினையை எதிர்த்த குழுவுக்கும் இடையே ஒரு பெரும் போராட்டம் உருவானது. 1919ல் பின்லாந்து ரஷ்யாவிடம் இருந்து பிரிந்து, ஒரு சுதந்திரக் குடியரசாக மாறியது.

ஜெர்மன் புரட்சி 1918-1919

பிரிட்டிஷ் கடற்படைக்கு எதிரான கடைசிப் போரில் தற்கொலைத் தாக்குதலுக்கு உத்தரவிட்டதால், ஜெர்மன் மாலுமிகள் அக்டோபர் 1918-இல் அதிகாரிகளுக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபட்டனர். முதல் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்கும், போரின் போது அவர்கள் அனுபவித்தத் துன்பத்திற்கும், இழப்புகளுக்கும் மக்கள் தங்கள் தலைவர்களைக் குற்றம் சாட்டியதால், உள்நாட்டு கலவரம் ஜெர்மனி முழுவதும் பரவியது. அதைத் தொடர்ந்து பேரரசர் கைசார் பதவி துறந்து நெதர்லாந்துக்கு நாடு கடத்தப்பட, ஜெர்மன் ஒரு சுதந்திரக் குடியரசாக நவம்பரில் அறிவிக்கப்பட்டது.

Also Read: யூரோ டூர் - 11 | விக்டோரியா மகாராணியின் பேரனே ஏன் பிரிட்டனுக்கு எதிராகப் போர் தொடுத்தார்?

எஸ்டோனியன் – ரஷ்ய போர் 1918-1920

முதல் உலகப் போர் தொடங்கியபோது எஸ்டோனியா, ரஷ்யப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்து, போரின் இறுதி ஆண்டில் அது ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டது. ரஷ்ய புரட்சி மற்றும் ஜெர்மனியின் தோல்வியைத் தொடர்ந்து பின்லாந்தைப் போலவே எஸ்டோனியாவும் ஒரு சுதந்திர நாடாக மாறியது. நவம்பர் 1918இல் ஜெர்மன் துருப்புகள் சரணடையத் தொடங்கியதை சாதகமாகப் பயன்படுத்தி சோவியத் ரஷ்யா மீண்டும் எஸ்டோனியாவைக் கைப்பற்றும் நோக்கில் தாக்கத் தொடங்கியது. ஆயினும் லாட்வியா, பிரிட்டன், White Russian படைகள் மற்றும் ஸ்காண்டிநேவியா நாடுகள் எஸ்தோனியாவுக்கு உதவியது. இறுதியில், பிப்ரவரி 1920இல், ரஷ்யா எஸ்டோனியாவை கைவிட்டுச் செல்ல, அது ஒரு சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.

முதல் உலகப்போர்

லாட்வியன் - ரஷ்யா போர் 1918-1920

எஸ்டோனியாவைப் போலவே, லாட்வியாவும் முதல் உலகப் போருக்குப் பிறகு ரஷ்யாவிலிருந்து சுதந்திரம் பெற்று தனி நாடானது. லாட்வியன் ராணுவம், ஜெர்மன் மற்றும் எஸ்டோனிய ராணுவத்தின் உதவியோடு ரஷ்யா வசம் இருந்த தங்கள் நிலத்தின் பெரும்பகுதியை போரிட்டு திரும்பப் பெற்றது. ஆனால் உதவி என்ற பெயரில் ஓடி வந்த ஜெர்மன், அந்த பிரதேசத்தை ஆதிக்கம் செலுத்த முயன்றது சிறிது காலத்துக்குள்ளேயே லாத்வியாவுக்கு புரிந்ததால் லாட்வியன் மற்றும் எஸ்டோனியப் படைகள் நேச நாடுகள் தலையிடும் வரை மீண்டும் ஜெர்மனிக்கு எதிராக தொடர்ந்து போரிட வேண்டியிருந்தது. இறுதியில் ஆகஸ்ட் 1920 இல், ரஷ்யா, லாட்வியன் சுதந்திரத்தை அதன் கையில் ஒப்படைத்து விலகிக் கொண்டது.

போலிஷ் - ரஷ்யன் போர் 1919-1921

ஜெர்மன், ஆஸ்ட்ரோ - ஹங்கேரியன் மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளை உள்ளடக்கி தனக்கான ஒரு தனி நாட்டை உருவாக்கி, முதல் உலகப் போரின் முடிவில் போலந்து தன்னை ஒரு சுதந்திர நாடாக அறிவித்தது. போலந்துக்கும் ரஷ்யாவிற்குமான போர், சோவியத் ரஷ்யாவுடன் எல்லைப் பிரச்னையாகத் தான் ஆரம்பத்தில் தொடங்கியது. பின்னர் கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் இருந்த கம்யூனிஸ்ட் கொள்கைகளை மேற்கு நோக்கி விரிவாக்க, இந்தப் போரை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது ரஷ்யா. போலந்து ஆரம்பத்தில் சில வெற்றிகளை ஈட்டினாலும் பிறகு தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து கிட்டத்தட்ட வார்சா வரை பின்வாங்கியது. பின் வார்சாவில் வைத்து திருப்பி அடித்து ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு மார்ச் 1921இல் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது.

போலிஷ் - உக்ரைனியன் போர் 1918-1919

அக்டோபர் 1918இல் ஆஸ்ட்ரோ - ஹங்கேரிய சாம்ராஜ்யம் சரிந்த உடனேயே, உக்ரேனிய மக்களும் தம் சுதந்திரத்தை நாடி, மேற்கு உக்ரேனிய மக்கள் குடியரசை தனி நாடாக பிரகடனப்படுத்தினார். ஆனால் அவர்கள் அறிவித்த சில பிரதேசங்கள் ஏற்கெனவே போலந்தால் உரிமை கோரப்பட்டதால் அந்த இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் போர் தொடங்கியது.

உக்ரேனிய ராணுவம் தம் எல்லையை மீட்க மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியுற்றன. ஜூலை 1919ல் போதுமான ஆயுதங்களும் வெடிபொருள்களும் இல்லாத காரணத்தால் உக்ரைன் போலந்திடம் தோற்று தனது மேற்கு உக்ரேனிய நிலங்களை போலந்துக்குப் பறிகொடுத்தது.

போலந்து | Poland

போலிஷ் - லிதுவேனியன் போர் - 1920

முதல் உலகப் போருக்கு முன்னர் வரை ரஷ்யப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த லிதுவேனியா 1915 முதல் ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டது. ரஷ்யப் புரட்சி மற்றும் முதல் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்வியைத் தொடர்ந்து அதுவும் ஒரு சுதந்திர நாடாக மாறியது. முதலில் ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்ட லிதுவேனியா, ஜூலை 1920 சமாதான ஒப்பந்தத்துடன் போரை முடித்துக்கொண்டது. அதன் பின் போலந்து - ரஷ்யா சோவியத்துக்கு இடையேயான போரில் போலந்து பின்வாங்குவதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட லிதுவேனியா, முன்னர் ரஷ்யாவுடனான உடன்படிக்கையில் ரஷ்யா பறித்துக்கொண்ட கொண்ட தமது நிலங்களை மீண்டும் கைப்பற்றியது. இவர்களுக்கு இடையேயான இந்தப் போர் நவம்பர் 1920 இல் லீக் ஆஃப் நேஷன்ஸின் உதவியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

கிரேக்க - துர்கிஷ் போர் 1919-1922

முதல் உலகப் போரில் ஒட்டோமான் பேரரசு தோற்கடிக்கப்பட்ட பின், அதன் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நிலப்பரப்பை கிரேக்கத்திற்கு தருவதாக நேச நாடுகள் உறுதியளித்தன. கிரேக்கப் படைகள் மே 1919இல் ஸ்மிர்னாவில் (இஸ்மிர்) தரையிறங்கி அனடோலியாவின் சில பகுதிகளைக் கைப்பற்றின. ஆனால் துருக்கியோ நிலங்களைப் பிரித்து ஆக்கிரமிப்பு செய்வதை எதிர்த்தது. வலிமைமிக்க துருக்கி ராணுவம் கிரேக்கத்துக்கு எதிரான போரில் அவர்களை தோற்கடித்து செப்டம்பர் 1922இல் மீண்டும் அந்த நிலங்களைக் கைப்பற்றின. இந்த மோதலின் போது இரு தரப்பிலும் பல பொதுமக்கள் கொல்லப்பட்டு பல குடியிருப்புகள் அழிக்கப்பட்டன. இந்த யுத்தத்தின் வெற்றியின் மூலம் நவீன துருக்கியின் இன்றைய எல்லைகள் நிறுவப்பட்டன.

எகிப்தியன் புரட்சி - 1919

பிரிட்டிஷ் படைகள் 1882இல் எகிப்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து முதல் உலகப் போர் தொடங்கியபோது, இது நம்ம ஆள் என்பது போல எகிப்தை பிரிட்டிஷின் ஆட்சியின் கீழ் இருக்கும் நாடாக பிரிட்டன் அறிவித்தது. ஆனால் முதல் உலகப் போரின் போது ஆங்கிலேயர்களால் தாம் நடத்தப்பட்ட விதத்தில் அதிருப்பதி அடைந்த எகிப்தியர்கள், போர் நிறுத்தப்பட்டவுடன் பிரிட்டிஷிடம் இருந்து தமது சுதந்திரத்திற்காக போராடத் தொடங்கினார். 1919இல் நிகழ்ந்த தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் பல புரட்சிகளில் சுமார் 800 எகிப்தியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு மேலும் எகிப்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது சாத்தியமில்லை என்று உணர்ந்த பிரிட்டன் பிப்ரவரி 1922இல் எகிப்திய சுதந்திரத்தை அறிவித்தது.

போரில் இறந்த ராணுவ வீரர்

ஐரிஷ் போர் 1919-1921

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அயர்லாந்து ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் ஐரிஷ் Sinn Féin கட்சி 1918 பொதுத் தேர்தலில் அதிக ஆதரவைப் பெற்று ஐரிஷ் குடியரசை சுதந்திர தனி நாடாக அறிவித்தது. இதனால் அயர்லாந்துக்கும் பிரிட்டிஷ் படைகளுக்கும் இடையே கொரில்லா போர் ஆரம்பமானது. இதன் விளைவாக 1921ல் கைச்சத்திடப்பட்ட ஆங்கிலோ-ஐரிஷ் ஒப்பந்தம் அயர்லாந்து தனிப் பிராந்தியமாகப் பிரிவதை உறுதி செய்தது. ஒரு தன்னாட்சி நாடாக ஐரோப்பிய கண்டத்தில் தெற்கு அயர்லாந்து மாற, வடக்கு அயர்லாந்து ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்தது.

உண்மையான வெற்றி யாருக்கு?

என்னதான் இந்த நாடுகள் தமக்கான சுதந்திரத்தை பெற்றுக்கொண்டாலும் முதல் உலகப் போரின் உண்மையான வெற்றியாளர் அமெரிக்காதான். மிகவும் புத்திசாலித்தனமாக செயற்பட்ட அமெரிக்கா போர் முடியும் தறுவாயில்தான் உள்ளே நுழைந்தது. இதனால் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் ரத்தக்களரி இவர்களுக்கு ஏற்படவில்லை. பொருளாதாரம் சீர் குலையவில்லை. புரட்சிகள் வெடிக்கவில்லை. மாறாக மற்ற நாடுகளை விடவும் மிகவும் வலிமை பொருந்தியதாக அசுரத்தனமாக எழுச்சியுற்றது. ஒரே இரவில், உலகின் பொருளாதார பலம் பொருந்திய முன்னணி சக்தியாக மாறியது.

அமெரிக்க போர் விமானம்
புதிதாக முளைத்த நாடுகள் உண்மையிலேயே அவர்களுக்கான சுதந்திரத்தை அனுபவித்தார்களா? முதல் உலகப்போருக்கு பிந்தைய ஐரோப்பா எப்படி இருந்தது? போரின் பின்னரான அவர்கள் வாழக்கை எப்படி மாறியது? அதல பாதளத்துக்குள் வீழ்ந்த ஐரோப்பா மீண்டும் எழுந்தது எப்படி? அடுத்த 20 வருடங்களில் மறுபடியும் ஒரு உலக யுத்தம் வெடிக்கக் காரணமாக நிகழ்ந்த சம்பவங்கள் என்னென்ன? வரும் வாரங்களில் பார்க்கலாம்!

யூரோ டூர் போலாமா?



source https://www.vikatan.com/social-affairs/international/euro-tour-the-aftermath-of-world-war-1-and-how-it-changed-europe

COP26: உலகை காக்க ஒன்றுகூடும் உலகத்தலைவர்கள்; இந்த மாநாட்டின் முக்கியத்துவம் என்ன?

1992-ம் ஆண்டு, உலக நாடுகள் `பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு மாநாடு’ (United Nations Framework Convention on Climate Change) என்னும் பெயரில் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளவும், சமாளிக்கவும், தீர்வு காணவும், உலகளாவிய சட்டங்களையும், விதிகளையும், வகுக்க இந்த ஒப்பந்தம் வழிவகுத்தது. 1995-ல் முதல் உச்சி மாநாடு ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரில் நடைபெற்றது. தற்போது க்ளாஸ்கோவில் நடைபெறவுள்ளது 26-வது உச்சி மாநாடாகும்.

உலக வெப்பமயமாதலுக்குக் காரணமாக விளங்கும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை உலக நாடுகள் முதல் முறையாக அங்கீகரித்துள்ளன. இச்சிக்கலான பிரச்சினைக்குத் தனியொரு நாடு தீர்வைக் காண முடியாத சூழலில், பன்னாட்டுச் சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் உதவியுடன் உலக நாடுகள் கூட்டாக ஆலோசிக்கும். 2015 பாரிஸ் நகரில் நடைபெற்ற பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றுள் முக்கியமானது பருவநிலை மாற்றப் பேரழிவைத் தவிர்க்க உலகளாவிய வெப்பத்தை 20 செல்ஷியஸ் (3.6F) அளவுக்குக் குறைவாகக், குறிப்பாக 1.50 செல்ஷியஸ் (2.7F) அளவில் வைத்திருக்க வேண்டும் என நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

COP26 climate conference in Glasgow, Scotland

பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்க ஸ்காட்லாந்து நாட்டின் க்ளாஸ்கோ நகரில் 26-வது சிஓபி உச்சிமாநாடு அக்டோபர் 31- நவம்பர் 12 வரை இரு வாரங்கள் நடைபெறும். இந்த உச்சிமாநாட்டை இத்தாலியும், இங்கிலாந்தும் கூட்டாக நடத்தும். 2015 பாரிஸ் ஒப்பந்த மாநாட்டுக்குப் பிறகு இந்த மாநாடு 196 நாடுகளின் 30,000 பிரதிநிதிகள் பங்கேற்புடன் பிரம்மாண்டமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்திருக்க வேண்டிய இந்த உச்சிமாநாடு கோவிட் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இப்போது நடைபெற உள்ளது.

பருவ மாற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் அரசுகளுக்கு இடையேயான குழு (ஐபிசிசி) 2021 ஆகஸ்டில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் `மனித இனத்தின் மனிதாபிமானமற்ற செயல்களே உலக வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணம் என்றும் அதன் விளைவாக இன்றைக்கு பருவநிலை விரிவாகவும், வேகமாகவும், தீவிரமாகவும் மாறி வருகிறது’ என்றும் எச்சரித்துள்ளது.

`தட்பவெப்பம் நிலை தீவிரமாதல், அதீத வெள்ளப் பெருக்கு, கடுமையான வெப்பம், கொடுமையான வறட்சி, உயிரினங்கள் முற்றிலுமாக அழிதல், பனி மலை உருகுதல், கடல் மட்டம் உயருதல்’ உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களுக்குப் பருவநிலை மாற்றம் காரணமாகிறது என ஐபிசிசி விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

`மனித இனத்துக்கான சிகப்பு அபாயக் குறியீடு’ என ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலர் அண்டோனியோ குட்டெரஸ் இந்த அறிக்கையில் சுட்டிக் காணப்பட்டுள்ள அபாயங்களை விவரித்துள்ளார்.

பசுமை இல்ல வாயு ஏற்கனவே வெளியேறி வளிமண்டலத்தில் பரவி அங்கேயே நிலை பெற்றுள்ளது. ஆகவே உலக நாடுகள் இணைந்து வாயு வெளியேற்றத்தை இப்போதே உடனடியாகத் தடுத்து நிறுத்தினாலும் கூட, தட்ப வெப்ப நிலை அதிகரிப்பு இந்த நூற்றாண்டின் பாதி வரை தொடர்ந்து நீடிக்கும். ஆனால் இந்த இலக்கை எட்ட ஒரேயொரு வாய்ப்புண்டு. உலக நாடுகள் பசுமை இல்ல வாயுவை `நிகர பூஜ்யம்’ (Nett Zero) ஆகக் குறைக்க முடிந்தால், 2050-ல் உலக வெப்பமயமாதலை நிச்சயம் 1.50 செல்ஷியஸ் (2.7F) அளவுக்குக் கொண்டு வர முடியும். இந்த இலக்கை எப்படி எட்ட என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதைத்தான் உலக நாடுகள் கூடி முடிவெடுக்க வேண்டும்.

Climate Change

Also Read: காலநிலை மாற்றம்: `நம் அடுத்த தலைமுறை பாதுகாப்பாக இல்லை!' - குழந்தைகள் குறித்த யுனிசெப் எச்சரிக்கை

உச்சி மாநாட்டின் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட சுமார் 120 நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும், பங்கேற்று பருவ நிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறைக்க தங்கள் உறுதிப்பாட்டை விளக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள் தங்கள் கருத்துகள், பரிந்துரைகள், ஆய்வறிக்கைகள், திட்டங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு புதிய முனைவுகளை மேற்கொள்ள உறுதி கூறுவார்கள். அரசு சாரா அமைப்புகளும், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களும், பருவநிலை மாற்றத்தால் காடுகள், விவசாயம், பொருட்காட்சி ஆகியவற்றுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்த அமர்வுகளில் பங்கேற்று தங்கள் கருத்துகளைப் பதிவு செய்வார்கள்.

அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உச்சி மாநாடு வழக்கம்போல் நிறைவடையும். முந்தைய சிஓபி25 உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு நிறைவேற்றப்படவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலர் அண்டோனியோ குட்டெரஸ் தனது ஆதங்கத்தையும், வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். எனவே நடப்பு சிஓபி26 உச்சி மாநாட்டில் அவரது கருத்து தொடர்பான வாத விவாதங்கள் எழுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

சிஓபி உச்சி மாநாடு ஒவ்வொரு வருடமும் நடைபெற்றாலும், பங்கேற்கும் தலைவர்கள் பருவநிலை மாற்றத்தைக் குறைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையேனும் சமர்ப்பிக்க வேண்டுமென பாரிஸ் உச்சி மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. நடப்பு ஆண்டுக் கூட்டத்தில் 2030க்குள் எட்ட வேண்டிய இலக்குகளையும் தெரிவிக்க வேண்டும். மேலும் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் வளர்ச்சி அடையாத நாடுகள் பருவ நிலை மாற்றத்தைத் தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை வழங்கும் கோரிக்கைக்கும் சிஓபி26 உச்சி மாநாடு முடிவெடுக்குமெனத் தெரிகிறது. வளர்ந்த பணக்கார நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர் ஏழை நாடுகளுக்கு வழங்குவதாக 2009 உச்சி மாநாட்டில் அறிவித்தன. ஆனால் இது நடைமுறைக்கு வராமல் அறிக்கையோடு நின்றுவிட்டது. 2021 செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக நாடுகளின் பருவநிலை மாற்றம் தொடர்பான திருத்தப்பட்ட இலக்குகள் மிகவும் பலவீனமாக இருப்பதால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலக வெப்பமயமாதல் 2.70 செல்ஷியஸ் (4.9F) அளவுக்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.

solar farm

Also Read: "காலநிலை மாற்றம் என்பது பொய்!"- ட்ரம்ப் வாதத்துக்கு இயற்பியல் நோபல் பரிசு சொல்லும் பதில் என்ன?

பருவநிலை மாற்றத்தைக் குறைக்க உச்சி மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் ஏட்டளவில் ஒப்புக் கொண்டாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பல்வேறு பிரச்சினைகளால் தயக்கம் காட்டுகின்றன. அதிக அளவு பசுமை இல்ல வாயுவை வெளியேற்றும் சீனா முந்தைய உச்சி மாநாட்டில் அளித்த உறுதிமொழியில் சில திருத்தங்களை அக்டோபர் 28 அன்று வெளியிட்ட என்டிசி அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதை படிம எரிபொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் ஆஸ்திரேலியா மற்றும் ரஷிய நாடுகள் தங்கள் உறுதிமொழியைக் காப்பாற்றுவதில் ஆர்வமின்றி உள்ளன. சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவைத் தொடர்ந்து உற்பத்தி செய்வோம் என்று கூறுகிறது. நிலக்கரி உற்பத்தி, இறக்குமதி மற்றும் நுகர்வில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக விளங்கும் இந்தியா இதுவரை எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை. இந்தோனேஷியா, தென் ஆப்பிரிக்கா, மலேசியா மற்றும் மெக்சிகோ நாடுகளும் இதேபோல் தயக்கம் காட்டுகின்றன. உலகின் மிகப் பெரிய மழைக் காடாகவும், பல்லுயிர்களின் வாழ்விடமாகவும், வளிமண்டலத்தில் கரியமில வாயுவை அகற்றுவதிலும் முக்கியப் பங்களிக்கும் அமேசான் காடுகளை அழிப்பதில் பிரேசில் தீவிரம் செலுத்துவது கவலையளிக்கும் விஷயமாகும்.

மொத்தத்தில் 2030-ம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 45% குறைக்கும் இலக்குக்கான உறுதிமொழி சிஓபி26 உச்சி மாநாட்டில் வலுப்பெறாது என்றே தோன்றுகிறது. இதன் காரணமாக நிகர பூஜ்ய வாயு வெளியேற்றம் மற்றும் 1.5 செல்ஷியஸுக்கும் குறைவான உலக வெப்பமயமாதல் ஆகியவை 2050-ல் சாத்தியப்படாது. ஆனால் இந்தத் தோல்வி வானியல் ரீதியாக பேரழிவை ஏற்படுத்தலாம். 1.5 மற்றும் 2 செல்ஷியஸுக்கு இடையேயான பருவநிலை மாற்றம் சிறு தீவுகளை மூழ்கடிக்கலாம், பவளப் பாறைகளை அழிக்கலாம். கடுமையான வெள்ளப் பெருக்கு, கொடுமையான வெப்ப அலைகள், பயங்கரமான காட்டுத் தீ, பயிர் விளைச்சல் பொய்த்துப் போதல் ஆகியவற்றுக்கும் வழிவகுக்கலாம்.

Industry

Also Read: காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? | Doubt of Common Man

மேற்கண்டவை நிகழும் பட்சத்தில் அகால மரணங்கள், பெரிய அளவிலான இடப் பெயர்வுகள், கடுமையான பொருளாதார இழப்புகள், மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழத் தகுதியற்ற நிலங்கள் உருவாதல், நீர் ஆதாரங்கள் அழிவு மற்றும் உணவுத் தட்டுப்பாடு ஆகியவை ஏற்படலாம் என்று எச்சரித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலர் இதை, `நரக எதிர்காலம்’ (Hellish Future) எனவும் அச்சம் தெரிவித்துள்ளார்.

- ஜனனி ரமேஷ்



source https://www.vikatan.com/social-affairs/environment/why-the-cop26-summit-is-very-important-for-our-planet-at-this-juncture

`இன்னைக்கு ஆரம்பிக்குது திருவிழா!' - டிக் பண்ணுங்க... `அண்ணாத்த' டிக்கெட் வெல்லுங்க!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் வரும் தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது 'அண்ணாத்த'. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, ஜகபதி பாபு, பிரகாஷ்ராஜ் என ஒரு பெரும் பட்டாளமே நடித்திருக்கும் இந்த பேமிலி என்டர்டெயினர் படத்துக்கு உலகமே வெயிட்டிங்! இமானின் இசையில் வெளியான பாடல்களும், படத்தின் டீசர், டிரெய்லர்களும் ஒருவித எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளன.

'அண்ணாத்த' படத்துக்கு 2 இலவச டிக்கெட்களை வெல்லும் வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது விகடன்.
அண்ணாத்த டிக்கெட் வெல்லும் வாய்ப்பு

போட்டியில் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று, அங்கே கேட்கப்பட்டிருக்கும் சிம்பிள் கேள்விகளுக்கு விடையளித்து, உங்களின் விபரங்களைப் பூர்த்திசெய்து 'Submit' பட்டனை அழுத்துவது மட்டுமே உங்களின் வேலை.

சரியான விடைகளுடன் சிறந்த பன்ச் டயலாக் அனுப்பும் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு டிக்கெட்டுடன் ஸ்நாக்ஸ் கூப்பனும் இலவசமாக வழங்கப்படும்.

போட்டியில் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

போட்டியில் கலந்துகொள்ளும் முன்னர், அது தொடர்பான நிபந்தனைகளைப் படிக்க மறக்காதீர்கள்!

இந்த தீபாவளி 'அண்ணாத்த தீபாவளி'... கொண்டாட நீங்கள் தயாரா?


source https://www.vikatan.com/events/announcements/here-is-your-chance-to-win-annatthe-movie-tickets