Ad

செவ்வாய், 6 ஏப்ரல், 2021

மகாராஷ்டிரா: உள்துறை அமைச்சர் ராஜினாமா!-லஞ்சப் புகார் குறித்து சி.பி.ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

மும்பையில் போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர்சிங் சமீபத்தில் மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சராக இருக்கும் அனில் தேஷ்முக் மீது மிகப்பெரிய லஞ்ச ஊழல் புகாரை சுமத்தியிருந்தார். இந்தப் புகார் குறித்து சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட், இது குறித்து மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி கேட்டுக்கொண்டது.

மும்பை ஐகோர்ட்

அதன் அடிப்படையில் பரம்பீர் சிங் கடந்த மாதம் 25-ம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், ``மும்பையில் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரியாக பணியாற்றிவந்த சச்சின் வாஸ் என்பவரிடம் ஒவ்வொரு மாதமும் மும்பை பீர் பார், ரெஸ்டாரன்ட்களில் லஞ்சமாக வசூலித்து தன்னிடம் 100 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று அனில் தேஷ்முக் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக சச்சின் வாஸ் என்னைச் சந்தித்தபோது தெரிவித்தார். இது தவிர போலீஸ் உயரதிகாரிகளையும் தனது அலுவலகத்துக்கு அழைத்து லஞ்சம் வசூலித்து கொடுக்கும்படி அனில் தேஷ்முக் தெரிவித்தார். போலீஸ் அதிகாரிகளின் இட ஒதுக்கீட்டிலும் அரசியல் தலையீடுகள் இருந்தன. எனவே இந்தக் குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். என்னை இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி தின்பகர் தத்தா தலைமையிலான அமர்வு முன்பு கடந்த 31-ம் தேதி விசாரணை நடைபெற்று முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பரம்பீர் சிங் மட்டுமல்லாமல், வழக்கறிஞர் ஜெய்ஸ்ரீ பாட்டீல் மற்றும் ஆசிரியர் மோகன் ஆகியோரும் பரம்பீர் சிங் புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது மாநில அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பரம்பீர் சிங்கின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் இடமாற்றம் செய்யப்பட்டதால் இது போன்று புகார் செய்திருக்கிறார் என்று தெரிவித்தார். மூன்று மனுக்களையும் ஒன்றாக விசாரித்த நீதிமன்றம், இதில் 5-ம் தேதி தீர்ப்பளித்தது. பரம்பீர் சிங் மீதான குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஆரம்பகட்ட விசாரணையை 15 நாள்களில் நடத்தும்படியும், விசாரணையில் குற்றச்சாட்டுக்கு பூர்வாங்க ஆதாரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யும்படியும் சி.பி.ஐ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அனில் தேஷ்முக் மாநில உள்துறை அமைச்சராக இருப்பதால் மாநில போலீஸாரைக்கொண்டு விசாரிப்பது பாரபட்சமற்றதாக இருக்காது. எனவேதான் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அனில் தேஷ்முக்குக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.

சச்சின் வாஸ்

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து அமைச்சர் அனில் தேஷ்முக் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை முதல்வர் உத்தவ் தாக்கரேயிடம் கொடுத்திருக்கிறார். உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு பரம்பீர் சிங் மற்றும் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் இந்தக் குற்றச்சாட்டு வெளியான புதிதில் சிவசேனா கூட்டணி அரசை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக சில போலீஸ் அதிகாரிகளின் துணையோடு செயல்படுவதாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தகது.



source https://www.vikatan.com/news/politics/cbi-orders-probe-into-bribery-allegations-against-maharashtra-minister-anil-deshmukh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக