2021 சட்டசபை தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட தொகுதி என்பதால், எடப்பாடி தொகுதி தமிழகத்தையும்தாண்டி கவனம் ஈர்த்த நட்சத்திர தொகுதியாக இருந்தது. இத்தொகுதியில்மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், அதிமுக - திமுக இடையேதான்போட்டி கடுமையாக இருந்தது. கடந்த 1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், முதன்முதலாக எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க ஜெ அணி சார்பாக சேவல் சின்னத்தில் போட்டியிட்டார். இதில் வெற்றிபெற்று முதன்முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்.1991-ல் மீண்டும் எடப்பாடி தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன் பின்னர் நடைபெற்ற 1996 மற்றும் 2006-ம் ஆண்டுகளில்நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறையும் தோல்வியடைந்தார்.
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் பழனிசாமி 98,703 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து பாமக சார்பில் போட்டியிட்ட அண்ணாதுரை 56,681 வாக்குகளுடன் 2வது இடத்திலும், திமுகவின் பெ.ஏ.முருகேசன் 55,149 வாக்குகளுடன் 3 வதுஇடத்தையும் பிடித்திருந்தனர். தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சரான எடப்பாடி பழனிசாமியை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற பரபரப்பான அரசியல் திருப்பங்கள், முதலமைச்சராக்கியதோடு, கட்சியையும அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
இதனாலேயே எடப்பாடி தொகுதியின் தேர்தல் முடிவு, இந்த முறை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. திமுக சார்பில் எடப்பாடியை எதிர்த்து சம்பத்குமார் போட்டியிட்ட நிலையில், பாமக உடனான கூட்டணி, முதல்வருக்கு ப்ளஸ் பாயின்டாக பார்க்கப்பட்டது. தொகுதியில் அதிக அளவில் இருக்கும் வன்னியர்கள் வாக்கு வங்கியும், வன்னியர்களுக்கு 10.6 சதவீதம் உள் ஒதுக்கீடு அளித்ததும் தனக்கு மீண்டும்வெற்றியைத் தேடித்தரும் என எடப்பாடி மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். மேலும், கூட்டுறவு சங்க பயிர்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி போன்றவை, நெசவாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி அறிவிப்பு, நெசவாளர் நல வாரியம், நூல் விலையைக் கட்டுக்குள் வைத்து, சரியான விலையில்நூல் கிடைக்கச் செய்யப்படும் என்பது போன்ற அறிவிப்புகளும் தனக்கு நல்ல வாக்குகளைப் பெற்றுத்தரும் என எடப்பாடி நம்பினார். அதே சமயம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவம், தமிழக நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் வழங்குவதில் நடைபெற்ற முறைகேடு புகார், மத்திய பாஜக அரசிடம் தமிழக உரிமைகளை அடகு வைத்து விட்டதாக எழுந்த குற்றச்சாட்டு, சேலம் 8 வழிச்சாலைக்கு எதிரான போராட்டம், கதிராமங்கலம் மீத்தேன் திட்டத்துக்கு எதிராகப் போராடிய மக்கள் மீதான காவல்துறை தடியடி, விலைவாசி உயர்வு எனத் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் எடப்பாடிக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்துவதாக இருந்தன.
source https://www.vikatan.com/government-and-politics/politics/edapadi-palanisamy-a-short-analysis-on-tn-elections-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக