Ad

செவ்வாய், 2 மே, 2023

திரைப்பட பாணியில் திருட்டு: ஓடும் லாரியிலிருந்து ஆடுகளை கீழே தூக்கிப்போட்டுவிட்டு காரில் தப்பிய நபர்

எதைச்செய்தாலும் அந்த செயல்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுவும் அனைத்துப் பகுதியிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட பிறகு, எந்த செயல் செய்தாலும் அவை உடனே கேமராவில் பதிவாகிவிடுகிறது. இது பின்னர் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் களவாணி படத்தில் நடிகர் விமல் உரமூட்டையை திருடுவது போல் ஆடுகளை திருடிய வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது.

அந்த வீடியோவில் ஆடுகளை ஏற்றிச்சென்ற லாரி ஒன்று மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த போது, அதிலிருந்து வேகவேகமாக ஒருவர் ஆடுகளை ரோட்டில் தூக்கிப் போட்டபடிச் சென்றார். அந்த லாரிக்கு அருகில் கார் ஒன்றும் பின் தொடர்ந்து வந்தது. லாரியிலிருந்து மொத்தம் 10 ஆடுகள் கீழே தூக்கிப்போடப்பட்டது. ஆடுகளை தூக்கிப்போட்ட பிறகு, லாரிக்கு அருகில் சென்று கொண்டிருந்த கார் மெதுவாக லாரியின் பின்னால் சென்றது. காரின் மேல் பகுதி அப்படியே திறந்து கொண்டது.

அதில் லாரியிலிருந்து ஆடுகளைத் திருடிய நபர் குதித்துவிட்டார். உயிரைப் பணயம் வைத்து நெடுஞ்சாலையில் ஆடுகளை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆடுகள் இருந்த லாரியில் திருடன் எப்படி ஏறினார் என்று தெரியவில்லை. லாரிக்கு பின்னால் வந்த ஒரு காரில் இருந்த நபர், இந்த சம்பவத்தை அப்படியே தன்னுடைய மொபைல் போனில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார். அது இப்போது வைரலாகி இருக்கிறது.

இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இகத்புரி மற்றும் கோடி இடையேயான நெடுஞ்சாலையில் நடந்ததாக விசாரணையில் தெரியவந்தது. கோடி நெடுஞ்சாலைப் பகுதியில் மிகப்பெரிய ஆட்டுச்சந்தை இருக்கிறது. அந்தச் சந்தையில் ஆடுகளை விற்பனை செய்ய எடுத்து சென்ற போது, இத்திருட்டு நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. லாரியில் இருந்து கீழே தூக்கிப்போடப்பட்ட ஆடுகள் பலத்த காயத்துடன் அப்படியே எழுந்து நின்ற காட்சி அனைவரின் நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. போலீஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/crime/man-flees-in-the-car-after-throwing-sheep-from-moving-truck

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக