Ad

வியாழன், 17 செப்டம்பர், 2020

`லடாக் எல்லையில் பஞ்சாபிப் பாடல்களை ஒலிக்கவிடும் சீன ராணுவம்!’ - ஏன் தெரியுமா?

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாங்கோங் சோ ஏரி அமைந்திருக்கிறது. இந்த ஏரியின் தெற்குக் கரைப் பகுதியில்தான் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி இரவில் முறியடித்தது. பாங்கோங் சோ ஏரியை அடுத்த தொடர்ச்சியற்ற மலைத் தொடரின் சிகரங்கள் `ஃபிங்கர்’ என்றழைக்கப்படுகின்றன. இந்தப் பகுதியிலுள்ள ஃபிங்கர் - 4 சிகரம் அருகில் இருதரப்பு ராணுவ வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்திய ராணுவம்

ஊடுருவல் முயற்சிக்குப் பின்னர் இருதரப்பும் அந்தப் பகுதியில் துருப்புகளைக் குவித்திருக்கின்றன. இதனால், எல்லையில் பதற்றம் நீடித்துவருகிறது. எல்லையில் அமைதி திரும்புவதற்கான பேச்சுவார்த்தைகள் இருதரப்பிலும் இந்த வாரமே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் ஃபிங்கர் 4 பகுதியில் பெரிய ஸ்பீக்கர்களை வைத்து சீன ராணுவத்தினர் பஞ்சாபிப் பாடல்களை ஒலிக்கவிட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்திய துருப்புகளை திசைதிருப்புவதற்காக சீனா இந்த முயற்சியைச் செய்துவருவதாகச் சொல்கிறார்கள் பாதுகாப்புத்துறை வல்லுநர்கள்.

Also Read: Pangong Tso: `பாங்கோங் சோ ஏரி இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?' - சீன ஊடுருவல் முறியடிக்கப்பட்ட பின்னணி!

இந்திய ராணுவ வீரர்கள் ஹிந்தி மற்றும் பஞ்சாப் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருப்பது மற்றும் பாடுவது போன்றவற்றை சீன ராணுவ வீரர்கள் கேட்டிருக்கலாம் என்றும், அதனாலேயே இதுபோல் பஞ்சாபிப் பாடல்களை அதிக சத்தத்தில் ஒலிக்கவிட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். அதேபோல், உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காகவும் சீன ராணுவம் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்கிறார்கள்.

பாங்கோங் சோ ஏரி

`1962 இந்தோ-சீனப் போருக்கு முன்னால், உங்களது மொழி எங்களுக்குத் தெரியும் என்பதைக் காட்டிக்கொள்வதுபோல், பாலிவுட் ஹிந்தி பாடல்களை இதேபோல் சத்தமாக சீன ராணுவம் பெரிய ஸ்பீக்கர்கள் மூலம் ஒலிக்கவிட்டது’ என்று சொல்கிறார்கள்.

Also Read: India-China Face-Off: `DSDBO சாலை... கிளாஸ் 70; அக்டோபர் 15 டார்கெட்!’ - என்ன நடக்கிறது எல்லையில்?

எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக ராணுவ தளபதி எம்.எம்.நரவானே லடாக் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் கூறியிருந்தார். அதேபோல், இந்திய நிலப்பரப்பில் 38,000 ச.கி.மீ பகுதியை சீனா ஆக்கிரமித்திருப்பதாகவும், கூடுதலாக 90,000 ச.கி.மீ பகுதியைச் சொந்தம் கொண்டாடுவதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.



source https://www.vikatan.com/news/india/chinese-troops-played-punjabi-songs-in-ladakh-forward-posts

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக