Ad

திங்கள், 21 செப்டம்பர், 2020

கோவை: 2 கிலோ தங்கம்... 58 கிலோ வெள்ளி... 66 கேரட் வைரம்! - ஜோதிட குடும்பத்தின் வரதட்சணைக் கொடுமை

சென்னை, கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவரின் மகள் அன்னபூரணி. கோவையைச் சேர்ந்த ஶ்ரீகாந்த் – கல்பனா தம்பதியின் மகன் ரித்தீஷ். கல்பனாவும் ஶ்ரீகாந்தும், காந்திபுரத்தில் `பஞ்ச ரத்தின ஜெம்ஸ்’ என்ற பெயரில், ராசிக் கற்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார்கள். அன்னபூரணிக்கும் ரித்தீஷுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

ரித்தீஷ்

Also Read: `ரூ.11 லட்சம், 75 சவரன் வரதட்சணை; போதையில் உளறிய மாமா!' - திருமண வரவேற்பில் சிக்கிய போலி டாக்டர்

திருமணத்துக்குப் பிறகு அன்னபூரணி கோவை வந்துவிட்டார். சில மாதங்களிலேயே கணவர் ரித்தீஷும் அவரது பெற்றோரும் வரதட்சணை கேட்டு அன்னபூரணியை கொடுமைப்படுத்தியதாகப் புகார் எழுந்திருக்கிறது.

இது தொடர்பாக கோவை அனைத்து மகளிர் காவல் நியைத்தில் அன்னபூரணி அளித்திருக்கும் புகாரில், `மாப்பிள்ளை வீட்டார் கேட்டுக்கொண்டபடி, என் பெற்றோர் திருமணத்தின்போது 58 கிலோ வெள்ளி, இரண்டு கிலோ தங்கம், 66 கேரட் வைர நகைகள், ரூ. 7 லட்சம் மதிப்பிலான மகாலட்சமி ஃபிரேம், ரூ.5 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவற்றை வரதட்சணையாகக் கொடுத்தனர்.

ஶ்ரீகாந்த்-கல்பனா

மேலும், எனக்கு 15 பட்டு புடவைகள், கணவருக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆடைகள், ரூ.2.50 லட்சம் மதிப்பிலான வாட்ச், பிளாட்டினம் மோதிரம் இரண்டு, வைர மோதிரம் ஒன்று ஆகியவற்றைக் கொடுத்தனர். ஆனால், திருமணம் ஆன மூன்று மாதங்களிலேயே என் கணவரும் அவருடைய பெற்றோரும் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்யத் தொடங்கினர்.

`ஏற்கெனவே கொடுத்ததைப்போல இரண்டு மடங்குப் பொருள்கள், ரூ.1 கோடி மதிப்பிலான கார், ரூ.2 கோடி மதிப்பில் வீடு வாங்கித்தர வேண்டும். அப்படி செய்தால்தான் சேர்ந்து வாழ முடியும்’ என்று கூறினர். இதற்காக, எனக்குச் சாப்பாடுகூடக் கொடுக்காமல் பட்டினி போட்டுக் கொடுமைப்படுத்தினர். தொடர்ந்து என்னை மிகவும் கேவலமாகப் பேசி, `உடல்நலம் சரியில்லாதவள்’ என்று கூறி சென்னைக்கு அனுப்பிவைத்துவிட்டனர். அதன் பிறகு, கணவர் தரப்பிலிருந்து அழைக்கவில்லை.

கல்பனா

நாங்கள் அவர்களை அழைத்தபோது. வரதட்சணை வழங்க வேண்டும் என்று சொல்லிக் கெட்டவார்த்தையில் திட்டினர். இது தொடர்பாக வெளியில் புகார் அளிக்கக் கூடாது என்றும் எங்களை மிரட்டினர். எனவே, என் கணவர் மற்றும் அவருடைய பெற்றோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அன்னபூரணியின் புகார்மீது நடவடிக்கை எடுக்காமல் போலீஸார் காலம் கடத்தியாகக் கூறப்படுகிறது. இதனால், அன்னபூரணி தரப்பில், கோவை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ஶ்ரீகாந்த், கல்பனா, ரித்தீஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், அவர்கள் மூன்று பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இதையடுத்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் `மக்களின் கவனத்திற்கு...’ என்ற தலைப்பில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.

போஸ்டர்

அதில், `கல்பனா, ஶ்ரீகாந்த், ரித்தீஸ் ஆகியோர்மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதற்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது குறித்து விளக்கம் கேட்க, கல்பனா குடும்பத்தினரைத் தொடர்புகொண்டோம். அவர்கள் நம் அழைப்பை ஏற்கவில்லை.



source https://www.vikatan.com/news/crime/coimbatore-dowry-issue-case-filed-against-astrologer-family

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக