Ad

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

குமரி: நடத்தையில் சந்தேகம்... மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த கணவன்!

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர்(39). தென்னை மரம் ஏறும் தொழில் செய்துவந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தங்கம் (30) என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராஜசேகர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமை ஆனதாக கூறப்படுகிறது. இதனால் அந்த குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. வீட்டுக்கு வாடகை கொடுக்கவே சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. கணவரின் வருமானம் கைகொடுக்காததால் தங்கம் அருகில் உள்ள முந்திரி ஆலைக்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனால் கொஞ்சம் நாள் பிரச்னை இல்லாமல் போனது. இதற்கிடையில் மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்த ராஜசேகர், தினமும் மது போதையில் மனைவி தங்கத்தை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். தங்கம் வழக்கம்போல நேற்று முந்திரி ஆலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட ராஜசேகர்

அப்போது வீட்டில் இருந்த ராஜசேகர் மனைவியிடம் இனி நீ வேலைக்கு செல்லக்கூடாது என கூறியிருக்கிறார். இதனால் இருவருக்கும் வாய்தகராறு ஏற்படுள்ளது. இரவு இரண்டு குழந்தைகளையும் தனி அறையில் தூங்க வைத்திருக்கிறார் ராஜசேகர். பின்னர் மற்றொரு அறையில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்த மனைவி அறைக்கு சென்றுள்ளார். தேங்காய் வெட்ட பயன்படுத்தும் அரிவாளால் மனைவி தங்கத்தின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் தங்கம் இரத்த வெள்ளத்தில் கட்டிலிலேயே பிணமானார்.

இதையடுத்து வீட்டைவிட்டு வெளியே வந்த ராஜசேகர் வராந்தாவில் நைலான் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் விழித்து பார்த்தபோது தாய், தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர். பின்னர் இதுபற்றி இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸார் அங்கு சென்று இருவரது உடல்களையும் மீட்டு ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட தங்கம்

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "மனைவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்ததால் இந்த கொலை நடந்துள்ளதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். இருப்பினும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர். மனைவி மீது சந்தேகம் எழுந்ததால் நடந்த கொலை மற்றும் தற்கொலை சம்பவத்தால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/husband-killed-wife-and-then-suicide-in-kanyakumari

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக