Ad

புதன், 23 செப்டம்பர், 2020

புதிய வேளாண் சட்டங்கள்: சாதக பாதகங்கள் - ஓர் அலசல்!

`மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை வஞ்சிக்கின்றன' என்பது எதிர்க்கட்சிகளின் வாதம். ஆனால், ``வேளாண் மசோதாக்கள் பற்றி எதிர்க்கட்சிகள் பொய் சொல்லிவருகின்றன'' என்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இரண்டில் எதுதான் உண்மை?

மத்திய பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு அதிரடிச் சட்டத் திருத்தங்களை மேற்கொண்டுவருகிறது. அவை ஒவ்வொன்றும் ஆதரவு - எதிர்ப்பு எனப் பல்வேறு தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. அந்த வரிசையில், வேளாண்துறையில் மூன்று புதிய சட்டத் திருத்தங்களை அண்மையில் கொண்டுவந்திருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.

நரேந்திர மோடி

விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம் 2020

மூன்று சட்டங்களில் முதலில் நாம் பார்க்கவிருப்பது, `விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம் 2020' (The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020).

இந்தச் சட்டம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழலைக் கருத்தில்கொண்டு, விலையை உறுதிப்படுத்தி, விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்டது என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. அதாவது, தங்கள் விளைநிலத்தில் விளைவிக்கப்போகும் உற்பத்திப்பொருள் குறித்து பெரு நிறுவனங்களுடன் விவசாயிகள் முதலிலேயே ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். பின்னர், விளைவித்த பொருளை ஏற்கெனவே ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருக்கும் விலைக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமே விற்றுக்கொள்ளலாம் என்பதுதான் இந்த சட்டத்தின் சாராம்சம்.

`இதன் மூலம், தான் விளைவிக்கப்போகும் விளைபொருளுக்கான விலையை விவசாயி முன்கூட்டியே தீர்மானித்து, ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்துகொண்டு, எந்தவித மன உளைச்சலுமின்றி விவசாயப் பணிகளில் ஈடுபடலாம்’ என்கிறது அரசுத் தரப்பு. ஏனெனில், சந்தையில் அதிக அளவில் வரத்து இருக்கும் பொருளையே ஒரு விவசாயி விளைவித்திருந்தால், அந்தப் பொருளுக்கான விலை மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே, அதிக செலவு செய்து உழைத்த விவசாயியின் முழு உழைப்பும் இந்தச் சந்தைப் பொருளாதாரத்தால் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும்.

விவசாயப் பணிகள்

இந்தச் சிக்கலை ஒழிப்பதற்காக முன்கூட்டியே ஒப்பந்தத்தின் மூலம் விலை நிர்ணயம் செய்துகொள்வதால், விலை வீழ்ச்சி எனும் அபாயத்திலிருந்து விவசாயி பாதுகாக்கப்படுகிறார். விளைபொருளுக்கான விலை உத்தரவாதம் விவசாயிக்குக் கிடைத்துவிடுகிறது என்கிறது இந்தச் சட்டம். மேலும், ஒப்பந்தம் தொடர்பாக பிரச்னைகள் ஏற்பட்டால், சட்டரீதியான தீர்வுகள் கிடைப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டிருப்பதாகச் சட்டம் சொல்கிறது.

விவசாய சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் சொல்வது என்ன?

பெரு நிறுவனங்கள் விவசாயிகளோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, கான்ட்ராக்ட் முறையில் விளைபொருள்களைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படை வசதிகளை அதிகாரபூர்வமாக இந்தச் சட்டம் செய்துதருகிறது. இதன் மூலம் சொந்த நிலத்திலேயே விவசாயிகள் கூலிகளாக்கப்படுவார்கள். ஏற்கெனவே கரும்பு விவசாயிகள் இது போன்று சர்க்கரை ஆலைகளோடு ஒப்பந்தம் செய்துகொண்டுதான் கரும்பு விவசாயம் செய்துவருகின்றனர். ஆனால், கரும்பைக் கொள்முதல் செய்த ஆலைகள், விவசாயிகளுக்கு உரிய தொகையை செலுத்தாததால், பல்வேறு சிக்கல்களும் வழக்குகளும் உருவாகியிருக்கின்றன.

விவசாயிகள் போராட்டம்

மேலும், நாட்டின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய விவசாயிகளுக்குத் தேவையான கடனுதவி உள்ளிட்ட வசதிகளை செய்துகொடுக்க வேண்டியது ஓர் அரசின் கடமை. இப்படியான ஆக்கபூர்வமான விஷயங்களை ஓர் அரசு செய்து தரும்போதுதான், விவசாயி தன் விளைபொருளுக்கான விலையை லாபகரமானதாக மாற்றுவதற்கான வழியும் உருவாகும். ஆனால், விவசாய உற்பத்திக்கான உதவிகளை அரசு நிர்வாகம் செய்யாமல் விலகிக்கொள்ளும்போது, அந்த வேலைகளைச் செய்துவரும் தனியார் பெரு நிறுவனங்கள், விவசாயிகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதைத் தவிர்க்க இயலாது. இதன் தொடர்ச்சியாக விவசாயி தன் விளைபொருளுக்கு லாபகரமான விலை நிர்ணயிப்பதும் கேள்விக்குறியாகிவிடும் சூழலே தொடரும். ஆக, இந்த ஒப்பந்தச் சட்டம் என்பது, பணம் படைத்தவர்கள் தங்கள் பண்ணை நிர்வாகத்தை அதிகாரபூர்வமாக செய்துகொள்ளவே வழிவகுக்கும் என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.

வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020!

அடுத்ததாக, நாம் பார்க்கவிருப்பது, 'வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020' (Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020)

`இதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை மாநிலம் தாண்டி இந்தியா முழுக்க எந்த வியாபாரியிடமும் விற்றுக்கொள்ளலாம். இதனால், விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை, கூடுதல் லாபம் கொடுக்கும் வியாபாரியிடம் விற்று, லாபம் பார்க்க வழிவகை ஏற்படும்’ என்கிறது அரசுத் தரப்பு.

விவசாயி

விவசாய சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் சொல்வது என்ன?

அதாவது, வியாபாரிகளும் இடைத்தரகர்களும் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கொடுக்காமல், மிகக்குறைந்த விலையில் வாங்கி வருவதைத் தடுப்பதற்காகவே மாநில அரசால், `ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்' கொண்டுவரப்பட்டது.

இந்த ஒ.வி.கூடத்துக்கு விவசாயிகள் கொண்டுவரும் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை அரசே நிர்ணயிக்கும். அதன் பிறகு மறைமுக ஏல முறையில் வியாபாரிகள் விளைபொருள்களை ஏலம் எடுத்துச் செல்வார்கள். இதன் மூலம் விளைபொருளுக்கு நட்டம் ஏற்படாது என்ற உறுதிநிலை விவசாயிகளுக்கு இருந்துவந்தது. `விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை' என்று விவசாயிகள் தொடர்ந்து குறைபட்டு வருவதையறிந்துதான், மாநில அரசே `குறைந்தபட்ச ஆதார விலை' ஒன்றை நிர்ணயித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காத்துவந்தது. `இந்தக் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தித்தாருங்கள்' என்றுதான் இதுநாள்வரையிலும் விவசாய சங்கங்கள் போராடிவருகின்றன. ஏனெனில், அரசு சாராத தனியார்கள் விவசாயிகளின் விளைபொருளுக்கு அரசின் ஆதாரவிலையைவிடக் கூடுதல் விலை கொடுக்கத் தயங்கியதே இதற்குக் காரணம். இந்தநிலையில், `நேரடியாக தனியார்களிடமே கூடுதல் விலைக்கு விற்றுக்கொள்ளலாம்’ என்று இந்தப் புதிய சட்டம் சொல்வது சாத்தியமற்றது.

விவசாயிகள் போராட்டம்

ஏனெனில், சிறு, குறு விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை வெளி மாவட்டத்துக்கோ அல்லது மாநிலங்களுக்கோ எடுத்துச் சென்று விற்பனை செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம். இந்தச் சூழலில், குறிப்பிட்ட மாநிலங்களில் அதிக அளவில் உற்பத்தியாகும் விளைபொருள்களைப் பெரு நிறுவனங்களும், பன்னாட்டுக் கம்பெனிகளும் அறிந்துகொண்டு, விவசாயிகளிடமிருந்து மொத்தமாகக் கொள்முதல் செய்வதற்கே இந்தப் புதிய சட்டம் வழிவகுக்கும். எனவே, `இது விவசாயிகளுக்கு ஆதரவான சட்டம் அல்ல... பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான சட்டம்' என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.

Also Read: மதுரை: `ஸ்டாலின் ஜோசியம் பார்க்கிறார்; நாங்கள் மக்களை நம்புகிறோம்!'- எடப்பாடி பழனிசாமி

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020!

கடைசியாக நாம் பார்க்கவிருப்பது, 'அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020' (Essential Commodities (Amendment) Act 2020).

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் என்றால் என்னவென்று அறிவதற்கு முன்னர், `அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்' என்றால் என்னவென்று அறிந்துகொள்ள வேண்டியிக்கிறது. அதாவது, பொதுமக்களின் உணவுத் தேவைக்கு அத்தியாவசியமான பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது, அவற்றைப் பதுக்கிவைப்பதற்கோ அல்லது ஏற்றுமதி செய்யவோ 'அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்' தடைவிதிக்கிறது.

ஏனெனில், குறிப்பிட்ட உணவுப் பொருள்களைப் பதுக்கிவைத்து, சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, பின்னர் அதிக விலைக்குப் பொருள்களை விற்பதால், பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இதேபோல், உள்நாட்டிலேயே குறிப்பிட்ட பொருளுக்கு தட்டுப்பாடு நிலவிவரும்போது, அதே பொருளை ஏற்றுமதி செய்ய நேர்ந்தால், உள்நாட்டின் தேவை மிகவும் அதிகரித்து, பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகவும் நேரிடும்.

வேளாண்மை

எனவே, கொள்ளை லாபத்துக்கு ஆசைப்பட்டு வியாபாரிகளில் சிலர் செய்துவரும் பதுக்கல் மற்றும் ஏற்றுமதியைக் கட்டுப்பட்டுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டதே `அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்.’

ஆனால், தற்போது மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் புதிய `அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020', வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், உணவு தானியங்கள் உள்ளிட்டவற்றை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிலிருந்தே நீக்கியிருக்கிறது. எனவே, `மேற்கண்ட பொருள்களை இருப்பு வைத்துக்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை’ என்கிறது புதிய சட்டம்.

Also Read: மாநிலங்களவை: எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு... மூன்றரை மணி நேரத்தில் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்கள்!

காரணம்... 'உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா இருந்துவருகிறது. ஐந்து வருடங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் கைவசம் உள்ளன. எனவே, உணவுப் பொருள்களுக்குப் பஞ்சம் இல்லாத இந்தக் காலகட்டத்தில், அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் என்ற ஒன்றே தேவையற்றது' என்கிறது அரசு.

அதேசமயம், தோட்டப் பயிர்களின் விலை கடந்த ஒரு வருடத்தில் விற்கப்பட்ட சராசரி விலையைவிடவும் 100 சதவிகிதம் அதிகமாக விற்கப்பட்டாலோ அல்லது தானியங்களின் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் விற்கப்பட்ட சராசரி விலையிலிருந்து 50 சதவிகிதம் அதிகமாக விற்கப்பட்டாலோ அரசு கட்டுப்பாடு விதிக்கும் சூழல் ஏற்படும் என்கிறது. ஆனாலும், `உணவுப் பொருள்களை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது’ என்ற கூடுதல் தகவலையும் இந்தப் புதிய சட்டத் திருத்தம் சொல்கிறது.

விவசாயி

விவசாய சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் சொல்வது என்ன?

இனி பெரு நிறுவனங்கள், அத்தியாவசியப் பொருள்களை அளவுக்கதிகமாக வாங்கி இருப்பு வைத்துக்கொள்ளும். இதன் தொடர்ச்சியாக சந்தையில் அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். பின்னர், தங்களிடமுள்ள பதுக்கல் பொருளை அதிக விலைக்கு சந்தையில் விற்று, கொள்ளை லாபம் சம்பாதிக்கும். ஆக, பெரு நிறுவனங்கள் இதுவரை பயந்து பயந்து செய்துவந்த பதுக்கல் மற்றும் மறைமுக ஏற்றுமதி மோசடிகளை, வெளிப்படையாகச் செய்வதற்கு இந்தப் புதிய சட்டம் அங்கீகாரம் அளிக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.



source https://www.vikatan.com/government-and-politics/policies/an-analysis-of-the-pros-and-cons-of-the-new-agricultural-laws

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக