Ad

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

அரசியல் ரூட் எடுக்கும் `நீட்' சூர்யா... பரபரக்கும் இயக்குநர் பாண்டிராஜ் படம்! #VikatanExclusive

நீட் நுழைவுத்தேர்வுகள் தொடர்பாக சூர்யா வெளியிட்ட ஓர் அறிக்கை அரசியல் அரங்கில் மட்டுமல்லாமல், நீதித்துறையிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. சூர்யாவுக்கு ஆதராவாக பலரும் குரல் எழுப்ப, நீதித்துறையும் அவர் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு இல்லை என அறிவித்துவிட்டது. இதற்கிடையே சூர்யாவின் அடுத்தப்படம் என்ன என்பது குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன. அவர் தற்போது மூன்று படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், அதில் எந்தப்படத்தில் முதலில் நடிக்கப்போகிறார்?
சூரரைப் போற்று

சுதா கொங்கரா இயக்கத்தில் 'ஏர் டெக்கான்' நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகவைத்து எடுக்கப்பட்டிருக்கும் சூர்யாவின் 'சூரரைப் போற்று' வரும் அக்டோபர் 30-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகயிருக்கிறது. கோலிவுட்டில் தியேட்டர்கள் மூலமாக இல்லாமல் நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸாகும் பெரிய ஹீரோவின் படம் இதுதான். இதற்கு தியேட்டர் அதிபர்களின் எதிர்ப்பு ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க, அதை மற்ற தயாரிப்பாளர்களின் துணைகொண்டே சமாளிப்பது என முடிவெடுத்திருக்கிறார் சூர்யா.

இதற்கிடையே தனது 39-வது படமாக ஹரி இயக்கத்தில் ’அருவா’ படத்தில் நடிக்கவிருந்தார் சூர்யா. ஆனால், தற்போது என்ன பிரச்னை என்று தெரியவில்லை; ’அருவா’ படத்தைப் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருக்கிறது. இதற்கிடையே சூர்யாவின் ஓடிடி ரிலீஸ் முடிவை எதிர்த்து இயக்குநர் ஹரியும் அறிக்கை விட்டிருப்பதால் இந்தப் படம் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை என்றே தெரிகிறது.

இதற்கிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. ஆனால், இந்தப் படத்தை தொடங்குவதற்கு முன்பு வெற்றிமாறன் தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு ஒரு படம் இயக்கித்தரவேண்டியிருக்கிறது. வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கும் நேரத்தில் இன்னொரு படத்தில் தான் நடித்துவிடலாம் என முடிவெடுத்திருக்கிறார் சூர்யா.

இந்தப் படத்தை 'பசங்க' பாண்டிராஜ் இயக்கவிருக்கிறார். ’கடைக்குட்டி சிங்கம்’ படம் முடிந்தப்பிறகு சூர்யாவை இயக்கவிருந்த பாண்டிராஜ், அந்தப் படம் ஆரம்பிக்க தாமதமானதால், சிவகார்த்திகேயன் படத்தை இயக்க சென்றுவிட்டார். தற்போது, மீண்டும் சூர்யா - பாண்டிராஜ் கூட்டணியில் படம் ஆரம்பிக்கும் வேலைகள் தொடங்கியிருக்கிறது. படத்துக்கு இமான் இசையமைக்கிறார்.

வாடிவாசல்
அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்கள் கல்வி கற்க பல்வேறு பொருளாதார உதவிகள் செய்துவரும் சூர்யாவின் உண்மையான குணத்தைப் பிரதிபலிக்கும் கதையாக இது இருக்குமாம். சூர்யா இதுவரை இதுபோன்ற கதையில் நடித்ததேயில்லை என்கிறார்கள். படத்தில் அரசியல்வாதியாக சூர்யா நடிக்க இருக்கிறாராம். முக்கியமான தலைவராகவே படத்தில் வருவார் என்கிறார்கள்.

Also Read: `ஆயுத எழுத்து' சீரியல் ஏன் நிறுத்தப்பட்டது... ஹீரோயின் சரண்யா என்ன சொல்கிறார்?!

'சூரரைப் போற்று' அக்டோபர் 30 ரிலீஸானதும் நவம்பரில் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்கிறார்கள். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். ஆனால், பாண்டிராஜ் படம் பல கதாபாத்திரங்கள் கொண்ட கதை என்கிறார்கள். அதனால், இதை ஜனவரிக்கு முன்பாகவே படமாக்கி முடித்துவிடமுடியுமா என்பதில் சந்தேகம் நிலவுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பை எப்போது தொடங்கினாலும் வரத்தயாராக இருக்கிறேன் என்று சூர்யா சொல்லியிருப்பதால் ஜனவரியை மனதில் வைத்து 'வாடிவாசல்' டீம் வேலைசெய்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது.

இயக்குநர் பாண்டிராஜ்

இதற்கிடையே சூர்யா, 'கூட்டத்தில் ஒருத்தன்' படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கிவரும் அடுத்தப்படத்திலும் நடிக்கயிருக்கிறார். இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரமான நீதிபதி கேரெக்டரில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இந்தப் படத்தை சூர்யாவே தனது 2டி தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் விரைவில் சூர்யா கலந்துகொள்ள இருக்கிறார் என்கிறார்கள்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/suriya-upcoming-movie-projects-and-its-political-connections

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக