Ad

சனி, 21 மே, 2022

டிராக்டர் வழங்க ரூ.22,500 லஞ்சம்; வேளாண் உதவி பொறியாளருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

திருச்சி மாவட்டம், லிங்கம் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். விவசாயியான இவருக்கு கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள பணிக்கம்பட்டியில் விவசாய நிலம் உள்ளது. இவருக்கு வயலை உழுவதற்கு ஏதுவாக சொந்தமாக டிராக்டர் தேவைப்பட்டிருக்கிறது. அதனால், இவர் விவசாய பணிகளுக்காக மானிய விலையில் டிராக்டர் வாங்குவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு குளித்தலை வேளாண் பொறியியல் உதவி பொறியாளர் கார்த்திக் என்பவரை (29) அணுகியுள்ளார். அவரும் டிராக்டர் வழங்க ஒப்புக்கொண்டு, அதற்காக விவசாயி சுரேஷிடம் ரூ.50,000 லஞ்சம் கேட்டுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியான சுரேஷ், அதை வழங்குவதற்கு விரும்பவில்லையாம். இதனால், அந்த அதிகாரியை கையும் களவுமாக மாட்டிவிட நினைத்திருக்கிறார். அதற்காக, 'அவ்வளவு தொகை தர முடியாது. ரூ.22,500 வழங்குகிறேன்' என்று சொன்னதாக தெரிகிறது. இன்னொருபக்கம், இதுகுறித்து கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.

குளித்தலை

இதனைத் தொடர்ந்து, குளித்தலை வேளாண் பொறியியல் அலுவலகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி உதவி பொறியாளர் கார்த்திக்கிடம், சுரேஷ் ரூ.22,500 லஞ்சம் வழங்கியிருக்கிறார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் கார்த்திக்கை அதிரடியாக கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து, கார்த்திக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொர்பான வழக்கு, கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கில் நீதிபதி ராஜலிங்கம் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், வேளாண் உதவி பொறியாளர் கார்த்திக்கிற்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதிப்பதாக குறிப்பிட்டார். அதோடு, அபராதத்தொகையை கட்டத் தவறினால், மேலும் ஒராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பளித்தார். விவசாயிடம் மானிய விலையில் டிராக்டர் வழங்க லஞ்சம் கேட்ட வழக்கில், வேளாண் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/district-court-sentenced-5-years-jail-to-agri-officer-who-demanded-bribe

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக