Ad

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

கொரோனா: சமாளிக்கும் தமிழகம்... மருத்துவக் கட்டமைப்பில் `தமிழ்நாடு மாடல்’ - ஓர் அலசல்

கொரோனா 2-வது அலை இந்தியாவை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேசம், குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏராளமான மரணங்கள் நிகழ்ந்து, 24 மணி நேரமும் இடுகாட்டில் சடங்கள் எரிகின்றன. அங்குள்ள மருத்துவமனைகளில் ஒரு படுக்கையில் இரண்டு மூன்று நோயாளிகள் ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டு பரிதாபமாகப் படுத்திருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் தினந்தோறும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் கொரோனா நோயாளிகளுடன் சாலையோரம் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. தமிழகத்தில் தினந்தோறும் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை சுமார் 13,000 என்ற நிலையிலும், இங்கு மரணம் குறைவாக இருக்கிறது. பாதிக்கப்படுவோருக்கு தரமான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு மிகவும் வலுவாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே மருத்துவக் கட்டமைப்பில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதற்கு மிகப்பெரிய வரலாற்றுப் பின்னணி இருக்கிறது.

மருத்துவமனை

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களும் கல்வி, மருத்துவம், தொழில்துறை போன்றவற்றில் ஒரே பாதையில், சுமாரான வேகத்தில் சென்றுகொண்டிருந்தன. குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில், மற்ற மாநிலங்கள் சென்றுகொண்டிருக்கும் பாதையிலிருந்து சற்று விலகி ஒரு மாநிலம் செல்ல ஆரம்பித்தது. அது, வளர்ச்சியிலும் விரைந்து செல்லத் தொடங்கியது. அதுதான், தமிழ்நாடு. உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தொழில்துறை, கல்வி, மருத்துவம் எனப் பல துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சியைத் தமிழ்நாடு அடைந்தது. எனவேதான், தமிழ்நாடு தனித்து நிற்கிறது என்ற பேச்சு பரவலாக இருக்கிறது

உலக அளவில் மருத்துவச் சுற்றுலாவுக்கு மிகச்சிறந்த இடமாக தமிழ்நாடு விளங்குகிறது. பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் மருத்துவச் சிகிச்சைகளுக்காக லட்சக்கணக்கில் இங்கு வந்துசெல்கிறார்கள். சகல வசதிகளும்கொண்ட கார்ப்பரேட் மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் ஏராளம். அதேபோல, நடுத்தர வகுப்பினரும், ஏழை எளிய மக்களும் சிகிச்சை பெறுவதற்கு நவீன வசதிகள்கொண்ட அரசு மருத்துவமனைகள் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றன.

ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்கு வந்துசெல்கிறார்கள். ராஜீவ் காந்தி அரசுப் பொதுமருத்துவமனை, ஸ்டான்லி அரசுப் பொது மருத்துவமனை, ராயப்பேட்டை அரசுப் பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசுப் பொது மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை, எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு ஆந்திரா, கர்நாடகா உட்பட வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். வட மாநிலங்களிலிருந்தும் இங்கு வருகிறார்கள். பல லட்சம் ரூபாய் செலவாகக்கூடிய மிகப்பெரிய அறுவை சிகிச்சைகளை, இங்கு வந்து முற்றிலும் இலவசமாக செய்துகொண்டு போகிறார்கள். மொத்தத்தில், வசதிபடைத்தவர்கள் மற்றும் ஏழைகள் என அனைத்துப் பகுதியினருக்குமான மருத்துவம், சகல வசதிகளுடன் தமிழகத்தில் கிடைக்கிறது என்பதுதான் தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு.

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் என்கிற ஓர் அமைப்பு தமிழக அரசால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற ஓர் அமைப்பு வேறு மாநிலங்களில் இல்லை. இதன் சிறப்பு என்னவென்றால், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளும் உபகரணங்களும் பொதுச்சந்தையில் மிகக்குறைந்த விலைக்கு இந்த நிறுவனத்தின் மூலம் வாங்கப்படுகின்றன. அதனால், அரசு மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக செல்பவர்களுக்குத் தேவையான மருந்துகளை வழங்க முடிகிறது. இதன் மூலம், இந்தியாவிலேயே மிகக்குறைந்த செலவில் மருத்துவம் அளிக்க முடிகிறது. இது மிகப்பெரிய முன்னேற்றம்.

ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் அரசு மருத்துவமனைகள் மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றிவருகின்றன. குறிப்பாக, கொரோனா முதல் அலையின்போதும், தற்போதைய இரண்டாம் அலையின்போதும் பாதிக்கப்பட்டோரின் உயிரைக் காப்பாற்றுவதில் அரசு மருத்துவமனைகள் ஆற்றிவரும் பங்கு மகத்தானது. மருத்துவத்துறையில் இத்தகைய அளப்பரிய வளர்ச்சியை தமிழகம் எட்டியது எப்படி என்ற கேள்வியை சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை தலைவரான பேராசிரியர் ஜோதி சிவஞானத்திடம் முன்வைத்தோம்.

“தமிழ்நாட்டில் இருப்பதைப் போன்ற சுகாதாரக் கட்டமைப்பு வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. தமிழ்நாட்டைப்போல கேரளாவும் மருத்துவத்துறையில் சிறந்து விளங்குகிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். அதேநேரத்தில், கேரளாவைவிடப் பல இன்டிகேட்டர்களில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. இவ்வளவு பெரிய வளர்ச்சியை ஓரிரு நாளில் தமிழ்நாடு எட்டிவிடவில்லை. ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக இதற்கான விதை போடப்பட்டது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், நீதிக்கட்சி ஆட்சியிலேயே இது தொடங்கிவிட்டது.

ஜோதி சிவஞானம்

காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மதிய உணவுத் திட்டத்தின் பலனாக கிராமப்புற குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு வர ஆரம்பித்தார்கள். கிராமப்புறங்களைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் வருவதற்கான வாசல்களை சத்துணவுத் திட்டம்தான் திறந்துவைத்தது. அண்ணா முதல்வராகி, அவரது மறைவுக்குப் பிறகு கருணாநிதி முதல்வராக வந்தவுடன், கல்வி மற்றும் மருத்துவம் போன்ற மக்கள் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, பட்ஜெட்டில் அதிகமான தொகை அவற்றுக்கு ஒதுக்கப்பட்டது.

அப்போதுதான், ‘தமிழ்நடு வளர்ச்சி மாடல்’ என்பது உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் வளர்ச்சி மாடல் என்பது ஒரு வித்தியாசமான மாடல். இதை, திராவிட இயக்கங்களின் வளர்ச்சி மாடல் என்றும் சொல்லலாம். மக்களுக்கு நேரடியாக எது தேவையோ, அதற்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்தார்கள். கருணாநிதி உருவாக்கிய அந்தப் பாதையில் அடுத்து வந்த ஆட்சியாளர்களும் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. எனவே, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சமூகநல நோக்கத்துடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் ஒரு தொடர்ச்சி இருந்தது. இன்றைக்கு இந்தியாவிலேயே மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குவதற்கு அதுதான் காரணம்” என்றார் ஜோதி சிவஞானம்.

தொடர்ந்து, ``அனைவருக்கும் தடுப்பூசித் திட்டம், ஒவ்வொரு கிராமத்திலும் ஆரம்ப சுகாதார மையம், தாலுகா அளவிலும் மாவட்ட அளவிலும் மருத்துவமனைகள் என மருத்துவக் கட்டமைப்புகள் தொடர்ந்து விரிவாக்கம் அடைந்தன. கட்டமைப்பு உறுதியாக உறுதியாக, தாய் சேய் இறப்பு விகிதம், சிசு மரணங்கள் விகிதம் ஆகியவை வெகுவாகக் குறைய ஆரம்பித்தன. மருத்துவமனைக்குச் சென்று பிரசவம் பார்ப்பது என்பது தமிழகத்தில் கிட்டத்தட்ட 100 சதவிகிதம் என்ற நிலையை அடைந்துவிட்டது. கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம், அங்கன்வாடி போன்ற திட்டங்கள் பொதுசுகாதாரத்துக்குப் பேருதவி செய்யக்கூடியவை. தமிழ்நாட்டுக்கென்று உருவாகிவிட்ட அந்த மாடலிலிருந்து அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் எவராலும் மாற முடியவில்லை. அது கல்வியையும் மருத்துவத்தையும் மேலும் மேலும் வலுப்படுத்திக்கொண்டிருக்கிறது” என்றார் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி

மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரியை உருவாக்க வேண்டும் என்பதில் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிக்குவரும் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றன. ஆரோக்கியமான இந்தப் போட்டிதான், தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் வெற்றிநடை போடுவதற்குக் காரணமாக இருக்கிறது. தற்போது தமிழகத்தில் 25 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன என்கிற அளவுக்கு மருத்துவத்துறையில் தமிழ்நாடு சாதனை படைத்துவருகிறது.

Also Read: ஆக்ஸிஜனைக் காரணம் காட்டி மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை?! - நிலவரம் என்ன?

இது குறித்து சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்திடம் பேசினோம்.

“அ.தி.மு.க., தி.மு.க என யார் ஆட்சிக்கு வந்தாலும் மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் என நிறைய மருத்துவக் கல்லூரிகள் இங்கு இருப்பதால், ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான மருத்துவர்கள் வருகிறார்கள். மேலும், எல்லா வகையான மருத்துவ நிபுணர்களும் தமிழ்நாட்டில் நிரம்பியிருக்கிறார்கள். இதய நிபுணர், சிறுநீரக நிபுணர், குழந்தைகள் மருத்துவர், பெண்கள் நல மருத்துவர் என அனைத்து வகையான நிபுணர்களும் தமிழ்நாட்டில் ஏராளமாக இருக்கிறார்கள். வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு இல்லை. மேலும், இட ஒதுக்கீடு மூலமாக மருத்துவம் படித்துவருபவர்கள் என்பதால், மக்கள் நலனை உணர்ந்து செயல்படுபவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள்.

சாந்தி ரவீந்திரநாத்

தமிழக மக்களுக்கு மருத்துவக் காப்பீடு இருக்கிறது. அதைவைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் அதிகம் செலவாகக்கூடிய அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகளை செய்துகொள்ள முடியும். இந்த மாதிரியான மருத்துவ வசதிகள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை” என்றார் டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்.

உலக வங்கி போன்ற அமைப்புகளிடம் மாநில அரசுகள் கடன்கள் வாங்கிப் பல திட்டங்களைச் செயல்படுத்துகின்றன. கடன் கொடுப்பவர்கள் பல நிபந்தனைகளை விதிப்பதும் வழக்கம். அவர்களின் நிபந்தனைகளுக்குப் பல மாநில அரசுகள் பணிந்துபோவது உண்டு. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, அதைப் பார்க்க முடிந்தது. தமிழ்நாட்டில் கருணாநிதியாக இருந்தாலும் ஜெயலலிதாவாக இருந்தாலும், அவர்களின் ஆட்சிக் காலங்களில் உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகளிடம் கடன்கள் வாங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டபோது, கடன் கொடுக்கும் அமைப்புகள் முன்வைக்கும் நிபந்தனைகள் அனைத்துக்கும் பணிந்துபோகவில்லை. மாறாக, தமிழகத்துக்கு எது தேவையோ அவற்றைத் தேர்ந்தெடுத்து செய்யக்கூடியவர்களாக தமிழக முதல்வர்கள் இருந்தனர்.

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி

குறிப்பாக, சமூகநலத் திட்டங்களுக்கான நிதியைக் குறைக்க வேண்டும் என்று அழுத்தங்கள் வந்தபோதும், தனியார்மயத்துக்கான நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டபோதும், அவை எல்லாவற்றுக்கும் தமிழக ஆட்சியாளர்கள் இணங்கிப்போய்விடவில்லை. மருத்துவத்துறையில் தமிழ்நாடு அடைந்துள்ள மிகப்பெரிய வளர்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/how-did-tamilnadu-develop-in-medical-infrastructure

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக