Ad

திங்கள், 21 செப்டம்பர், 2020

மதுரை: பழைமையான விஷ்ணு சிலை கண்டுபிடிப்பு... இதன் காலத்தை எப்படிக் கணக்கிடுகிறார்கள் தெரியுமா?

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அடுத்த பெரிய உலகாணி கிராமத்தில் 8-ம் நுாற்றாண்டு விஷ்ணு சிலை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கண்ணன் மற்றும் பேரராசிரியா் சங்கையா கொடுத்த தகவலைத் தொடர்ந்து அரசு அருங்காட்சிய காப்பாட்சியா் மருதுபாண்டியன், ஆய்வாளா் உதயகுமார் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வு முடிவில் இது 8-ம் நுாற்றாண்டினைச் சேர்ந்த பாண்டியா் கால சிலை என்பது உறுதிசெய்யப்பட்டது.

சிலை

இது குறித்து தொல்லியல் குழு, "இவ்வூரின் பழைய பெயா் குலசேகராதிப சதுா்வேதிமங்கலம் என்றும் உலகுணிமங்கலம் என்றும் அறியப்படுகிறது. மேலும் 8-ம் நுாற்றாண்டு பாண்டியா் காலம் முதற்கொண்டு சிறப்பு பெற்றுவிளங்குகிறது என்பது தெரியவருகிறது. தற்போது கிடைத்த சிற்பத்தின் தன்மை, அமைப்பு, அவற்றில் உள்ள ஆயுதங்கள் மூலம் காலம் கணிக்கப்பட்டது. குறிப்பாக முப்புரிநுாலானது வலது கைக்கு மேலாக செல்வது உற்றுநோக்கத்தக்கது. இச்சிலைபோன்ற அமைப்பில் பாண்டிய நாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளது.

Also Read: கீழடி: 6-ம் கட்ட அகழாய்வுப் பணி நிறைவுபெறுகிறது... அடுத்த கட்டம் எப்போது?

உதாரணமாக திருமலாபுரம், திருப்பரங்குன்றம், செவல்பட்டி போன்ற இடங்களில் இதே போன்ற சிற்ப அமைப்புடன் கூடிய கற்சிலை கிடைத்துள்ளது. பல்லவர் காலத்திலும் இதே போன்று வலது கைக்கு மேலாக முப்புரிநுால் செல்லும் அமைப்புடன் கூடிய கற்சிற்பங்கள் ஏராளமாக கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சிற்பம் நின்ற நிலையில் நான்கு கைகளுடன் காட்சியளிக்கிறது. மேற்கைகளின் முறையே வலது கையில் சக்கரம் உடைந்த நிலையிலும், இடது கையில் சங்கும் உள்ளது. கீழ் வலது கை வரத மற்றும் இடது கை கடி முத்திரையிலும் உள்ளது.

சிலை

சக்கரம் மற்றும் சங்கின் அமைப்பானது இச்சிற்பம் மிகப் பழைமையானது என்பதினை மேலும் உறுதிப்படுத்துகிறது. கி.பி.13-ம் நுாற்றாண்டில் வெளியிடப்பட்ட பாண்டியா் கால கல்வெட்டின் படி இவ்வூரிலிருந்த கிராமசபையார் பாசிபாட்ட வரி (மீன்பிடிப்பதற்கான வரி) வருவாயைக் கொண்டு ஆண்டு தோறும் குளங்களைக் குழிவெட்டி பராமரிக்க அனுமதித்துள்ள செய்தி இதில் சொல்லப்படுகிறது. இக்கல்வெட்டானது தமிழ் மற்றும் சமஸ்கிருதம் எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும் இவ்வூா் தொடா்பான கல்வெட்டு சிலை ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகளிலும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது" என்றனர்



source https://www.vikatan.com/government-and-politics/archaeology/ancient-lord-vishnu-statue-found-near-madurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக