Ad

ஞாயிறு, 20 மார்ச், 2022

உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவரின் உடல் பெங்களூரு வந்தடைந்தது - கர்நாடக முதல்வர் அஞ்சலி

கடந்த மாதம், பிப்ரவரி 24-ம் தேதி முதல் ரஷ்யப் படையினர் உக்ரைன் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். போரில் ஏராளமான பொருள் சேதங்கள், உயிர்ச் சேதங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளது. மேலும் பல லட்சம் உக்ரேனியர்களும் இதனால் அகதிகளாக்கப்பட்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் உக்ரைனில் வசிக்கும் பிறநாட்டு மக்களும் தங்கள் நாட்டின் உதவிகளின் மூலம் உக்ரைனிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வந்தனர். இந்தியாவும், `ஆப்ரேஷன் கங்கா’ மூலம் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்தது. இதற்கிடையில், உக்ரைனின் கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த நவீன் சேகரப்பா பரிதாபமாக உயிரிழந்தார்.

நவீன் சேகரப்பா

இதையடுத்து நவீனின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர நவீன் குடும்பத்தினரும், கர்நாடக முதலமைச்சரும் மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மத்திய அரசின் ஏற்பாடுகள் மூலம், நவீன் சேகரப்பாவின் உடல் விமானம் மூலம் இன்று அதிகாலை பெங்களூரு வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, விமான நிலையத்திற்கு நேரில் சென்று நவீன் சேகரப்பா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நவீன் சேகரப்பாவின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடிந்த பின்னர் முன்னதாக கூறியபடியே, மருத்துவப் படிப்புக்காக நவீனின் உடல் எஸ்.எஸ் மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்படும் என அவரின் தந்தை சங்கரப்பா தெரிவித்துள்ளார்.

முன்னதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ``நவீனின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர உதவிய மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி" என கூறினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/indian-student-naveen-segarappas-body-came-today-in-bangalore-karnataka-cm-pay-his-last-respects

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக