Ad

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

திருச்சி: மனைவி, மாமியாரைக் கழுத்தை அறுத்துக்கொன்ற இளைஞர்! குழந்தையுடன் தலைமறைவு

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியையும் மாமியாரையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தனது 2 வயது மகளுடன் தலைமறைவாகியுள்ளார் திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். கொலை செய்த பின்னர் பக்கத்து வீட்டுக்காரரிடம் சாவகாசமாகப் பேசிவிட்டு பைக்கில் தப்பிய இளைஞரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மனைவி பவித்ரா

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறத்தில் உள்ள பெரிய மிளகு பாறை நாயக்கர் தெருவில் வசித்து வருபவர் உலகநாதன். இவர் தனது மனைவி பவித்ரா, மாமியார் கலைச்செல்வி, மகள் கனிஷ்காவுடன் வசித்து வந்தார். பெரம்பலூர் எம்.ஆர்.எஃப் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த இவர், தற்போது வேலையில்லாமல் மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் கணவன்- மனைவி இருவருக்குள் நடந்த பிரச்னையை அவரது மாமியார் கலைச்செல்வி தட்டிக்கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த உலகநாதன் மனைவி, மாமியாரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்கிறார்.

பின்னர், வீட்டைப் பூட்டிவிட்டு தனது 2 வயதுக் குழந்தையான கனிஷ்காவுடன் டூவிலரில் தப்பியிருக்கிறார். குழந்தையை டூவிலரில் உட்காரவைத்தபோது பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர் அவரிடம் பேச்சுக்கொடுத்திருக்கிறார். அப்போது, எதுவுமே நடக்காதுபோல் உலகநாதனும், பக்கத்துக்கு வீட்டில் பத்து நிமிடம் உட்கார்ந்து பேசிவிட்டு, பின்னர் டூவிலரில் மகளைத் தூக்கிக்கொண்டு சென்றிருக்கிறார். பின்னர், மாலை வரையிலும் வீடு திறக்காதது கண்டு அப்பகுதி மக்கள் திறந்து பார்த்துள்ளனர்.

போலீஸ் விசாரணை

அப்போது இருவரும் சடலமாகக் கிடந்ததைக் கண்டு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் மாநகர துணை கமிஷனர் குமார் ரெட்டி, உதவி கமிஷனர் மணிகண்டன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இதைத்தவிர அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சடலங்களைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை தொடங்கியிருக்கிறார்கள்.

Also Read: சீர்காழி: கோலம்போட வந்த ஆசிரியர் கொலை! - விஜய் ரசிகர்மன்ற மாவட்ட நிர்வாகி கைது

வழக்கை விசாரித்து வரும் போலீஸாரிடம் பேசினோம்.``இப்போது தான் விசாரிக்கத் தொடங்கியிருக்கிறோம். முதல்கட்ட விசாரணையில் உலகநாதனின் தாய், தனது மருமகளுக்குப் பலமுறை போன் அடித்துப் பார்த்திருக்கிறார். அவர் எடுக்காதபட்சத்தில் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு போனில் தகவலைச் சொல்லியிருக்கிறார்.

மாமியார் கலைச்செல்வி

அவர்களும் வீட்டின் பூட்டை உடைத்துத் திறந்து பார்த்தபோது தான் இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் எங்களுக்குத் தகவல் அளித்ததன் பெயரில் விசாரிக்கத் தொடங்கியிருக்கிறோம். மனைவியின் நடத்தையில் உலகநாதன் சந்தேகப்பட்டு சண்டை போட்டிருக்கிறார். அப்போது, மாமியார் கலைச்செல்வி, அவரது சட்டையைப் பிடித்து கேள்வி கேட்டதாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த உலகநாதன், மனைவி மற்றும் மாமியாரைக் கொலை செய்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கொலை செய்துவிட்டு உலகநாதன், தனது 2 வயது மகளுடன் தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடித்தபிறகுதான் முழு விவரங்களும் தெரியவரும்'' என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/man-kills-wife-and-mother-in-law-in-trichy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக