Ad

வியாழன், 8 ஏப்ரல், 2021

``எங்கள் நாட்டில் கொரோனா இல்லை" - அடித்துச் சொல்லும் வடகொரியா; சந்தேகம் கிளப்பும் உலக நாடுகள்!

கொரோனா நோய்த்தொற்று இல்லாத நாடே இல்லை எனும் அளவிற்கு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. நோய் கட்டுப்படுத்துதல், தடுப்பூசிகள் என உலமே பரபரத்து வரும் நிலையில், ``எங்கள் நாட்டில் கொரோனா இல்லை” என்று கூலாக இருக்கிறது ஒரு நாடு!

கொரோனா வைரஸ்

வடகொரியா: தூண்டிலில் சிக்காத திமிங்கலம்!

கொரிய தீபகற்பத்தின் கம்யூனிச நாடு வடகொரியா. அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் அதிபர் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்து சில ஆண்டுகளில், மூன்றாம் உலகப்போர் மூண்டுவிடுமோ எனும் அளவுக்கு உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்பட்ட வடகொரியா, தடையை மீறி அணுஆயுத சோதனைகள் நடத்தி அமெரிக்க வல்லரசுக்கு சவால் விடுத்தது. பின்னர், காலம் கனியவே, அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான கிம்மின் சந்திப்பால் நிலைமை சற்றே தணிந்தது. அவ்வப்போது தனது செயல்களால் உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வந்த வடகொரியா, கொரோனா தொற்றின் காரணமாக இருக்கும் இடம் தெரியாமல் திரைமறைவு வாழ்க்கையை நடத்தி வருகிறது.

அதன் அமைதியைக் கண்டு அவ்வப்போது அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என வதந்திகள் கிளம்புவதும், அதை முறியடித்து கிம் தலைகாட்டுவதும் உண்டு.

இந்நிலையில் கடந்த ஓராண்டாக எங்கள் நாட்டில் கொரோனா தொற்று இல்லை, வைரஸால் யாரும் பாதிப்படையவில்லை என தொடர்ந்து உலக சுகாதார அமைப்பிடம் கூறி வருகிறது வடகொரியா.

கொரோனா ஆரம்பக்கால ஆட்டத்தில் வடகொரியா:

கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே மிகத்தீவிரமான கட்டுப்பாடுகளை விதித்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டது வடகொரியா. சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான தனது எல்லைகளை மூடியது, அரசுமுறைப் பயணங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்தது, வெளிநாடுகளிலிருந்து வடகொரியா திரும்பிய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தனது நாட்டுமக்களை தனிமைப்படுத்தி கண்காணித்தது. இவற்றையெல்லாம் உற்றுநோக்கும் போது வடகொரியா சொல்வதில் உண்மை இருப்பதுபோன்று தோன்றினாலும் இல்லை என மறுக்கிறார் எட்வின்.

வடகொரியா

``டேட்டா இல்லை அதனால் கொரோனா இல்லை”:

உலக சுகாதார அமைப்பின் வடகொரியாவுக்கான பிரதிநிதியாக இருக்கும் எட்வின் சால்வடார் (Edwin Salvador), `தி அசோசியேட் பிரஸ்' (The Associated Press) செய்தி நிறுவனத்துக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ``வடகொரியாவில் 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி 23,121 பேரை தனிமைப்படுத்தி, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின் தொற்று இல்லை என்று உறுதியானதும் அரசால் விடுவிக்கப்பட்டனர். ஆனால் 2020 மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதிவரை பரிசோதனை செய்யப்பட்ட 732 பேருக்கான சோதனை முடிவுகளை அரசு வெளியிடவில்லை” என்றார். மேலும் ``இதுவரையில் எத்தனைபேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், எத்தனை பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது போன்ற எந்தத் தகவலையும் எங்களிடம் (உலக சுகாதார அமைப்பிடம்) அரசு கூற மறுக்கிறது” என்று அதில் தெரிவித்திருக்கிறார்.

உண்மையில் என்ன நடக்கிறது வடகொரியாவில்:

உலகின் மிகப்பெரிய ராணுவத்தில் ஒன்றான கொரிய ராணுவம் கிட்டத்தட்ட பத்து லட்சம் ராணுவ வீரர்களை கொண்டிருக்கிறது. இருப்பினும் ``முறையான இருப்பிட வசதிகளோ, சத்தான உணவுப்பழக்க வழக்கங்களோ இல்லாமல் கொரிய ராணுவ வீரர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன்னிருக்கிறார்கள். இதுபோன்று நோய் எதிர்ப்புசக்தி திறன் குறைந்த, எல்லையில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருந்தால் அது வட கொரியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். எனவே வடகொரியா தனது பலவீனத்தை மறைப்பதற்காகவே கொரோனா பரவல் இல்லை என்று கூறுகிறது" என வடகொரிய ராணுவத்தில் இருந்து வெளியேறிய ராணுவ வீரர் ஜுங் ஹானேயில், VAO எனும் பத்திரிகைக்கு கொரோனா பரவிய ஆரம்பகாலத்திலே தனது சந்தேகத்தை பதிவு செய்திருந்தார்.

Also Read: வட கொரியா: கொரோனா தடுப்பூசி குறித்த தகவல்களைத் திருட முயன்றதா கிம் ஜாங் உன் தேசம்?!

மேலும், கொரோனா இல்லை என்று சொல்லும் வடகொரியா கடந்த பிப்ரவரி மாதம் வரை சுமார் 19 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை ஐ.நா-வின் கொரோனா நோய் தடுப்புத் திட்டத்தின் மூலம் பெற்றிருப்பதாக ஐ.நா. தெரிவிக்கிறது. கொரோனா அச்சம் காரணமாக, வருகிற ஜூலை 23-ம் தேதி ஜப்பானில் நடைபெறும், ஒலிம்பிக் போட்டியிலும் கலந்துகொள்ளப் போவதில்லை என நேற்று தெரிவித்திருக்கிறது வடகொரியா.

போதிய சுகாதாரக்கட்டமைப்பு வசதிகள் இல்லாத வடகொரியாவில் கொரோனா இல்லை என்று சொல்வதை பெரும்பாலான உலக நாடுகள், நம்பத்தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.



source https://www.vikatan.com/news/healthy/corona-free-north-korea-says-kim-jong

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக