Ad

வெள்ளி, 20 மே, 2022

``காங்கிரஸின் சிந்தனை அமர்வு கூட்டம் தோல்வி; குஜராத்திலிலும் தோல்வி தான்" - பிரசாந்த் கிஷோர்

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் `சிந்தன் ஷிவிர்’, அதாவது சிந்தனை அமர்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வியூகம் அமைக்கவும், அதிருப்தியில் இருக்கும் முக்கியத் தலைவர்களைச் சமாதானப்படுத்தவும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ளவும், நிர்வாகரீதியாக புதிய முடிவெடுக்கவும் நிர்வாகிகளுடன் கட்சி மேலிடம் ஆலோசனை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து சில திட்டங்களையும் காங்கிரஸ் அறிவித்திருந்தது.

காங்கிரஸ் தலைவர்கள்

இந்த நிலையில், சிந்தன் ஷிவிர் கூட்டம் நடைபெற்றது தொடர்பாக பல்வேறு தலைவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். அதே போலத் தேர்தல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோர் சிந்தன் ஷிவிர் தொடர்பாக பேசுகையில், "உதய்பூர் சிந்தன் ஷிவிரின் முடிவு குறித்து என்னிடம் பலமுறை கருத்துக் கேட்கப்பட்டது. எனது பார்வையில், தற்போதைய நிலையை நீடித்து காங்கிரஸ் தலைமைக்குச் சிறிது கால அவகாசம் கொடுத்தது தவிர, சிந்தன் ஷிவிர் கூட்டம் தோல்வியடைந்துள்ளது என்று தான் சொல்வேன்.

குஜராத், இமாச்சல் பிரதேச தேர்தல் தோல்வி வரையாவது காங்கிரஸ் தலைமைக்கு சிறிது அவகாசம் வழங்க வேண்டும். அர்த்தமுள்ள எதையும் இந்த கூட்டம் சாதிக்க முடியவில்லை" எனக் கருத்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் வரும் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்திக்கும் என தெரிவித்திருக்கிறார்.

சோனியா காந்தி ராகுல் காந்தி

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் 2.0 என்னும் திட்டத்தை சோனியா காந்தியிடம் வழங்கியது குறிப்பிடதக்கது. சோனியா காந்தியைக் கட்சித் தலைவராகவும், காந்தி குடும்பத்தினர் அல்லாத வேறு யாரையாவது செயல் தலைவர் அல்லது துணைத் தலைவராகவும், ராகுல் காந்தியைப் பாராளுமன்ற வாரியத் தலைவராகவும் பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/politics/chintan-shivir-ifailed-to-achieve-anything-meaningful-says-prasant-kishor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக