Ad

செவ்வாய், 31 மே, 2022

``தமிழ்நாட்டை விட குஜராத்தில் நிலக்கரி கையிருப்பு குறைவாக உள்ளது" - அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூரில், தி.மு.க மாவட்ட செயற்குழுக் கூட்டம், கரூர் கலைஞர் அறிவாலயத்தில் கரூர் மாவட்ட பொறுப்பாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, "புதுக்கோட்டையில் மின் இணைப்பு வேண்டி நூதன பிரசாரம் செய்தது குறித்து கேட்கிறீர்கள். சம்பந்தப்பட்ட வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்கும் வழியில் மின் கம்பம் பொருத்துவதில் இரண்டு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு உள்ளது. இரு தரப்பினருக்கும் இடையில் சுமூக உடன்படிக்கை ஏற்பட்ட பின், அது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு, ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமாக சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

செந்தில் பாலாஜி

ஆனால், குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலைகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு சீரான மின் விநியோகம் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தவறான கருத்துகளை பேசி, மக்களிடம் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் 6 முதல் 7 நாள்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது. ஆனால், அதை விட குறைவாகவே குஜராத்தில் நிலக்கரி கையிருப்பு உள்ளது. நிலக்கரி கையிருப்பு குறித்து தமிழ்நாட்டை குறைகூறும் இயக்கங்கள், தாங்கள் ஆளக்கூடிய மாநிலங்களில் நிலக்கரி கையிருப்பு எவ்வளவு உள்ளது. அங்கெல்லாம் மின்வெட்டு எவ்வளவு நேரம் உள்ளது, மின் விநியோகம் எவ்வளவு நேரம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதை எல்லாம் மறந்து, மறைத்து பேசி வருகின்றனர். பொய் பிரசாரம் மக்களிடத்தில் எடுபடாது. தமிழ்நாட்டில் தற்போது காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/senthil-balaji-talks-about-coal-stock-in-tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக