Ad

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

IPL 2021 : இது ரோஹித் Vs கோலி கேப்டன்ஸி மோதல்... அசால்ட் ரோஹித், தவறுகளைத் திருத்துவாரா கோலி?

2021 ஐபிஎல் சீசனின் முதல் போட்டியாக இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரோஹித் ஷர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸும், கோலி தலைமையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளும் மோதுகின்றன. இந்தாண்டு செப்டம்பர் மாதம் டி20 உலகக்கோப்பை நடக்கயிருக்கும் நிலையில் அதற்கு இந்தியாவின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுபெற்றுவருகின்றன. இதற்கிடையே இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளின்போது ரோஹித் ஷர்மாவுக்கு இரண்டு போட்டிகளில் ஓய்வு கொடுத்து உட்காரவைத்த கோலியின் செயல்பாடுகள் விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில்தான் இன்று முதல் போட்டியில் ரோஹித்தும், கோலியும் மோதுகிறார்கள். இதனால் இது மும்பை இந்தியன்ஸ், பெங்களூருவுக்கு இடையிலான மொதல் என்பதைவிட கோலிக்கும், ரோஹித்துக்கும் இடையிலான மோதலாகத்தான் பார்க்கப்படுகிறது.

இதுவரை ஐபிஎல் கோப்பையையே வெல்லாத மூன்று அணிகளில் ஒன்று ஆர்சிபி. இந்த அணிக்கு 2013 சீசன் முதல் கேப்டனாக இருக்கும் கோலி தன்னை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார். மும்பையுடனான முதல் போட்டியை வெல்வதன் மூலம் அணிக்குள் மிகப்பெரிய பாசிட்டிவிட்டியை விதைக்க முடியும். அதற்கு கோலி செய்யவேண்டிய விஷயங்கள் என்ன, ரோஹித் ஷர்மா கோலியை எப்படி எதிர்கொள்வார்?!

1. செலக்‌ஷன்!

ஆர்சிபியின் தோல்விகளுக்குப் பல காரணங்கள் இருந்தாலும் அதில் முதலும் முக்கியமானது டீம் செலக் ஷன். ப்ளேயிங் லெவனில் தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடித்தான் கோட்டைவிடுகிறார் கோலி. ஆனால், இன்றைய போட்டியில் இருந்து ஒரு அற்புதமான டீமை வடிவமைக்க அவருக்கு வாய்ப்பிருக்கிறது. திறமையான பேட்ஸ்மேன்கள், நல்ல பெளலர்கள், அற்புதமான ஆல்ரவுண்டர்கள் என நல்ல காம்போவைக் கொண்டிருக்கிறது ஆர்சிபி. அதனால் ஒரு நிலையான ப்ளேயிங் லெவனை உருவாக்கி தொடர்ந்து அதில் பயணித்தால் மட்டுமே ஆர்சிபி-யால் கோப்பையை வெல்லமுடியும்.

#RCBvMI

2. ப்ளேயிங் லெவன் எப்படி?!

தேவ்தத் படிக்கல் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டதோடு, அவர் நல்ல ஃபார்மிலும் இருப்பதால் அவரோடு கோலி ஓப்பனிங் இறங்கிவிடுவார். 1 டவுனில் ஏபிடி, நம்பர் 4 பேட்ஸ்மேனாக கிளென் மேக்ஸ்வெல், விக்கெட் கீப்பராக கேரளாவின் அதிரடி பேட்ஸ்மேன் முகமது அசாருதின், ஆல்ரவுண்டர் ஸ்லாட்டில் பிக்பேஷ் புகழ் டேனியல் கிறிஸ்டியன், பவர்ப்ளே ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் என்பதுதான் ஆர்சிபியின் பேட்டிங், ஆல்ரவுண்டர் ஸ்லாட்டாக இருக்கும்.

3. பெளலர்கள் யார், யார்?!

பெங்களூரு அணியின் கடந்தகாலத் தோல்விகளுக்கு மிக முக்கியமானக் காரணம் அதன் பெளலிங் யூனிட். இந்தமுறை நியூஸிலாந்தின் கைல் ஜேமிசனை கொண்டுவந்திருக்கிறார் கோலி. அவர் அணிக்கு பக்கபலமாக இருப்பார் என நம்பலாம். ஜேமிசனோடு நவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகியோர் வேகப்பந்துகள் வீச, யுவேந்திர சஹால் ஸ்பின்னராக இருப்பார்.

4. பெளலிங் ரொட்டேஷன்?!

வாஷிங்டன் சுந்தரை பவர்ப்ளே ஓவர்களில் பயன்படுத்தி வெற்றியும் கண்டவர் கோலி. மும்பைக்கு எதிரானப் போட்டியும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சென்னை மண்ணில் நடப்பதோடு, மண்ணின் மைந்தனும் அணியில் இருப்பதால் சுந்தரோடுதான் பெளலிங்கைத் தொடங்குவார் கோலி. சுந்தர், சஹால் என இரண்டு திறமையான ஸ்பின்னர்கள் கோலியிடம் இருக்கிறார்கள். முதல் பாதியில் சுந்தரையும், மிடில் ஓவர்களில் சஹாலையும் அதிகம் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கலாம். டெத் ஓவர்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஜேமிசன், சைனியிடம் கொடுக்கப்படும். அதனால் பவர்ப்ளே ஓவர்களில் சுந்தர், சிராஜ் கூட்டணியை எதிர்பார்க்கலாம். இவர்களோடு மித வேகப்பந்து வீச்சாளரான டேனியல் கிறிஸ்டியன் இருக்கிறார். அவரை மிடில் ஓவர்களில் கோலி பயன்படுத்தக்கூடும். இதன்படி நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு ஸ்பின்னர்கள் என வலுவான பெளலர்களையே கொண்டிருக்கிறது கோலி டீம்.

கோலி

5. பேட்டிங் கன்சிஸ்டன்ஸி!

பேட்டிங் கொலாப்ஸுக்கு பெயர் போன அணி ஆர்சிபி. ஒரு போட்டியில் 200 ரன்களுக்கு மேல் அடிப்பார்கள். திடீரென 49 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆவார்கள். ஆனால், கடந்த காலங்களைப்போல இப்போது ஆர்சிபியின் பேட்டிங் யூனிட் இல்லை. கோலி, படிக்கல், ஏபிடி, மேக்ஸ்வேல், முகமது அசாருதின் என டாப் ஆர்டர் முழுக்க முழுக்க பர்ஃபார்மர்களால் நிரம்பியிருக்கிறது. அதனால் இந்தமுறை பேட்டிங் கன்சிஸ்டன்டாக இருக்கும் என நம்பலாம்.

6. ஓப்பனர் கோலி!

நான்தான் ஓப்பனிங் இறங்கப்போகிறேன் என வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார் கோலி. ஆர்சிபி-க்காக ஓப்பனிங் இறங்கி கடந்தகாலங்களில் பல்வேறு சம்பவங்கள் செய்திருக்கிறார். ஐபிஎல் வரலாற்றில் 5 சதங்கள் அடித்திருக்கிறார் கோலி. இந்த 5 சதங்களுமே கோலி ஓப்பனிங் ஆடி அடித்ததுதான். அதேப்போல் இதில் 4 சதங்களை 2016 ஐபிஎல் சீசனில் அடித்தார். அதனால் 2021 சீசனில் மீண்டும் ஒரு ஆக்ரோஷ ஓப்பனிங் பேட்ஸ்மேன் கோலியைப் பார்க்கலாம்.

7. இளம் திறமைசாலிகள்!

2016 ஐபிஎல் தொடருக்குப்பின் முதல்முறையாக கடந்த ஆண்டுதான் ப்ளே ஆஃபுக்குள் நுழைந்தது ஆர்சிபி. இந்த வெற்றிக்கு மிக முக்கியமானக் காரணம் அணிக்குள் கண்டறியப்பட்ட இளம் திறமையாளர்கள். தேவ்தத் படிக்கல், வாஷிங்டன் சுந்தர், சைனி, சிராஜ், ஜோஷ் ஃபிலிப்பே என பல இளம் வீரர்கள் கடந்தாண்டு சிறப்பாக விளையாடினார்கள். இந்தாண்டு ஃபிலிப்பேவுக்கு பதில் இன்னொரு இளம் நியூஸிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் ஃபின் ஆலன் இணைந்திருக்கிறார். அதனால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளித்து அணிக்கள் நல்ல காம்போவை கோலி உருவாக்குவார் என எதிர்பார்க்கலாம்.

ரோஹித்

8. சிம்ப்பிள் லாஜிக்கில் ரோஹித் ஷர்மா!

தொடர்ந்து ஐபிஎல் கோப்பைகளை வெல்லும் அலுப்பில் இருக்கும் ரோஹித் ஷர்மா, பெங்களூருவை வீழ்த்த மாஸ்டர் பிளான்கள் எதுவும் போடவேண்டியதில்லை. விளையாடும் 11 வீரர்களுமே பர்ஃபார்மர்கள் என கெத்தாக இருக்கிறது மும்பை இந்தியன்ஸ். ரோஹித் ஷர்மா, குவின்டன் டிகாக், சூர்யகுமார், இஷான் கிஷன், பாண்டியா பிரதர்ஸ், பொலார்ட், நீஷம் என அதிரடி பேட்ஸ்மேன்களையும், ஆல்ரவுண்டர்களையும் கொண்டிருக்கிறது மும்பை. கொரோனா க்வாரன்டைன் காரணமாக டிகாக் இன்றுவிளையாடமுடியாமல் போனால் இஷான் கிஷன் ஓப்பனிங் இறங்குவார். அவருடைய ஃபாரின் ஸ்லாட் ஒரு பெளலருக்குப் போகும்.

9. மும்பை பெளலர்ஸ்!

ட்ரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, பொலார்ட், ஹர்திக் பாண்டியா, ஜிம்மி நீஷம் என வேகப்பந்து - மிதவேகப்பந்து பெளலர்கள் 5 பேரை கொண்டிருக்கிறது மும்பை. இதில்லாமல் ராகுல் சஹார் அல்லது ஜெயந்த் யாதவ், க்ருணால் பாண்டியா என இரண்டு ஸ்பின்னர்களும் இருக்கிறார்கள். டிகாக்கு பதில் கூல்ட்டர் நைல் அல்லது ஆடம் மில்னே அணிக்குள் வந்தால் 8 பேர் பெளலிங் போடுவார்கள் என்கிற பெரும்பலத்தோடு இருக்கிறது மும்பை.

10. பேட்டிங்கா, சேஸிங்கா?!

சென்னையில் பனிப்பிரச்னைகள் இல்லையென்றாலும் டாஸ் வென்றவுடன் சேஸிங் செய்யவே இரண்டு அணிகளும் விரும்பும். சென்னை பிட்சும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கும் என்பதால் ஒரு பெரிய ஹை ஸ்கோரிங் போட்டியோடு 2021 ஐபிஎல் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்!



source https://sports.vikatan.com/ipl/mumbai-indians-vs-royal-challengers-bangalore-ipl-2021-match-preview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக