Ad

வியாழன், 15 செப்டம்பர், 2022

பண்ணை வீடு டார்கெட்; திகாரில் போடப்பட்ட ஸ்கெட்ச் - கொலை முயற்சியிலிருந்து இருமுறை தப்பிய சல்மான்கான்

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா அவரின் சொந்த கிராமத்தில் கடந்த மே மாதம் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை தொடர்பாக சமீபத்தில் சம்பத் நெஹ்ரா மற்றும் கபில் பண்டிட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் கபில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கைது செய்யப்பட்டான். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் நடிகர் சல்மான் கானை இரண்டு முறை கொலை செய்ய முயன்றது தெரிய வந்துள்ளது. ராஜஸ்தானில் அபூர்வ வகை மானை வேட்டையாடிதற்காக, சித்து மூஸ்வாலா படுகொலைக்கு முக்கிய காரணமாக இருந்த லாரன்ஸ் பிஸ்னோய், நடிகர் சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்டு இருந்தான். இதற்காக தனது அடியாட்களையும் நியமித்திருந்தான்.

சல்மான் கான்

சித்து மூஸ்வாலா படுகொலை சம்பவத்திற்கு பிறகு சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் கடிதத்தையும் லாரன்ஸ் கூட்டாளிகள் அனுப்பி வைத்தனர். சல்மான் கான் தந்தை சலீம் கான் தினமும் மும்பை பாந்த்ராவில் கடற்கரைக்கு நடைபயிற்சியாக வருவது வழக்கம். இதனை தினமும் நோட்டமிட்டு அவர் வழக்கமாக அமரும் இடத்தில் கொலை மிரட்டல் கடிதத்தை லாரன்ஸ் கூட்டாளிகள் வைத்து சென்றனர். இந்த நிலையில் தான், கைது செய்யப்பட்டு இருக்கும் லாரன்ஸ் கூட்டாளிகளிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.

லாரன்ஸ் கூட்டாளிகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சல்மான் கானை கொலை செய்ய மும்பை அருகில் உள்ள பன்வெலில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்துள்ளனர். சல்மான் கானுக்கு பன்வெலில் பண்ணை வீடு இருக்கிறது. அடிக்கடி சல்மான் கான் பண்ணை வீட்டிற்கு வருவது வழக்கம். அப்படி வரும் போது வழியில் மடக்கி சித்து மூஸ்வாலாவை கொலை செய்தது போல் கொலை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.

லாரன்ஸ் கூட்டாளிகள் கபில் பண்டிட், சந்தோஷ் ஜாதவ், சச்சின் பிஸ்னோய் ஆகியோர் சல்மான் கான் பண்ணை வீட்டிற்கு செல்லும் ரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து ஒரு மாதத்திற்கும் மேல் தங்கி இருந்து சல்மான் கானின் நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு பிறகு சல்மான் கான் காரை மிதமான வேகத்தில் தான் ஓட்டுவார் என்பதைக்கூட தெரிந்து வைத்திருந்தனர். அதோடு பண்ணை வீட்டிற்கு செல்லும் சாலையில் எங்கெல்லாம் குண்டு குழிகள் இருக்கிறது என்பதைகூட நோட்டமிட்டு வைத்திருந்தனர். அச்சாலையில் கார் வெறும் 25 கிலோமீட்டர் தூரத்தில்தான் செல்ல முடியும் என்பதையும் தெரிந்து வைத்திருந்தனர்.

சித்து மூஸ்வாலா

அவர்கள் சல்மான் கானை தாக்க சிறிய ஆயுதங்கள் தங்களுடன் வைத்திருந்தனர். சல்மான் கான் எப்போதெல்லாம் பண்ணை வீட்டிற்கு வருவார் என்பதை தெரிந்து கொள்ள சல்மான் கான் பண்ணை வீட்டு வாட்ச்மெனுடனும் லாரன்ஸ் கூட்டாளிகள் நட்பை ஏற்படுத்தி இருந்தனர்.

இரண்டு முறை கொலை முயற்சி

பண்ணை வீட்டிற்கு செல்லும் போது சல்மான் கானுடன் அவரின் பாதுகாவலர் ஷெரா என்பவர் மட்டுமே இருப்பார் என்பதால் எளிதில் கொலை செய்துவிட முடியும் என்றும் கொலையாளிகள் கணித்து வைத்திருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் சல்மான் கான் இரண்டு முறை பண்ணை வீட்டிற்கு வந்தார். அப்போது கொலை செய்ய முயன்றனர். ஆனால் இரண்டு முறையும் சல்மான் கான் தப்பிட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். முதல் முயற்சி தோல்வி அடைந்துவிட்டதால் அவர்களிடம் மாற்று திட்டமும் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சித்து மூஸ்வாலாவை கொலை செய்யும் முன்பாக சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்டு இருந்தனர். இதற்காக திகார் சிறையில் திட்டம் தீட்டப்பட்டது. கனடாவில் இருக்கும் கோல்டி பிரர் தான் கபில் பண்டிட்டை இத்திட்டத்தை நிறைவேற்ற தேர்வு செய்து அனுப்பி வைத்தான் என்ற தகவல்களும் விசாரணையில் வெளியாகியுள்ளது.



source https://www.vikatan.com/news/india/actor-salman-khan-survived-two-assassination-attempts-while-visiting-his-mumbai-farmhouse

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக