Ad

செவ்வாய், 6 ஏப்ரல், 2021

கொரோனா: புதிய உச்சத்தில் தினசரி பாதிப்பு... உலக சுகாதார தினத்தில் பிரதமர் மோடி வேண்டுகோள்! #NowAtVikatan

புதிய உச்சத்தில் தினசரி கொரோனாபாதிப்பு!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் புதிய உச்சத்தில் பாதிப்புகள் பதிவாகி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிதாக 1,15,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 630 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புடன் 8,43,473 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ்

இதனிடையே இன்று (ஏப்ரல் 7) உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி பிரதமர் மோடி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``உயர்தர மற்றும் குறைந்த விலையில் சுகாதார சேவையை மக்கள் பெறுவதை உறுதிசெய்ய இந்திய அரசு ஆயுஷ்மான் பாரத் மற்றும் பிரதமர் ஜனஷதி யோஜனா உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை இந்தியா நடத்தி வருகிறது.

மேலும் இந்த உலக சுகாதார தினத்தில் மாஸ்க் அணிதல், தவறாமல் கைகளை கழுவுதல், பிற நெறிமுறைகளைப் பின்பற்றுவது உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வதன் மூலம் கொரோனாவுடன் போராடுவதில் கவனம் செலுத்துவோம்.

அதே நேரத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். உலக சுகாதார தினம் என்பது நமது பூமியை ஆரோக்கியமாக வைத்திருக்க இரவு பகலாக உழைக்கும் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டையும் மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு நாள். சுகாதாரத்துறையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஆதரிப்பதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதற்கான ஒரு நாள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.



source https://www.vikatan.com/news/general-news/07-04-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக