Ad

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

இந்தியாவில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்...முதலிடத்தில் எந்த மாநிலம்?

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், செப்டம்பர் 14-ம் தேதி நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கழுத்து எலும்புகள் முறிக்கப்பட்டு, கால்கள் செயல்படாது, நாக்கு வெட்டப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் கடந்த 29-ம் தேதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம், பல்ராம்பூரைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண், போதைப்பொருள் கொடுக்கப்பட்டுக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இடுப்பெலும்பு மற்றும் கால் முறிக்கப்பட்டு மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

மத்தியப் பிரதேசம் கார்கோனே மாவட்டத்தில் உள்ள மருகார் என்ற கிராமத்தில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியைக் கடத்தி மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். தமிழகத்தில் செப்டம்பர் 28-ம் தேதி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் வேலை கேட்டுச் சென்ற அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த, பிரெமோஜோதி தூரி என்ற 22 வயது வடமாநில பெண்ணை ஆறுபேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இப்படி, நாம் தினசரி பார்க்கும், படிக்கும் செய்திகளில் பெண் குத்திக் கொலை, கல்லூரி பெண் முகத்தில் ஆசிட் விச்சு, இளம்பெண் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார், பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்பது போன்ற செய்திகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பாதிக்கப்படும் பெண்களின் பெயர்கள் மட்டுமே மாறுகிறதே தவிர, பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அதை ஆதாரபூர்வமாக உறுதிபடுத்தும் விதமாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்.சி.ஆர்.பி) சமீபத்திய அறிக்கை அமைந்திருக்கிறது.

மேற்கண்ட எண்ணிக்கையை வைத்துப் பார்க்கையில் ஒவ்வொரு ஆண்டும் குற்ற விகிதம் அதிகரித்துக்கொண்டே செல்வதை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. 2019-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான அதிக குற்றங்கள் நடைபெற்ற மாநிலங்களில் வரிசையில் 59,853 குற்றங்கள் பதிவாகி உத்தரப்பிரதேசம் மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. 41,550 குற்றங்கள் பதிவாகி ராஜஸ்தான் மாநிலம் இரண்டாம் இடத்திலும். மகாராஷ்டிரா 37,144 குற்றங்கள் பதிவாகி மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.

பெண் குழந்தைகள் மீதான வன்முறை

2018-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் 27,866 குற்றங்கள் பதிவாகியிருந்த நிலையில். 2019-ம் ஆண்டு 41,550 குற்றங்கள் பதிவாகியிருக்கின்றன.தமிழகத்தைப் பொறுத்தவரை 2017- 5,397, 2018- 5,822, 2019 - 5,934 என்ற எண்ணிக்கையில் குற்றங்கள் பதிவாகியிருக்கின்றன. அதேபோல இந்தியளவில் மிகக்குறைந்த அளவில் 33 குற்றங்கள் டையூ & டாமனில் பதிவாகியிருக்கிறது.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை:

இந்தியா முழுவதும் 2019-ம் ஆண்டு 283 பாலியல் வன்கொடுமை/ கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை நிகழ்வுகள் நடந்துள்ளன. இதில், 286 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிக குற்றங்கள் பதிவாகியிருக்கும் முதல் மூன்று மாநிலங்களில் வரிசையில்

01.மகாராஷ்டிரா -

குற்றம்- 47

பாதிக்கப்பட்டவர்கள்- 47

02.மத்தியப்பிரதேசம் -

குற்றம்- 37

பாதிக்கப்பட்டவர்கள்- 37

03. உத்தரப்பிரதேசம்

குற்றம்- 34

பாதிக்கப்பட்டவர்கள்- 35

இந்தியா முழுவதும், வரதட்சணை தொடர்பான இறப்புகளைப் பொறுத்தவரை 7,115 குற்றங்கள் பதிவாகியிருக்கின்றன. இதில், 7,162 பேர் இறந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. ஆசிட் தாக்குதல் குறித்து 150 குற்றங்களும். இதில், 156 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு 42 ஆசிட் வீசும் முயற்சியும் நடந்துள்ளது.

வரதட்சணை

கடந்தாண்டு இந்தியாவில் பெண்களைக் கடத்தியது தொடர்பாக 72,780 குற்றங்கள் பதிவாகியிருக்கின்றன. இதில், 73,844 பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில், கொலை செய்யக் கடத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மட்டும் 109. பணத்துக்காகக் கடத்தப்பட்டவர்கள் 80 பேர். திருமணம் செய்யக் கடத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 32,630. அதிக பெண்கள் கடத்தப்பட்ட மாநிலங்களின் பட்டியலைப் பார்த்தால்,11,745 பெண்கள் கடத்தப்பட்டு உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரைக் கடந்தாண்டு 702 பெண்கள் கடத்தப்பட்டுள்ளார்.

Also Read: பெண்கள் வாழத் தகுதியில்லாத தேசமாகிறதா உத்தரப்பிரதேசம்?

பாலியல் வன்கொடுமை

கடந்தாண்டு இந்தியா முழுவதும் 32,033 குற்றங்கள் பதிவாகியிருக்கின்றன. இதில், 32,260 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்ட 27,283 பெண்களும், 18 வயதுக்குக் கீழ் உள்ள 4,977 பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கின்றனர். அதேபோல, பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு 4,038 பெண்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

01.ராஜஸ்தான்-

குற்றம்- 5,997

பாதிக்கப்பட்டவர்கள்- 6,051

02. உத்தரப்பிரதேசம்

குற்றம்- 3,065

பாதிக்கப்பட்டவர்கள்- 3,131

03.மத்தியப்பிரதேசம் -

குற்றம்- 2,485

பாதிக்கப்பட்டவர்கள்- 2,490

சைபர் குற்றங்கள்:

கடந்தாண்டு பெண்களுக்கு எதிராக 1,621 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில், 1,645 பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிக குற்றங்கள் நடைபெற்ற முதல் மூன்று மாநிலங்கள் வரிசையில் ஒடிசாவில் 390 குற்றங்களும், அசாமில் 329 குற்றங்களும், உத்தரப்பிரதேசத்தில் 210 குற்றங்களும் நடைபெற்றுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை, 38 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. அதேவேளையில், நம் அருகிலிருக்கும் புதுச்சேரியில் ஒரு குற்றம் கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்தினர் கோரிக்கை என்ன? - 5 விஷயங்களைப் பட்டியலிட்ட பிரியங்கா காந்தி

இந்தியாவில் உள்ள 19 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிராக நடந்த மொத்த குற்றங்களின் எண்ணிக்கையைப் பார்க்கையில். 2017-40,839, 2018- 42,180, 2019- 45,485 குற்றங்கள் பதிவாகியுள்ளன. அதிலும், கடந்தாண்டு அதிக குற்றங்கள் நடைபெற்ற முதல் மூன்று பெருநகரங்களின் வரிசையில், தலைநகர் டெல்லியில் 12,902 குற்றங்களும், மும்பையில் 6,519 குற்றங்களும், பெங்களூரில் 3,486 குற்றங்களும் பதிவாகியுள்ளன. கடந்தாண்டு தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் 729 மற்றும் கோவையில் 85 குற்றமும் பதிவாகியுள்ளன.

பாலியல் குற்றம்

மொத்த அறிக்கையையும் பார்க்கையில் கடந்த ஆண்டைவிட விட அனைத்து குற்றங்களும் இந்தாண்டு அதிகரித்திருப்பது தெரியவருகிறது. அதோடு, இந்தியாவில் ஒருநாளைக்கு 87 பெண்கள் பாலியல் வன்கொடுமை ஆளாவதும் தெரியவருகிறது. 2018-ம் ஆண்டில் 58.8 சதவீதமாகப் பதிவாகியிருந்த குற்றம், 2019-ம் ஆண்டு 62.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயகப் பெண்கள் கூட்டமைப்பின் செயலாளர் கவிதா கிருஷ்ணனிடம் பேசியபோது, ``உண்மையில் இந்தியாவில் பாலியல் குற்றங்கள் குறித்து காவல்நிலையத்தில் பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கையே குறைவு. பாதிக்கப்பட்டவர்கள் அந்த குற்றங்களைக் காவல்நிலையங்களுக்குக் கொண்டுவருவதற்கு முன்பே பேசி, பயமுறுத்தி, வழக்கு பதியவிடாமல் செய்யப்படுகிறது என்பதுதான் உண்மை. டெல்லி நீதிமன்றத்துக்கு வரும் 40 சதவிகிதத்துக்கும் அதிகமான பாலியல் வன்கொடுமை வழக்குகள், காதல் திருமணங்கள் மற்றும் வீட்டை விட்டுச் சென்று திருமணம் செய்தவர்கள் மீது அவர்களின் குடும்பத்தார்களே பதிந்த வழக்குகளாகத்தான் இருக்கின்றன. இது பாலியல் வன்கொடுமை வழக்கில் எப்படி வரும்? மாற்று சாதி, மதம் காரணமாக அவர்கள் குடும்பத்தினர் அந்தப் பெண்ணின் மீது நடத்தும் குற்றத்தில்தானே சேரும்.

கவிதா கிருஷ்ணன்

பாலியல் வன்முறையில் ஒரு பெண் உயிரிழந்தால்தான் அந்த செய்தி பெரிதாகப் பேசப்படுகிறது. உயிருடன் இருக்கும் ஒரு பெண் பாதிக்கப்படும்போது அப்படி நடப்பதில்லை. மாறாக, அந்த பெண் தான் பெரிதும் பாதிக்கப்படுகிறாள். இந்திய முழுவதும் நடக்கும் குற்றங்களில் தலித்துகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள்தான் அதிகம். அதிலும், தலித் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தான் மிக அதிகம். தலித்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் நீதியைப் பெறுவதென்பது மிக மிகக் கடினம்" என்றார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/crimes-against-women-on-the-rise-in-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக