Ad

புதன், 7 ஏப்ரல், 2021

இலுமினாட்டி இருப்பது உண்மையா? - மர்மங்களின் கதை | பகுதி - 1

-ஆர்.எஸ்.ஜெ

இலுமினாட்டிகள் பலவிதம்

இலுமினாட்டியை பற்றி பலவித விளக்கங்கள் இருக்கின்றன. உதாரணமாக ஒன்று.

இலுமினாட்டி என்பது உலகின் 13 பணக்கார குடும்பங்களைக் கொண்ட ரகசியக் குழு. இந்த 13 பணக்காரக் குடும்பங்களும் 18-ம் நூற்றாண்டிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவி, அரசியலில் இருந்து ஊடகம் வரை எல்லாவித சமூக நிறுவனங்களையும் தங்கள் அதிகாரத்துக்குள் வைத்திருக்கின்றன. மக்களுக்கு தேவையான பிரச்னைகளையும் நேரடியாக மக்களை பாதிக்கும் விஷயங்களையும் அவர்களுக்கு தெரியாமல் லாவகமாக வைத்திருக்க இயங்கும் குழு.

உதாரணமாக, உங்கள் வாழ்க்கையையே அழிக்கக்கூடிய ஒரு முக்கியமான செய்தி இன்று அரசியல்ரீதியாக நடந்தேறலாம். அது தெரிந்துவிட்டால், உங்களின் வாழ்க்கை நாசமாகிவிடுமென நீங்கள் புரிந்துகொள்வீர்கள். விழித்துக் கொள்வீர்கள். அந்த அரசியல் முடிவுக்கு எதிராக குரல் கொடுப்பீர்கள். போராடுவீர்கள். அந்த முடிவால் லாபம் அடையும் கும்பலை அழிப்பீர்கள். அந்த கும்பலுக்காக அம்முடிவை எடுக்கும் அரசை தூக்கி எறிவீர்கள். இது எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும். அப்படி நடக்காமல் இருந்தால்தான் 13 குடும்பங்களின் ஆதிக்கம் உலகமெங்கும் நீடிக்க முடியும்.

இலுமினாட்டி

ரகசியமான குழு என்றால் வலைப்பின்னலில் இருக்கும் தொடர்புகளை எப்படி சந்திக்கிறார்கள்?

குறிப்பிட்ட நாட்களில் அவர்கள் சந்திக்கிறார்கள். அவர்களுக்கு துணை புரியும் பிற அதிகாரம் நிறைந்தோரும் அச்சந்திப்புக்கு செல்கிறார்கள். அங்கு பல விஷயங்கள் விவாதிக்கப்படுகிறது. முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அந்த முடிவுகளின்படியே உலக அரசியல் அரங்கேறுகிறது. போர்கள் நடக்கின்றன. ஆட்சிகள் கவிழ்க்கப்படுகின்றன. போராட்டங்கள் வெடிக்கின்றன. கொலைகள் நடக்கின்றன. விளையாட்டு போட்டிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. செய்திகள் உருவாக்கப்படுகின்றன. நல்லவர்கள் மேல் தீவிரவாத முத்திரை குத்தப்படுகிறது. கெட்டவர்கள் உத்தமர்கள் என கொண்டாடப்பட்டு ஆட்சிப்பீடம் அளிக்கப்படுகிறது.

புதிய உலக ஒழுங்கு!

உங்கள் கண்களுக்கு முன்னால் நடக்கும் எல்லாமுமே ஏதோவொரு தனி சந்திப்பில் அதிகாரம் மிக்க சிலரால் தீர்மானித்து திட்டமிடப்பட்டு நடத்தப்படும் நாடகம். அந்த நாடகத்தை திரும்பத் திரும்ப உங்களுக்கு காட்ட ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாடகத்தை பார்த்த பழக்கத்தில் நீங்களும் அதில் பங்குபெறத் துவங்குகிறீர்கள். உங்களுக்கே தெரியாமல் அவர்களின் இயக்கத்துக்கு நீங்கள் ஆடத் தொடங்கிவிடுவீர்கள்.

இவ்வளவு திட்டவட்டமாக கனக்கச்சிதமாக எல்லாவற்றையும் செய்து பல நூறு கோடி மக்களை ஏமாற்ற முடியுமா என்று கேட்டால் முடியும் என்கிறார்கள்.

இலுமினாட்டி

இவர்களின் நோக்கம் New World Order எனப்படும் புதிய உலக அமைப்பை உருவாக்குவதுதான். அந்த புதிய உலகில் மொத்த உலகமும் இணைந்திருக்கும். நாட்டின் எல்லைகளைக் கடந்து வணிகம் தழைக்கும். மொத்த உலகத்துக்கும் ஒற்றைத் தலைமை இருக்கும். அந்த தலைமை எதேச்சதிகார தலைமையாக இருக்கும்.

தற்போது நடக்கும் விஷயங்களும் கிட்டத்தட்ட New World Order-ஐ நோக்கி நடப்பது போலவே இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டுக்கும் அரசு என ஒன்று இருந்தாலும் மொத்த நாட்டின் அரசுகளை இயக்குவது அமெரிக்கா என்ற ஒற்றை அரசுதான். இந்த உண்மை நம் எல்லாருக்குமே தெரியும். நாடுகளுக்கு தற்போது எல்லைகள் இருந்தாலும் பல நாட்டு நிறுவனங்கள் பிற நாடுகளுக்குள் சென்று கடைகள் விரிக்கின்றன. வணிகமும் பணமும் எல்லை பேதங்கள் இன்றி உலகமெங்கும் ஓடுகிறது. New world order-க்கான எல்லா சாத்தியங்களையும் நெருங்குகிறோம்.

சரி, இப்போது கொஞ்சம் உண்மை என்னவென பார்ப்போமா?

Principia Discordia என்ற பெயரில் ஒரு சிறு புத்தகம் 1960-களில் பரவியது. பிரின்சிப்பிய டிஸ்கார்டியா என்ற புத்தகம், அடிப்படையில் ஒரு ‘பகடி’ மதம். அதாவது மதத்தை போலவே புராண கதாபாத்திரங்களை உருவாக்கி, அவற்றைக் கொண்டு சமூகத்தின் எல்லாவற்றையும் புறக்கணிக்கச் சொல்லும் வேடிக்கை மதம். அவ்வளவுதான். அந்த புத்தகம் மூன்று பேரிடம் கிடைக்கிறது. அதற்கு பிறகுதான் தற்போதைய இலுமினாட்டி என்ற கருத்தியல் உருவானது.

அந்த மூன்று பேர் ப்ராம்வெல், வில்சன் மற்றும் கெரி தார்ன்லி.

பிரின்சிப்பிய டிஸ்கார்டியா புத்தகம்

‘எல்லாம் இப்படித்தான் இருக்கும்’

அந்த மூவரைப் பொறுத்தவரை உலக சமூகங்கள் எல்லாமும் ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட எதேச்சதிகாரத்துக்கு பழக்கப்பட்டிருந்தன. ‘எல்லாம் இப்படித்தான் இருக்கும்’ என்ற ஒரு அசமந்தமான மனநிலை மக்களிடம் இருந்தது. அரசுகள் யாவும் அதிகாரங்களை முழுமையாக பிரயோகித்து ஒடுக்கும்போதும் கேள்வி கேட்கவென எவரும் முன் வரவில்லை. சமூகங்களுக்குள் இருக்கும் கட்டுப்பாட்டை குலைக்க மூவரும் முடிவு செய்தனர். திரிக்கப்பட்ட செய்திகளாலும் மறைக்கப்பட்ட உண்மைகளாலும் மட்டுமே மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்த முடியுமென நம்புகின்றனர். அதற்கென அவர்கள் தேர்ந்தெடுத்ததுதான் இலுமினாட்டி பற்றிய செய்திகள்.

ப்ளே பாய் என்ற பத்திரிகையில் வில்சன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இலுமினாட்டி பற்றிய கேள்விகளை கேட்டு வாசகர்கள் கடிதங்கள் அனுப்புவதைப் போல அவர்களே அனுப்பத் தொடங்கினார்கள். அந்தக் கடிதங்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் கடிதங்களையும் அவர்களே அனுப்பினார்கள். அந்த முயற்சியைப் பற்றி விவரிக்கையில் ப்ராம்வெல் இப்படி சொல்கிறார்:

``ஒரு தகவலைப் பற்றி பல முரணான விஷயங்களை தத்துவ ரீதியாக பொருந்துவது போல திரித்து கொடுக்கும்போது, மக்கள் சந்தேகம் அடையத் தொடங்குகிறார்கள். இதுநாள் வரை தாங்கள் நம்பி வந்த செய்திகள் மீது அவநம்பிக்கை கொள்கிறார்கள்”

இலுமினாட்டி குழு

ராபர்ட் ஷியா என்பவருடன் சேர்ந்து வில்சன் மூன்று புத்தகங்களை எழுதினார். பெயர் Illuminatus Trilogy. இலுமினாட்டி குழுதான் புத்தகங்களின் அடிப்படை. பதினெட்டாம் நூற்றாண்டின் இலுமினாட்டி அல்ல; பதின்மூன்று குடும்பங்களே உலகத்தை ஆள்கிறது என சொல்லும் இலுமினாட்டி. அப்புத்தங்களின் வழி வில்சன், தான் விரும்பிய திரிபு மற்றும் முரணான கருத்துகளை ஏற்கனவே சமூகம் அறிந்திருந்த செய்திகள் மீது வைத்தார். ஜான் எஃப் கென்னடியின் கொலை, பிரஞ்சு புரட்சி என நாமறிந்திருந்த எல்லா வரலாற்றுத் தகவல்களுக்கும் வேறொரு கோணத்தை கொடுத்தார்.

புத்தகங்கள் பெரும் வெற்றி பெற்றன. அவற்றை தழுவி நாடகங்கள் எடுக்கப்பட்டன. ஊடகங்களுக்குள் ‘பதின்மூன்று குடும்பங்களின் ரகசியக்குழு’ என்ற கதை பெரும் செல்வாக்கைப் பெற்றது. பல பிரபலங்கள் இலுமினாட்டி முத்திரைகள் என சொல்லப்படும் முத்திரைகளை பிரதிபலிக்கத் தொடங்கினர்.

அசமந்த நிலையில் இருந்து மக்கள் விழிப்படைந்து அதிகாரத்தை கேள்வி கேட்கும் வழியென தொடங்கப்பட்ட விஷயம், அதை உருவாக்கியவர்களே விரும்பாத வேறொரு வடிவத்தை அடைந்தது.

Illuminatus Trilogy Book

2015-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், அமெரிக்காவின் பாதி ஜனத்தொகை ஏதோவொரு இலுமினாட்டி பாணி கற்பனைக் கதையையேனும் நம்புவது கண்டறியப்பட்டது. எந்த அரசுகளை உலுக்க, எதிர்கேள்விகள் கேட்கும் பொருட்டு, ‘பதின்மூன்று குடும்பங்களின் இலுமினாட்டி குழு’ என்ற கட்டுக்கதை உருவாக்கப்பட்டதோ, அதே அரசுகள் தங்களை அதிகாரங்களில் இருத்திக் கொள்வதற்கு அவற்றை பயன்படுத்துவதுதான் நாம் வந்து சேர்ந்திருக்கும் இக்கட்டான நிலை.

மூவரில் ஒருவரான ப்ராம்வெல், ‘வில்சன் இன்று உயிரோடு இருந்தால், சந்தோஷப்படுவதை விட, அவர் அதிர்ச்சியடைவதே அதிகமாக இருக்கும்’ என்கிறார்.

எல்லாவற்றையும் பொய் என சந்தேகக் கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்கும் மக்களிடம் இன்று எது உண்மை என சொல்ல வேண்டியிருக்கிறது. உண்மையை சொன்னாலும் அதை அவர்கள் ஆயிரம் முரண் செய்திகளைக் கொண்டே எதிர்கொள்கிறார்கள். உண்மையையும் நம்ப மறுக்கிறார்கள். இந்த வகை மக்களுக்கே எதிராக போய் முடியும். அப்படித்தான் போய் முடிந்து கொண்டும் இருக்கிறது.

Also Read: கூகுள் க்ரோம்... ப்ரிஸ்மா... ஃபோட்டோஷாப்... இவற்றிலும் உண்டு இலுமினாட்டி குறியீடுகள்!

பொய்யா… கோப்பால்ல்ல்ல்ல்ல்

பதின்மூன்று குடும்பங்கள் நம்மை ஆளுகின்றன என்பது பொய்யா? மக்களை புறக்கணித்துவிட்டு அவர்களுக்கு ஆதரவாகத்தான் அரசுகள் செயல்படுகின்றன என்பதும் பொய்யா? அரசுகளை நிர்ணயிப்பது அவர்கள் என்பதுமா பொய்? நமக்கு வழங்கப்படும் செய்திகள் யாவும் அவர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே என்பது பொய்யா?

எதுவும் பொய்யல்ல. திரிக்கப்பட்டவை. ஓர் உண்மை திரிக்கப்பட்டதால் உருவானவை. நம்மை ஆள்வது பதின்மூன்று குடும்பங்கள் அல்ல; முதலாளிகள்! உலக நாடுகளில் இருக்கும் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவான கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள்!

உலக ஊடகங்கள் பெரும்பாலானவை கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. உலக அரசுகளை அவர்களே நிர்ணயிக்கின்றனர். அவர்கள் ஆதிக்கம் நம் கண்களுக்கு நேரடியாக தெரிந்திடக்கூடாது என்பதாலேயே திசைதிருப்பும் செய்திகள் நமக்கு வழங்கப்படுகின்றன. அரசுகளும் அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. மக்களையும் அவர்களுக்காகவே ஒடுக்குகின்றன.

உண்மைக்கும் திரிபுக்கும் இடையில்தான் நம் கழுத்துகள் நெரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நம் கண்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த உலகமும் அழிந்து கொண்டிருக்கிறது.

இலுமினாட்டிக்கும் உண்மைக்கும் இடையிலிருப்பது சிறுகோடுதான்.

(தொடரும்)



source https://www.vikatan.com/news/controversy/illuminati-real-story-behind-explained

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக