Ad

சனி, 26 செப்டம்பர், 2020

நெல்லை: ஒரே அறையில் கணவன், மனைவி தற்கொலை! - உருக்கமான தகவல்கள்

நெல்லை தச்சநல்லூர் பகுதியில் உள்ள நல்மேய்ப்பன் நகரில் குடியிருந்து வந்தவர் மாரியப்பன். பெயிண்டராக வேலை செய்து வந்தார். 35 வயதான அவரது மனைவி வடிவு (29). இருவருக்கும் திருமணமாகி 7 வருடங்கள் ஆகின்றன.

Also Read: ``மனுவே போதும்; தற்கொலை முயற்சிகள் வேண்டாம்!” - நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்

இந்த தம்பதிக்குக் குழந்தை கிடையாது. வடிவு கர்ப்பமுற்றபோதிலும் கரு கலைந்து விடுவதால் அது குறித்து மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அத்துடன் ஜோதிடத்திலும் நம்பிக்கை வைத்து அது தொடர்பான செலவுகளையும் செய்திருக்கின்றனர்,

இந்த நிலையில், வடிவு கர்ப்பம் அடைந்ததால் கணவ்ன் மனைவி மட்டுமல்லாமல் குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வடிவு, 5 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் கரு கலைந்துள்ளது.

மாரியப்பன் வடிவு தங்கியிருந்த வீடு

அதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மாரியப்பன், வடிவு ஆகியோர் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர். உறவினர்கள் இருவரையும் தேற்றியபோதிலும் சோகத்துடனேயே இருந்திருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இருவரும் நேற்று இரவு அறையில் தூங்கச் சென்றுள்ளனர். காலையில் அவர்களின் வீடு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் சந்தேகம் அடைந்து கதவைத் தட்டியிருக்கிறார்கள். ஆனால் திறக்காததால் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்கொலை செய்துகொண்ட தம்பதி

போலீஸார் வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது இருவரும் தூக்குமாட்டி தற்கொலை செய்தது தெரியவந்தது. இருவரின் உடலையும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர். குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/husband-and-wife-committed-suicide-because-of-family-problem

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக