Ad

வியாழன், 24 செப்டம்பர், 2020

காரைக்குடி: தெருவில் தூங்கிய தாய்... வீடுகட்டிக் கொடுத்து நெகிழச் செய்த இளைஞர்கள்!

வீடு கட்டியாச்சு அதுக்கு கரன்ட் கனெக்ஷன் கொடுக்கிறது, பூச்சு வேலை, கதவு போடுறதுனு சின்ன சின்ன வேலைகள் மிச்சம் இருக்கு. அதுக்கு யாராவது உதவி செஞ்சா முழுமையடைஞ்சுரும்

’ராத்திரி முச்சூடும் தூக்கம் இருக்காது. கண்ணுல தண்ணி வந்துகிட்டே இருக்கும். எனக்கு வந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது’ என்று தளர்ந்த குரலில் தன் வேதனையை வெளிப்படுத்தினார் வேணியம்மா. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேணி. கணவன் கைவிட்ட போதும் மூன்று மகள்கள், ஒரு மகன் என நால்வரையும், தனியாளாக வளர்த்தெடுத்தவர். மழைக்கத் தனது வீடு இடிந்து போனதால் சாலையிலும் கடை வாசலிலும் உறங்கி பெரும் துன்பத்தை அனுபவித்து வந்துள்ளார்.

மழைக்கு இடிந்த வேணியின் வீடு

இந்நிலையில் தோள் கொடு தோழா இளைஞர் குழு ஒன்றிணைந்து அவருக்குச் சிறிய வீடு ஒன்றை கட்டிக் கொடுத்தது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

வேணி, "என் வீட்டுக்காரரு, என்னைக் கைவிட்டபோதும் மனம் தளராமல் என் நான்கு பிள்ளைகளையும் வளர்த்தேன். அழகா இருந்த ஒரே காரணத்துனால இளைய மகளை சிலர் சொல்ல முடியாத அளவுக்குக் கொடுமைப்படுத்திக் கொடூரமா கொலை செஞ்சுட்டாங்க. பிறகு என் மகனும் காணாமப் போயிட்டான். மூத்த மகளையும், ரெண்டாவது மகளையும் கஷ்டப்பட்டு கட்டிக்குடுத்தேன்.

இப்ப என் ரெண்டாவது மகளை அவ வீட்டுக்காரர் கொடுமைப்படுத்தி விரட்டிவிட்டுட்டாரு. அவளும் குழந்தையும் என்கூடத்தான் இருக்காங்க. இப்படி ஏகப்பட்ட கஷ்டங்கள்ல இருந்தப்பதான் கஜா புயல் வந்து என் வீடு லேசா இடுஞ்சுருச்சு. அதைக் கொஞ்சம் சரிபண்ணி அதே வீட்ல இருந்தோம்.

வீடு இடிக்கும் பணி

கொஞ்ச நாளைக்கு அப்புறம் வந்த மழையில மொத்த வீடும் இடிஞ்சு போயிருச்சு. வீட்டு வாசல்லயும் கடைத் தெருவுலயும் தங்கி சமாளிச்சோம். கஷ்டத்தை நினைச்சு கண்ணுல பொட்டு தூக்கம் வராது. எங்க கஷ்டத்தைப் பார்த்த காரைக்குடிக்கார தம்பிக இப்ப சின்ன வீடு கட்டிக் கொடுத்துருக்குக. அது போதுமானதா இருக்கு. என் மகளையும் பேரனையும் நான் உசுரோட இருக்குறவரை நல்லா பார்த்துக்கணும். காய்கறி கடைகளில் வேலை செஞ்சா 200 ரூவா கிடைக்கும். அத வச்சுதே இப்ப பொழப்பு ஓடுது" என்றார் கண்ணீருடன்.

தோள் கொடு தோழா அமைப்பைச் சேர்ந்த நசீர், "வேணி அம்மா கஷ்டப்படுறதைக் கேட்டு மனசுக்கு பாரமா இருந்துச்சு. அவங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கணும்னு எங்க இளைஞர் அமைப்பு மூலமா வாட்ஸ் ஆப் உதவியால் பணம் திரட்டுனோம். அங்க, இங்கனு பிச்சு போட்டு ஒரு லட்சத்தி மூவாயிரத்தி எழுபத்தி அஞ்சு ரூபா சேர்க்க முடிஞ்சது. அதை வச்சு வேணியம்மாவின் பழைய வீட்டை இடிச்சுட்டு சின்ன வீடு கட்டி கூலிங் ஷீட் போட்டுக் கொடுத்துருக்கோம்.

வேணி இல்லம்

வீட்டுக்குள்ள ஆத்தங்குடி கல்லும் போட்ருக்கோம். இப்போதைக்கு அவங்க தூங்கி எந்திரிக்க இந்த வீடு போதுமானது. வீட்டுக்குள்ள கரன்ட் கனெக்ஷன் கொடுக்கிறது, பூச்சு வேலை, கதவு போடுறதுனு சின்ன சின்ன வேலைகள் இருக்கு. அதுக்கு யாராவது உதவி செஞ்சா முழுமையடைஞ்சிரும். அதுபோக அரசாங்கம் மாதம் 1000 ரூபா உதவித் தொகை போல வழங்கினா அவங்க வாழ்வாதாரமும் மேம்படும்" என்றார்.



source https://www.vikatan.com/social-affairs/miscellaneous/sivagangai-youngsters-built-a-home-for-homeless-woman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக