Ad

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

கரூர்: காதல் மனைவி முன்பு வெட்டிக் கொல்லப்பட்ட கணவர்! - இளநீர் கடை பயங்கரம்

கரூரில், இளநீர் கடையில் வியாபாரம் செய்து வந்த போது, காதல் மனைவி முன்பு, பைக்கில் வந்த இருவர் கணவரை வெட்டிகொலை செய்த சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொலைசெய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி

கரூர், சின்ன ஆண்டான்கோவில் கோவில்மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர், கரூர் - கோவை சாலையில், இளநீர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

Also Read: கரூர்: செல்போனில் கேம்... கண்டித்த தாய்! - விபரீத முடிவெடுத்த சிறுவன்

குணசேகரனும், அவரது மனைவியும் இளநீர் காய்களை மொத்தமாக வாங்குவதற்கு, அதிகாலையில் பொள்ளாச்சிக்கு சென்றுவிட்டனர். இதனால், இளநீர் கடையை குணசேகரனின் மகன் கிருஷ்ணமூர்த்தியும் (27), அவரது மனைவி ஷஸ்மிதா (23) ஆகிய இருவரும் பார்த்துக் கொண்டனர்.

கொலை நடைபெற்ற இடத்தில் போலீஸ்

அதோடு, கிருஷ்ணமூர்த்தி தனது தந்தை நடத்தும் இளநீர் கடை அருகிலேயே, பழஜூஸ் கடை நடத்திவந்தார். அதனால், இரண்டு கடைகளையும் நேற்று அவர் நடத்தி வந்துள்ளார். இவருக்கும், ஷஸ்மிதாவுக்கும் திருமணம் நடந்து ஆறு மாதங்கள்தான் ஆகிறது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்.

Also Read: நெல்லை: `கட்டப் பஞ்சாயத்து.. அடித்துக் கொலை!’ - இன்ஸ்பெக்டர்மீது வழக்கு பதிவு

இந்தநிலையில், நேற்று மனைவியோடு கிருஷ்ணமூர்த்தி கடையில் பிஸியாக வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த இருவர், இளநீர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியை, அவரது மனைவி ஷஸ்மிதா கண் எதிரிலேயே தலை மற்றும் கைகளில் வெட்டி விட்டு, வந்த வேகத்தில் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த கிருஷ்ணமூர்த்தியை அங்கிருந்தவர்கள் மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார்.

கொலை நடைபெற்ற இடத்தில் போலீஸ்

இதுகுறித்து, கரூர் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பைக்கில் வந்து கிருஷ்ணமூர்த்தியை வெட்டி கொலைசெய்துவிட்டு சென்ற நபர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தி, ஷஸ்மிதாவை காதலித்து திருமணம் செய்ததால், இந்த கொலைக்கு காதல் விவகாரம் பின்னணியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஷஸ்மிதா வீட்டின் எதிர்ப்பை மீறிதான், கிருஷ்ணமூர்த்தி அவரைத் திருமணம் செய்தார் என்று சொல்கிறார்கள். போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலையில், பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொடூரக் கொலைச் சம்பவம், கரூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/gang-kills-husband-in-front-of-wife-in-karur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக