Ad

செவ்வாய், 29 மார்ச், 2022

SRH vs RR: பவர்ப்ளேயிலேயே ஆட்டத்தை முடித்த ராஜஸ்தான்; கடந்த சீசனின் ஹேங்ஓவரோடு தள்ளாடும் சன்ரைசர்ஸ்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் ஒன்சைடு மேட்ச்சாக முடிந்திருக்கிறது. சகலவிதத்திலும் சன்ரைசர்ஸை புரட்டியெடுத்த ராஜஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. ராஜஸ்தானுக்கு இவ்வளவு பெரிய வெற்றி எப்படிக் கிடைத்தது? சன்ரைசர்ஸ் எங்கே சறுக்கியது?

சமீபத்திய டி20 மற்றும் இந்த ஐ.பி.எல் தொடரின் ட்ரெண்ட்படி டாஸை வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனான வில்லியம்சன் பந்துவீச்சையே தேர்வு செய்தார். இன்றைய நாளில் சன்ரைசர்ஸுக்கு நடந்த ஒரே நல்ல விஷயம் இந்த டாஸ் வெற்றிதான். அதன்பிறகு அத்தனையும் சோகங்களே.

புவனேஷ்வர் குமார்

ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் பட்லரும் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். சன்ரைசர்ஸ் சார்பில் புவனேஷ்வர் குமார் முதல் ஓவரை வீசியிருந்தார். 'பார்ப்பதற்கு நியூசிலாந்து விக்கெட்டை போன்றே இருக்கிறதா கேன்?' என டாஸின் போது பிட்ச் குறித்து வில்லியம்சனிடம் டேனி மோரிஸன் கேட்டிருந்தார். அந்தக் கேள்விக்கான பதிலாக புவனேஷ்வர் குமாரின் முதல் ஓவர் அமைந்தது. தொடர்ந்து அவுட் ஸ்விங்குகளாக வீசி செட் செய்துவிட்டு ஒரு இன்ஸ்விங்கை புவி வீசியிருப்பார். அந்த முதல் நான்கு பந்துகளில் 2013-ல் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அறிமுகமான இளம் புவனேஷ்வர் குமாரின் கைகளிலிருந்து சீறி வந்ததை போன்று இருந்தது. அந்த நான்கு பந்துகளிலுமே பட்லர் Beaten ஆனார். அடுத்த 5 வது பந்து, அது ஒரு அவுட் ஸ்விங்கர். அடித்தே தீருவேன் என பட்லர் பேட்டை விட எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். அற்புதமான செட்டப், அற்புதமான ஸ்விங், அற்புதமான விக்கெட். அற்புதம் நிகழ்ந்து முடிப்பதற்குள்ளேயே அந்த ட்விஸ்ட்டும் நிகழ்ந்து முடித்தது. அது ஒரு நோ-பால்! பட்லர் மீண்டும் க்ரீஸுக்குள் வந்துவிட்டார். மிகப்பெரிய விக்கெட் மிஸ் ஆனது. இதன்பிறகு, ராஜஸ்தானைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

புவனேஷ்வர் குமார் ஒரு நோபாலோடு நிற்கவில்லை. அடுத்த ஓவரிலும் ஒரு நோபால் வீசினார். புவி மட்டுமில்லை. உம்ரான் மாலிக், ஏன் வாஷிங்டன் சுந்தர் கூட நோ-பால் வீசியிருந்தார்.
Butler

'ஸ்பின்னர்கள் நோ-பால் வீசுவெதெல்லாம் மாபெரும் குற்றம்' என கமென்ட்ரி பாக்ஸில் லக்ஷ்மண் சிவராம கிருஷ்ணனும் டேனி மோரிஸனும் கண்டனக்குரல்களை எழுப்பியிருந்தனர். பௌலர்கள் இப்படிச் சொதப்பினால் கேப்டன் வில்லியம்சன் இன்னும் அதிகமாக சொதப்பினார். பவர்ப்ளேயின் 6 ஓவர்களில் மட்டும் 5 பௌலர்களை பயன்படுத்திவிட்டார். 2வது ஓவரில் வெறும் 5 ரன்களை மட்டுமே கொடுத்துவிட்டு, குறிப்பாக நோ-பால் எதையும் வீசாமலிருந்த செஃப்பர்ட்டை அந்த ஒரே ஓவரோடு கட் செய்ததற்கான காரணமே புரியவில்லை. 7வது ஓவரில் மீண்டும் வந்து முதல் பந்திலேயே ராஜஸ்தானின் முதல் விக்கெட்டை அவர்தான் வீழ்த்திக் கொடுத்திருந்தார்.

சன்ரைசர்ஸின் இந்தக் களேபரங்களை பட்லரும் யாஷஸ்வியும் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். முதல் 2 ஓவர்கள் தடுமாற்றத்திற்குப் பிறகு தடையே இல்லாமல் அடித்து வெளுத்தனர். உம்ரான் மாலிக் 150+ கி.மீ வேகத்தில் வீசிய பந்துகளிலெல்லாம் பட்லர் அசால்ட்டாக ரேம்ப் ஷாட் ஆடியிருந்தார். உம்ரான் மாலிக்கின் ஒரே ஓவரில் 21 ரன்களும், பவர்ப்ளேயில் நன்றாக வீசும் வாஷிங்டன் சுந்தரின் ஓவரில் 18 ரன்களையும் எடுத்து சரமாரியாகத் தாக்கியிருந்தனர்.

பவர்ப்ளேக்குப் பிறகு, 35 ரன்களில் பட்லரும் 20 ரன்களில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அவுட் ஆகி வெளியேறினர். இவர்கள் கொடுத்த அதிரடியான தொடக்கத்தை அடுத்தடுத்த வீரர்கள் அப்படியே சிறப்பாகத் தொடர ராஜஸ்தானின் ரன்ரேட் எகிறிக்கொண்டே சென்றது. சீசனின் தொடக்கத்தில் நடக்கும் போட்டிகளில் அடித்து வெளுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கும் சஞ்சு சாம்சன் இங்கேயும் பிரித்து மேய்ந்தார். குறிப்பாக, ஸ்பின்னர்களைக் குறிவைத்து அடித்தார். நிதானமின்றி வந்த வேகத்தில் பெரிய ஷாட்களை ஆடி அவுட் ஆகிறார் என்கிற குற்றச்சாட்டு சாம்சனின் மீது நீண்டகாலமாக உண்டு. இதை சரி செய்யும் வகையில் கடந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் முதல் 10 பந்துகளில் பெரிதாக அட்டாக் செய்யாமல் நின்று ஆடி செட்டில் ஆகிவிட்டு அதன்பிறகு அதிரடி காட்டுவதை வழக்கமாக மாற்றிக்கொண்டார். இது அவருக்கு நல்ல ரிசல்ட்டையும் கொடுத்தது. அவருடைய கரியரின் சிறப்பானதொரு தொடராக கடந்த சீசன் மாறியது. அதே பாணியை இந்த முறையும் தொடர்வாரா எனும் எதிர்பார்ப்பு இருந்தது.

Samson

அந்தப் பாணியை சாம்சன் தொடரக்கூடாது என்பதில் எதிரணி கேப்டன் வில்லியம்சன் உறுதியாக இருந்தாரோ என்னவோ, பவர்ப்ளேயில் 5 பௌலர்களை பயன்படுத்திவிட்டு பவர்ப்ளே முடிந்தவுடனேயே பார்ட் டைமரான அபிஷேக் சர்மாவையும் அழைத்து வந்தார். இதுதான் சரியான நேரம் என்பதை உணர்ந்த சாம்சன் அந்த 10 பந்து பாலிசியையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு இறங்கியடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் வந்திருந்தன. ஸ்பின்னர்களைக் குறிவைத்து அடித்தார். வாஷிங்டன் சுந்தரையும் விட்டு வைக்கவில்லை. அவர் ஓவரில் 10 பந்துகளில் 26 ரன்களைச் சேர்த்திருந்தார். இதில் 3 சிக்சர்களும் அடக்கம். வாஷிங்டன் ஓவரில் அடித்த சிக்சரோடுதான் அரைசதத்தையும் கடந்தார்.

சாம்சன் அடித்த ஷாட்களில் 81% ஷாட்களைத் துல்லியமாக அடித்திருந்தார். ஒரு பந்தில் எஜ்ஜோ மிஸ்டைம் ஷாட்டோ அடித்திருக்கவில்லை, அவுட் ஆன அந்த ஒரு பந்தை தவிர!

இன்னொரு முனையில் சாம்சனுக்கு ஆதரவாக படிக்கலும் நன்றாக ஆடினார். பெங்களூரு அணிக்காக ஓப்பனிங்கிலேயே இறங்கி பழக்கப்பட்ட படிக்கல் இங்கே மிடில் ஆர்டரில் இறங்கினார். எப்படி ஆடுவாரோ என்னும் சந்தேகம் எல்லாருக்குமே இருந்தது. ஆனால், அவற்றையெல்லாம் போக்கும் வகையில் மிகச்சிறப்பாகவே ஆடியிருந்தார். சாம்சன் ஸ்பின்னர்களை பறக்கவிட, படிக்கல் வேகப்பந்து வீச்சாளர்களை பறக்கவிட்டார். செஃப்பர்டின் ஒரே ஓவரில் மட்டும் 17 ரன்களை அடித்திருந்தார். ஓப்பனிங்கில் பட்லர், ஜெய்ஸ்வால் அடித்து வெளுக்க மிடில் ஓவர்களில் அந்த பணியை அப்படியே தொய்வில்லாமல் சாம்சனும் படிக்கலும் செய்திருந்தனர். டெத் ஓவர்களில் இந்த பேட்டன் ஹெட்மயரின் கைக்குச் சென்றது. அவரும் எந்தவித தடுமாற்றமும் இன்றி அத்தனை பௌலர்களையுமே சிறப்பாக எதிர்கொண்டு சிக்சர்களை பறக்கவிட்டார்.

ஒரு பேட்டிங் யுனிட்டாகவே ராஜஸ்தான் மொத்தமாகச் சிறப்பாக செயல்பட அந்த அணி 20 ஓவர்களில் 210 ரன்களை எட்டியிருந்தது.

கடந்த சீசனில் சன்ரைசர்ஸின் பேட்டிங் கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தாலும் பௌலிங் ஓரளவுக்கு டீசண்ட்டாகவே இருந்தது. ஆனால், இந்தப் போட்டியில் பௌலிங்கிலும் எக்கச்சக்க ஓட்டைகள். அடிப்படையான விஷயத்தில் கூட சரியாக இல்லாமல் நோ-பாலாக வீசி தள்ளினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடராஜன், வாஷிங்டன் சுந்தர் இருவருமே சொதப்பவே செய்தனர். நடராஜன் கடைசி ஓவரில் ஸ்டம்புகள் சிதற வீசிய யார்க்கரிலிருந்த துல்லியம் அவரது ஸ்பெல் முழுவதும் இருந்திருக்க வேண்டும்.

போல்ட்

இந்த சீசனில் இதுவரை நடந்திருக்கும் போட்டிகளில் சேஸிங் செய்திருக்கும் அணிகளே வென்றிருக்கின்றனர். அந்த வழியில் சன்ரைசர்ஸும் எதாவது மேஜிக் செய்து சேஸிங்கில் பட்டையை கிளப்புமோ என்ற எதிர்பார்ப்பெல்லாம் இருந்தது. ஆனால், அதற்கெல்லாம் அப்படியே தலைகீழாக நடந்தது. கடந்த சீசனில் பேட்டிங்கில் எப்படியிருந்தார்களோ அதை அப்படியே இங்கேயும் தொடர்ந்ததை போல இருந்தது.

211 ரன்களை சேஸ் செய்த போது பவர்ப்ளேயில் வெறும் 14 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். மூன்று முக்கிய விக்கெட்டுகளையுமே இழந்திருந்தனர். கேப்டன் வில்லியம்சன், ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன் ஆகியோர் முறையே 2, 0, 0 என சொற்ப ரன்களில் அவுட் ஆகியிருந்தனர். அங்கேயே சன்ரைசர்ஸின் தோல்வி உறுதி செய்யபட்டுவிட்டது.

சன்ரைசர்ஸுக்கும் ராஜஸ்தானுக்கும் மிகப்பெரிய வித்தியாசமாக அமைந்தது அவற்றின் பவர்ப்ளே பௌலிங் பெர்ஃபார்மென்ஸ்களே. சன்ரைசர்ஸின் பௌலர்கள் அடிப்படை விஷயத்தில் கூட கோட்டை விட்டிருந்தனர். பௌலர்களைச் சரியாகக் கையாளாமல் வில்லியம்சன் ஏமாற்றியிருந்தார். அதேநேரத்தில், ராஜஸ்தானின் பவர்ப்ளே பெர்ஃபார்மென்ஸோ நூற்றுக்கு நூறு மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. சன்ரைசர்ஸை போல பவர்ப்ளேயில் எந்த பௌலரை வீச வைக்க வேண்டும் என்ற குழப்பம் ராஜஸ்தானுக்கு இருந்திருக்கவில்லை. ட்ரெண்ட் போல்ட் 3 ஓவர்கள், பிரஷித் கிருஷ்ணா 3 ஓவர்கள் என இரண்டே இரண்டு பௌலர்கள் மட்டுமே பவர்ப்ளேயில் வீசியிருந்தனர். இரண்டு பேருமே விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். குட் லெந்த்தில் ஒரு லைனைப் பிடித்துக் கொண்டு தொடர்ச்சியாக அதிலேயே வீசிக்கொண்டிருந்தனர். பிரஷித் கிருஷ்ணாவெல்லாம் ஒரு பந்தை கூட ஸ்லாட்டில் வீசியிருக்கவில்லை. போல்ட் நல்ல குட் லெந்தில் வீசி செட் செய்துவிட்டு ஃபுல் லெந்த்தில் இறக்கியிருந்தார்.

பிரசித் கிருஷ்ணா
பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும் போல்ட் 1 விக்கெட்டையும் பவர்ப்ளேயில் வீழ்த்தியிருந்தனர். விக்கெட்டுகள் அளவுக்கு எக்கானமிக்கலாகவும் வீசியிருந்தனர். அதுதான் பவர்ப்ளேயிலேயே ராஜஸ்தானின் வெற்றியை உறுதி செய்தது.

மூன்று ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த பிரசித் கிருஷ்ணா வெறும் 2 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். போல்ட் 8 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார்.

ராஜஸ்தான் இதன்பிறகு வீசிய ஓவர்களெல்லாம் வெறும் சம்பிரதாயத்துக்குதான். சன்ரைசர்ஸ் அடித்த ரன்கள் வெறும் ஆறுதலுக்குத்தான். எய்டன் மார்க்ரம் அரைசதம் அடித்திருந்தார். வாஷிங்டன் சுந்தர் வெறியாட்டம் ஆடியிருந்தார். ஆனால், இதெல்லாம் தோல்வி உறுதி எனத் தெரிந்தபிறகு அரங்கேறியதுதான் சோகமே!

ஒரு அணியாக ஒட்டுமொத்தமாகவே சிறப்பாகச் செயல்பட்டு ராஜஸ்தான் மிரட்டியிருக்கிறது. சன்ரைசர்ஸ் இன்னமும் கடந்த சீசனின் ஹேங்ஓவரிலிருந்தே மீளவில்லை. சீக்கிரமே விழித்துக் கொண்டால் சேதாரங்கள் குறையலாம்!


source https://sports.vikatan.com/ipl/rajasthan-royals-outplayed-sunrisers-hyderabad-with-their-complete-performance

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக